கார்க்கியின் பார்வையில்

பொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…!

முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.

மனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

இலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் காட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.

மைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்? ‘சாதிபுத்தி’ என்று சொல்லலாமா?

சுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி மோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா? பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா? தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா?

இவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீறலைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம்? சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.

இது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..

இக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள்? இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.

தோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

தோழர் மினர்வாவின் பதிவு – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

|| கார்க்கி ||

பிப்ரவரி 21, 2011 Posted by | Alppaigal, சாதி வெறி, பதிவர் வட்டம், போலி கருத்துரிமை | , | 9 பின்னூட்டங்கள்

ஈரல்..!

“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு

“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.

ரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள  இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.

ரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.

சரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.

“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்”  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.

“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”

நின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.

குமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.

“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்?” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.

“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”

“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்  

“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”

“சரிடா.. நான் போறேன்”

ரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.

ஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.

“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”

அந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது.  அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.

“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா? அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு?”  அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.

அன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.

 மிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி.  அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.

ஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.

மாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.

பொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு  நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.

 ரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.

___________________________________________________________________________________________

க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்

 “டேய் பய்யா,  ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே?”  திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.

“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.

பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா? நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.

அங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.

வீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.

ரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

பூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”

வேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.

“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.

ரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.

பூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய  முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.

வேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்

__________________________________________________________________________________________ 

 இரவு.

சிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.

வேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.   

சின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.

வேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –

“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”

சின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.

ஜனவரி 7, 2011 Posted by | சாதி வெறி, சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி, culture | , , , | 3 பின்னூட்டங்கள்

மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

“சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.

நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.

“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.

கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.

“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.

பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.

“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..

“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..

“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க”என்று அதட்டலாய் ஒன்று…

“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..”என்று மிரட்டலாய்…

“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…

“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..”  அதட்டலாய்…

“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…

“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…

முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.

குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம்.  கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.

வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.

அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.

பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.

மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.

அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.

“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை

அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர்.  அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.  

முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.

” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”

“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”

“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”

தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது.  முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.

குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.

திசெம்பர் 23, 2010 Posted by | புனைவு, புனைவு முயற்சி, culture, short story | 11 பின்னூட்டங்கள்

எந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்?

நேற்றுத்தான் எனக்கு எந்திரனை தரிசிப்பதற்கான பெரும் பேறு வாய்க்கப்பெற்றது. நல்ல பிரிண்ட். நன்றி மலேசியா.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் – ரஜினியின் ரசிகப்பெருமக்களே, உங்களோடு மல்லுக்கட்டுவது இப்பதிவின் நோக்கம் அல்ல அல்ல அல்லவே அல்ல. ஏற்கனவே இப்படத்தின் வியாபார ஏகபோகத்தனத்தை விமர்சித்தும், இப்படத்தை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதன் பின்னுள்ள வக்கிரம் குறித்தும், ரஜினி என்கிற நமுத்துப் போன பட்டாசை விமர்சித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றுள் உங்களுக்காக நான் பரிந்துரைப்பது வினவு கட்டுரைகளை. இன்னொரு பக்கம் ரஜினியின் ரசிகர்களால் படத்தின் இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியேறி – “தமிழேன்ண்டா…” பாணி விமர்சனங்களும் வலைப்பூக்களில் நிறையவே இறைந்து கிடக்கிறது. எனவே அந்த எல்லைக்குள் நான் நுழையவேயில்லை. அதற்கு வெளியே இந்தத் திரைப்படம் குறித்து சொல்ல எனக்குச் சில விடயங்கள் உள்ளன. எனினும், எந்திரனை முன்வைத்து எனது உரையாடல் இருக்கப்போவதால், படத்தைப் பற்றிய எனது சுருக்கமான விமர்சனத்தை மட்டுமே வைக்கிறேன்.

நீங்கள் இப்போது கண்களை மூடிக் கொண்டு தமிழ்த் திரைப்படத்தின் கருப்பு வெள்ளை காலத்துக்குச் செல்லுங்கள். விட்டலாச்சார்யாவின் ஒரு திரைப்படம். பெயர்….? ‘பரஞ்சோதியும் பாசக்கார பூதமும்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சுந்தராபுரி என்கிற ஒரு தேசத்தில் பரஞ்சோதி என்கிற ஒரு நல்லவன் இருக்கிறான். அவன் தான் நம்ம ஹீரோ. அவனிடம் ஒரு பூதம் இருக்கிறது. அது ஒரு நல்ல பூதம். பூத உலகில் இருக்கும் மற்ற குட்டி பூதங்களையெல்லாம் விட சிறந்த பல சக்திகளைக் கொண்ட பூதம். அந்தக் கதையில் வில்லன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவனிடம் இருக்கும் பூதங்கள் சோப்ளாங்கி ரக பூதங்கள். அவன் எப்படியாவது ஹீரோவிடம் இருக்கும் நல்ல பூதத்தைக் கவர்ந்து விட முயல்கிறான். அதன் வல்லமையை வைத்து தானே அந்த தேசத்தின் அரசனாகி விட நினைக்கிறான். பரஞ்சோதியின் பூதத்தை எப்படியோ ஏமாற்றிக் கவர்ந்து விடும் வில்லன், நாட்டில் பல அக்கிரமங்களைச் செய்யத் துவங்குகிறான். பரஞ்சோதியும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் ஒரு குட்டித் தீவில் ஒரு தங்கக் கூண்டில் வசிக்கும் கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் கெட்ட மந்திரவாதியின் உயிரை எடுத்து பாசக்கார பூதத்தையும் நாட்டையும் காப்பாற்றுகிறான். அவன் அந்த முயற்சியின் இருக்கும் போது பரஞ்சோதியின் காதலி கெட்ட மந்திரவாதியின் கவனத்தை தன்பால் ஈர்த்து வைத்திருக்க ‘என் மணாளா…… என் கண்ணாளா…ஆஆஆஆ…” என்று ஒரு பாடலைப் பாடி பரதநாட்டியம் ஆடுகிறார். 

நீங்கள் இப்போது ஒரு முப்பதாண்டுகள் முன்னேறி வருகிறீர்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் வருடம். ஈஸ்ட்மென் கலரில் ஒரு ஏவிஎம் திரைப்படம். பெயர்…..? ‘தாயே தெய்வமே’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் ஹீரோ ஜெய்சங்கர் ஒரு யானை வளர்க்கிறார். அது பலம் பொருந்தியது. அது நல்ல பல காரியங்களைச் செய்கிறது. இதில் வில்லனாக வரும் அசோகன், அந்த யானையை எப்படியாவது ஜெய்சங்கரிடம் இருந்து கவர்ந்து அதை ஸ்மக்லிங் (கோல்டு பிஸ்கோத்து) செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நல்லவிதமாகக் கேட்டுப் பார்த்து தராத ஜெய்சங்கரிடம் இருந்து அந்த யானையை எப்படியோ கவர்ந்து விடும் வில்லன், அதை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். ஜெய்சங்கர் சும்மா இருப்பாரா…? வட்டமாக கவ்பாய் தொப்பி மாட்டிக் கொண்டு, முதுகுக்குப் பின்னே இரட்டைக் குழல் துப்பாக்கியும், இடையில் இரண்டு
ரிவால்வரும் பொருத்திய பெல்டையும், மார்புக்குக் குறுக்கே தோட்டா பெல்ட்டையும் வரிந்து கட்டிக் கொண்டு வில்லனைத் தேடி போகிறார். அவருக்க்கு பக்க வாத்தியமாக டைட் பேண்ட் மாட்டிய ஹீரோயினும் பாங்கோ டிரம்ஸுடன் எம்.எஸ்.விஸ்வநாதனும் கூடவே வேறு குதிரைகளில் போகிறார்கள். எம்.எஸ்.வி டிரம்ஸ் வாசிக்க, ஹீரோயின் வில்லன் முன் ஒரு கிளப் டேன்ஸ் ஆடும் சைக்கிள் கேப்பில் யானையை மீட்டுவிடும் ஜெய்சங்கர், வில்லனைக் கொன்று யானையைத் திருத்துகிறார். சுபம்.

போதும் போதும்.. கண்ணைத் திறந்து தொலையுங்கள்.

இப்போது இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு. எந்திரன் விமர்சனம் கீழே –

பரஞ்சோதி = ஜெய்சங்கர் = வசீகரன் (ரஜினி)
பாசக்கார பூதம் = பாசக்கார யானை = பாசக்கார எந்திரன் (சிட்டி)
கெட்ட மந்திரவாதி = கெட்ட அசோகன் = கெட்ட விஞ்ஞானி (வில்லன்)
ஹீரோயின் = ஹீரோயின் = ஹீரோயின் (ஐசுவரியா -அலைஸ் – ஒலக அழகி)
மணாளனே…. = கிளப் டான்ஸ் = அரிமா அரிமா
ஊஊஊ… = டிடும் டடும் குடும் (MSV) = ஷக் திக் ஷக் ஹூக் ஹிக் ஹாஆஆங்ங் (AR.Rahman)
மாடர்ன் தியேட்டர்ஸ் = ஏ.வி.எம் = கலாநிதி மாறன்
விட்டலாச்சார்யா = ஆர்.சுந்தரம் = ஷங்கர்

எந்திரன் விமர்சனம் முற்றிற்று.

வேற எந்த வெங்காயமும் என் கண்களுக்குப் புலப்படாமல் போனதற்கு என் கண்களின் கோளாறே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இந்தத் திரைக்காவியத்தை தமிழ் திரைப்படங்களின் உச்சம் என்றும், ஹாலிவுட்டுக்கே விடுக்கப்பட்ட சவால் என்றும் எழுதப்படும் கட்டுரைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. பொதுவில் சாதாரண இரசிகர்களின் கண்ணோட்டமும் அப்படியே இருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு. முதலில் நவீனம், முன்னேற்றம், வளர்ச்சி என்பதை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் இருக்கும் கோளாரு தான் இத்திரைப்படத்தின் தொழில் நேர்த்தி நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கத்தின் காரணம். கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை – நாம் இந்த நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொஞ்சம் அறுத்துப் பார்த்து விட்டு திரும்ப எந்திரனுக்கு வருவோம்.

இந்தியாவில் எதில் நவீனம் இல்லை? எல்லாமே நவீனம் தானே…. விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போமே. நிலத்தை உழ டிராக்டர். களை புடுங்க மிஷின். கதிர் அறுக்க மிஷின். கதிர் அடிக்க மிஷின். தென்னை மரம் ஏறக்கூட மிஷின் வந்து விட்டதாம். போக்குவரத்து வாகனங்கள் என்று பார்த்தால்… அலுங்காமல் குலுங்காமல் சாலையைத் தழுவிக் கொண்டே ஓடும் வோல்வோ பஸ்கள் வந்தாயிற்று, நெடுஞ்சாலைகளைக் கிழித்துப் பறக்கும் ஹார்லி டேவிட்சன் இருக்கிறது, ஆவ்டி கார்கள், பி.எம்.டபிள்யூ கார்கள்… சரி நம்ம இராணுவத்தைப் பார்ப்போமே.. ஒலியை விட வேகமாய் பறக்கும் நூற்றுக்கணக்கான சுகோய் Su-30 MKI ரக போர் விமானங்கள், ஒலியை விட வேகமாய் பறந்து தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், தாக்கி விட்டு ஒளிந்து கொள்ளும் விசேடமான டாங்கிகள், அடுத்த தலைமுறைக்கான யுத்த தளவாடங்கள்…. இன்னும் கணினிகள், மூன்றாம் தலைமுறை அலைவரிசை
சேவைகள், செல்போன்கள், ஜட்டிகள், பனியன்கள்..

இதெல்லாம் நவீனமோ, வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை என்கிறேன்..

‘அடப் போங்க சார்… இத்தினி இருந்தும்… நீங்க என்னடான்னா இன்னும் பழைய பல்லவியையே பாடறீங்களே..’ என்கிறீர்களா? ஒரே ஒரு கேள்வி. இத்தனை ஆள் அம்பு யானை சேணையெல்லாம் இருக்கே…. அப்புறம் ஏன் பாகிஸ்தான் லொள்ளு பண்ணும் போது திருப்பி அடிக்க முடியாம அமெரிக்கா கிட்ட ஓடுறாங்க? புள்ளியியல் ரீதியில் பார்த்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு போர் என்று வந்தால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடுமாம். இந்தியாவின் எண்ணிக்கை பலம் அப்படி. ஆனா முடியலையே… ஏன்? நீங்க என்பதுகளில் வரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன் ஸ்டைலாக ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து பைப் புகைத்துக் கொண்டிருப்பான். அவன் அடியாட்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் பாடிபில்டர்களாக இருப்பார்கள். பயில்வான் தான்.. வஸ்தாது தான்… எல்லாம் தெரியும் தான்… ஆனா சுயமா அடிக்க முடியாதே…. அது தான் இந்தியா.

ஆக, கருவிகளில் வரும் மாற்றங்களைக் கொண்டு மட்டும் நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளவிடுதாக இருந்தால் இந்தியா வஸ்தாது தான் – எந்திரன் ஹாலிவுட்டுக்கு
சவால் தான். ஆனால், அந்த மாற்றத்தை எந்தவகையில் பயன்படுத்துகிறோம், அது நம் சிந்தனையில் எவ்வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கருவிகளிலான (தொழில்நுட்பம்) மாற்றம் வாழ்நிலையில் எவ்வாறான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் தான் நமக்கு முழு சித்திரமும் கிடைக்கும். கணினிகளை ஜோதிடம் பார்க்கவும், வேறு ஒரு நாட்டுக்கு கணக்கெழுதித் தரவும் மட்டும் பயன்படுத்தி விட்டு என் கிட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு அதனால நானும் ரவுடி தான் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தான் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

ஒரு நவீன ஹாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் எந்திரனிலும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம்.
2004ம் ஆண்டு வெளியான ஐ.ரோபாட் மற்றும் 2009ம் ஆண்டு வெளியான சர்ரோகேட்ஸ். இரண்டிலும் மனிதனுக்கும் இயந்திரப் பயன்பாட்டிற்கும் இடையில் எழும் முரண்பாட்டை
பிரதானமாய்க் கையாளுகிறார்கள். மனிதனுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்படும் இயந்திரங்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்கும் திறனையும் பெற்று ஆதிக்க நிலையை அடைகிறது.
இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் மனித வேட்கைக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே நிகழும் முரண்பாட்டைக் காணலாம். இவ்விரு திரைப்படங்களும்
கூட அமெரிக்க மசாலாத்தனம் கொண்ட வணிகக் குப்பைகள் தான். அதிலும், அவர்கள் குறிவைக்கும் வணிக இலக்கு என்பது எந்நேரமும் அச்சத்திலிருக்கும் சராசரி அமெரிக்கர்களின் உளவியல்.

அமெரிக்கர்களின் இந்த அச்சத்தின் வெளிப்பாடுகளை அவர்களது வெகுசன வணிக சினிமாக்களில் காணலாம். ஒரு பல்லி திடீர் என்று பெரிதாகி ஊருக்குள் புகுந்து விடுவது (கோட்ஸில்லா) , ஒரு பழங்காலப் பிராணி திடீரென்று உயிர்பெற்று ஊருக்குள் புகுந்து விடுவது (ஜுராசிக் பார்க்).. அயல்கிரகத்து மனிதர்கள், வினோதமான பூச்சிகள், வினோதமான கடல் உயிரினங்கள்… என்று அம்புலிமாமா தரத்திலான கற்பனையில் கொஞ்சம் தொழில்நுட்பத்தைக் கலந்தால் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக் பஸ்ட்டர் தயார். இந்த வணிக சினிமா சூத்திரத்தினுள்ளும் கூட அவர்கள் தமது மக்கள் வாழ்வின் மேல் கொண்டிருக்கும் அச்சத்தையே அச்சாரமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். ஆனால் எந்திரன் ஒரு சராசரி இந்தியனின் பாமரத்தனமான கற்பனையளவுக்குக் கூட – அதாவது ஒரு கந்தசாமியின் அளவுக்குக் கூட – கதைக்களனுக்காக மெனக்கெடவில்லை. அப்படியே விட்டலாச்சார்யாவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கொண்டு வந்துள்ளார்கள்.

கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.

ஒரு டெரா பைட் வேகமும் ஒரு ஸெட்டா பைட் நினைவுத் திறனும் கொண்ட எந்திரன் என்ன செய்கிறான்? மருதாணி வைக்கிறான். ஸ்டைலாக நடந்து தன் இடுப்பில் கைவைக்கிறான். நாயகியைக் காப்பாற்ற பொறுக்கிகளின் மூஞ்சியில் கை வைக்கிறான். பாட்டுப்பாடி பரதநாட்டியம் ஆடுகிறான். கருநாடக சங்கீதம் பாடுகிறான். மருத்துவச்சி வேலை செய்கிறான். மொத்தத்தில் முதல் பாதியில் எந்திரன் மயிலாப்பூருக்கும் நங்கநல்லூருக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறான். இரண்டாவது பாதியில் நிறைய பேரைக் கொல்கிறான், ஹீரோவின் டாவு மேலேயே கண் வைக்கிறான். இந்த ரெண்டாவது காரணம் ஒன்று போதாதா? ஒரு மருவை ஒட்டிக் கொண்டு வில்லனின் கோட்டையில் புகும் ஹீரோ, நாயகியை வில்லன் முன் டான்ஸ் ஆட வைத்து அந்த கேப்பில் ஜெயித்து விடுகிறான்.

இது தான் ஹாலிவுட் தர கற்பனையா? இதே இருநூற்றம்பது கோடியைத் தூக்கி இராம நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிட அருமையான ஒரு படத்தை எடுத்திருப்பார்.

எனக்கு ஹாலிவுட் திரைப்படமான அவதார் நினைவுக்கு வந்தது. அதில் தொழில்நுட்பத்தின் மேண்மைக்கும் அதன் உருவாக்க நேர்த்திக்கும் கிடைத்த பாராட்டு என்பது அது எப்படி எதன் மேல் கையாளப்பட்டது என்பதைக் கொண்டே கிடைத்தது. அது ஒரு அந்நிய தேச திரைப்படம் தான். ஒரு அமெரிக்க வெள்ளையரின் கற்பனை தான். ஆனாலும் கூட அது நம்மிடம் ஏதோவொன்றைச் சொன்னது. நமது சமகாலத்தின் நிகழ்வுகளின் மீதான நமது கோபத்தை அது மீட்டியது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் தங்களை அந்த கிராபிக்ஸ் பொம்மைகளிடம் கண்டார்கள். இன்காக்கள், மாயன்கள், ஆப்ரிக்கக் கருப்பர்கள் தொடங்கி இன்றைய கோண்டுக்கள் வரையிலான பூர்வகுடி மக்களை பண்டோரா கிரகத்து மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவதாரின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு நின்றது – துருத்திக் கொண்டிருக்கவில்லை.

நம்மிடமும் கணினிகள் இருக்கிறது தான். அது கணினியின் வேலையைச் செய்யவில்லை – கிளியின் வேலையைச் செய்கிறது

அன்றைக்கு ஆர்.எஸ் மனோகரிடம் தொழில் நுட்பம் இருந்தது. எம்.ஆர்.ராதாவிடம் அது இல்லை – அதைவிட ஆயிரம் மடங்கு வீரியமான நவீனமான சிந்தனை இருந்தது. இன்று ஆர்.எஸ் மனோகராக ஷங்கர் இருக்கிறார்.. ஆனால் ஒரு எம்.ஆர்.ராதா இல்லை. அப்படி ஒருவர் தோன்றுவதற்கான வாய்ப்புகளை சன் குழுமத்தின் வியாபார ஏகபோகம் ஏறத்தாழ ஒழித்துக் கட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

– to be contd….

ஒக்ரோபர் 8, 2010 Posted by | Alppaigal, எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், medias | , | 21 பின்னூட்டங்கள்

நதியின் மடியில்…!

முடிவற்று நீண்ட
அந்த நாளின் இடையில் நான்
அந்த நதியைக் கண்டேன்…
அதன் மூலத்தைக் கண்டேனில்லை நான்..
அதன் முடிவையும் காணேணோ அறியேன்
துவக்கமும் இலக்கும் அற்று
வழிந்தோடும் நதி…
செல்லும் தடந்தோறும் கண்டவற்றையெல்லாம்
தனக்குள் வரித்துக் கொண்டோடும் நதி..
கரைகள் அற்ற
திசையென்று ஏதுமற்று
வேகமாயும் வேகமற்றும்
ஆழமாயும் ஆழமற்றும்
தானே தன் பாதையைப் பற்றியோடும்
நதியின் மடியில் நான் அமர்ந்தேன்….

நிறைய தண்ணீர்..
தனதாற்றலைத் தானேயறியாத 
ஒரு பெண்ணின் உடல் போல்
வளைந்து நெளிந்து
சுழித்துப் புரண்டு
காமுற்ற அரவமாய்
இரையை நெருங்கிய வேங்கையாய்
வன்மையுமாய் மென்மையுமாய்
வனாந்திரங்களையும் வெட்டவெளிகளையும் தின்று
தரைமேல் படர்ந்து செல்லும் நதி
ஒரே நேரத்தில் பேரரசி போலும்
பிச்சைக்காரி போலும் நடந்து செல்கிறது…

ஆதியில் நாகரீகங்களைப் பெற்றெடுத்த
அதன் கருவறையில்
அமிலத்தின் நெடி காரமாய் –
விகாரமாய் வீசிற்று..
தன்னால் செழித்துக் கொழித்தவைகள்
இன்று தன்னாலேயே வாடிச் சாவதைக்
கண்டு நதி வடித்த கண்ணீர்
பத்து ரூபாய்க்கு விலை போகிறது..
வரப்புகளின் மடைகளில் மன்வெட்டிக்
கொத்தலின் இனிய முத்தங்களெல்லாம்
இனி பழங்கனவு தானோ…
துள்ளி விளையாட வயலும் வரப்புமில்லை…
விளையாட்டைக் கண்டித்து மடை கட்ட
விவசாயியுமில்லை.. 
செம்மண் திப்பி கலந்த அதன் சிவந்த
நிறத்தை உறிஞ்சியெடுத்த அமெரிக்க
இயந்திரத்தின் மலவாயிலிருந்து
நிறமிழந்து ஒரு ப்ளாஸ்டிக் புட்டியிடம்
தன் சுதந்திரமுமிழந்து நிற்கும் சோகம்

வழியும் கண்ணீரோடு நின்ற என்னிடம்
மொழியும் வார்த்தைகளும் அற்று
வெறும் சப்தங்களாய் மதோடு
பேசிச் சென்றாள் அந்தத் தாய்..

“ஓ என் பிள்ளாய்…
என் மடியினின்றும் விலகிச் செல் நீ..
எதை வேண்டி வந்தாய் இன்று..?
உனக்களிக்க ஏதுமில்லை என்னிடம்..
இந்த வனமும் எனதில்லை..
இந்த நீரும் எனதில்லை..
இந்த மீன்களும் எனதில்லை..
நானே எனக்கில்லாத ஓர் நாளில்
எனை நாடி ஏன் வந்தாய்..?
இப்போதே விலகிச் செல் நீ…

அள்ளித் தந்த எனையே
அள்ளிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
என்னில் பிறந்து
என்னில் தவழ்ந்து
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகளே என்னைக்
களவாடிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
பிறந்த மலையும் விலை போனது
வாழ்ந்த பூமியும் விலை போனது
சேரும் கடலும் விலை போனது
நானும் விலை போய் விட்டேன் என் பிள்ளாய்…
ஏதுமற்ற இடத்தில் எதைத்
தேடி வந்தாய் என் பிள்ளாய்…
இருளில் தொலைத்ததை நீ
வெளிச்சத்தில் தேடுகிறாய்…
சோம்பி அமரும் நீ வேண்டாமெனக்கு
இப்போதே விலகிச் செல் நீ…
உன் கண்ணீர் வேண்டாமெனக்கு
என் மலை வேண்டும்
என் வனம் வேண்டும்
என் நிலம் வேண்டும்
என் வரப்பு வேண்டும்
என் கடல் வேண்டும்..
மீட்டுத் தருவாயா என் பிள்ளாய்…?”

சலசலக்கும் சப்தங்களினூடே
ஒரு சோக ராகமும் சில பறைகளின்
ஒலியும்…
செம்மண் திப்பிகளின்றிச் சிவக்கிறது
நதி…
இனி கண்ணீரில்லை…!

செப்ரெம்பர் 16, 2010 Posted by | கவிதை, புனைவு | , | 2 பின்னூட்டங்கள்

எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!

சனிக்கிழமை மாலை நன்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்ற நேரமாகப் பார்த்து மொத்த குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எகிறிக் குதித்து விடும் கொலைவெறியோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவே நானும் ஆர்வத்தோடு என்ன நிகழ்ச்சி என்று கவனிக்க ஆரம்பித்தேன். அது எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நடிகை “ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் படையோடு வந்து கேதாரத்தைக் வென்றனர் தமிழர்கள்; இப்போது மீண்டும் மனங்களை வெல்ல எந்திரனாக வந்துள்ளனர்” என்று ஏதேதோ பில்டப் கொடுத்து நிகழ்ச்சியை இனிதே ஆரம்பித்தார்.

தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர்களும் இன்னபிற அல்லுசில்லுகளும் தமக்கு பெரிய நகம் இருப்பதையும் சொரிந்து விடுவதில் தமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியவாறே இருந்தனர். பெரும்பாலும் எல்லோரது பேசு பொருளின் நாயகனும் மேடையின் கீழே பத்தாயிரம் வருடம் வாழ்ந்து வரும் இமயமலை பாபாவிடம் கற்றுக் கொண்ட மோன தவத்தில் அமர்ந்திருந்த ரஜினி தான் என்பதை இங்கே குறிப்பிடத்தேவயில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கிழண்டு போன காலத்தில் நடித்த திரைப்படங்களில் தமது சூப்பர் பவர் இமேஜையோ நடிப்புத் திறமையையோ நம்பியதை விட அன்றைக்கு புதிதாய் திரையுலகிற்கு வந்த இளவயது நாயகிகளின் தொடையையும் மார்பையுமே நம்பியிருந்த அதே அவலமான நிலைக்கு ரஜினி காந்தும் வந்து விட்டதை அவ்வப்போது காட்டிய டிரெய்லர் காட்சிகளில் உணர முடிந்தது.

ரஜினியின் வழக்கமான உத்திகளான அரசியல் கண்ணாமூச்சி, பஞ்சு டயலாக் சவடால், தலையைச் சொரியும் கிறுக்குத்தனங்கள் போன்றவை இனிமேல் தனது இரசிகர்களிடம் செல்ப் எடுக்காது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். பாபா பட வெளியீட்டு சமயத்தில் ஓவர் டோ சாகிப் போன ஆன்மீகவாதி வேடமும் எருமைக்கு பவுடர் அப்பிய கதையாக பல்லிளிக்க ஆரம்பித்து விட்டதால் அவரது இப்போதைய நம்பிக்கை ஓவர் பில்டப்பும் ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களும் தான். ஷங்கரும் லேசுபட்டவரல்ல.. கம்யூட்டரையே சோசியக் கிளியாக்கி விட்ட மக்கள் கூட்டம் தான் தனது டார்கெட் ஆடியன்ஸ் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். தொப்பையின் படம் வரைவது, தார் ரோட்டில் பட்டுப்புடவை டிசைன் வரைவது போன்ற உயர்ரக கலாரசனை கொண்டவர். அவரது மூளையில் உதிக்கும் இது போன்ற புதுமையான கற்பனைகளுக்கெல்லாம் கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் துணை இருக்கும் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன.

இந்தப்படம் இயந்திர மனிதன் சம்பந்தப்பட்டது என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலமும் முன்னோட்டக் காட்சிகளின் மூலமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹாலிவுட் திரைப்படங்களோடு போட்டியிடும் திறமை கொண்டவர் என்று போற்றப்படும் ஷங்கரும், கிழண்டு ஓய்ந்து போன ரஜினியின் இன்றைய பரிதாப நிலையையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயமாக உலக அழகியோடு ரோபாட் போடும் குத்து டான்சு ஒன்று படத்தில் இடம் பெரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய தேதியில் அஜித் விஜய் போன்ற லுச்சா பயல்களே திரையில் தமது காதலியைப் பார்த்து “நான் நடந்தா அதிரடி, நான் ஆய் போகலைன்னா குசு வெடி” என்று காதல் மொழி பேசும் போது, வைரமுத்து போன்ற வார்த்தை வியாபாரியையும், ஹாலிவுட்டிலேயே தேங்காய் மூடிக் கச்சேரி நடத்தி வந்திருக்கும் ரகுமான் போன்ற ஹைடெக் பாகவதரையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? “இவன் பேர் சொன்னதும் நிலவும் தரைதட்டும், அடி அழகே உலகழகே இவன் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்” என்கிற காதல் ரசம் சொட்டும் இலக்கியத்தரமான கவிதை வரிகளைக் கேட்க முடிந்தது.

ரொம்ப காசு கொழுப்பு இருக்கிறவனெல்லாம் காதலியைக் கொஞ்சும் போது கூட பில்டப்போட தான் கொஞ்சுவானுக போலிருக்கு. பாவம் அந்தக் காதலிகள். கர்த்தாவே நீர் அவர்களுக்காகவும் மனமிரங்கும்.

விடாது கறுப்பு…!

எல்லா சொரிஞ்ஞர்களும் சொரிந்து முடிந்த பின் கடைசியாக தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். ஒரே கல்லில் அதிகபட்சம் எத்தனை மாங்காய் அடிக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கமாகக் காட்டினார். பேரனின் சன்பிக்சர்ஸ் செய்து வரும் செம்மொழிச் சேவையை பாராட்ட வேண்டும், ரஜினியைப் புகழ்ந்து அவரது ரசிகர்களை கவர் செய்ய வேண்டும், ரகுமானைப் புகழ்ந்து அவரது ரசிகர்களையும் கவர வேண்டும், மொத்தமாக தமிழர்களுக்கு குச்சி ஐஸ் விற்க வேண்டும், இத்தனையையும் தாண்டி திராவிட இயக்கத்தின் சமீப காலத்திய அரசியல் பண்பாட்டின் படி ‘கல்யாண வூட்லயும்…..; எளவூட்லயும்…..’ எனும் தத்துவத்தை நிலைநாட்டியாக வேண்டும். ஒரே பந்தில் நாலு சிக்ஸர் அடிக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் தான் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினார்.

ஆரம்ப வாக்கியத்திலேயே அவர் மற்ற சொரிஞ்ஞர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதையும் தான் அகம் புறம் எனும் இலக்கிய எல்லைகளில் கரைகண்டவர் என்பதையும் நிறுவிக் காட்டிவிட்டார். புறத்தில் சொரியும் அதே நேரத்தில் அகத்தையும் சொரிந்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அண்ணாவின் இதயத்திடம் இளவல் கற்றுக் கொண்ட அரசியல் ட்யூஷன்.  புரியும் விதமாகச் சொன்னால் ஒரே நேரத்தில் அடுத்தவனைப் பாராட்டியது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னையே பாராட்டிக் கொண்டது போலவும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவர் வீசிய கூக்ளி கீழ்கண்ட விதமாக வெளிப்பட்டு தமிழர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தது – “ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் நான் எந்திரன் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”

“தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் மலேசியாவுக்குப் போய் ஒளிந்து கொண்டால் மட்டும் நான் சும்மா விட்டு விடுவேனா அங்கேயும் வந்து ஆட்டையைக் கலைப்பேன்..” என்பது போல் இருந்தது அவர் தொடர்ந்து சொன்ன வாழ்த்துச் செய்தி. ஏற்கனவே அந்த அரங்கில் மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்திருக்கும்; ஆனாலும் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபா கற்றுக் கொடுத்த யோக சாதனைகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார். கஞ்சாவுக்கு இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது எனும் பேருண்மை முந்தாநேற்று தான் எனது சிறு மூளைக்கே எட்டியது.

எல்லோரும் கண்டிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.

படத்தின் பட்ஜெட் நூற்றம்பது கோடி என்றார்கள் சிலர். இருநூறு கோடி என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளையின் மதிப்பு அத்துனையென்றால் கறுப்பின் மதிப்பு எத்தனை இருக்கும் என்பதை யோசித்தால் லேசாகக் கிறுகிறுப்பே ஏற்படுகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட்டிற்கு கோலிவுட் விடுத்துள்ள சவால் தான். ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஏப்பை சாப்பைகளெல்லாம் ஷங்கரின் தொழில்நுட்ப அறிவுக்கு முன் இனி பிச்சையெடுக்க வேண்டியது தான். இல்லையா பின்னே நவீன தொழில் நுட்பத்தை வைத்து அவனெல்லாம் பண்டோரா கிரகத்தை தான் உருவாக்கினான் – நம்மாளுக மாதிரி (எந்திரன்) சிட்டி டான்ஸ் எடுக்க முடியுமா? தொப்பைல அந்த தொங்கிப் போன சொங்கியோட மூஞ்சியத்தான் வரைய முடியுமா? என்ன ஒரே குறைன்னா… இந்த விஷயத்துல ஷங்கர் தனது முன்னோடியான இராம. நாராயணனுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்திருக்கலாம். என்ன
இருந்தாலும் அம்மனையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் குத்து டான்ஸ் ஆட விட்டு ஷங்கருக்கே இந்த விசயத்தில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பது அவர் தானே.

இந்தியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான ஏழைகளின் எண்ணிக்கைப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து இந்தியர்களை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள நமது அரசு,
இன்னொரு பக்கம் சீனாவோடு வல்லரசு போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நமது திரைக்கலைஞர்களோ சீனா போன்ற அல்லுசில்லுகளோடு மோதாமல் டைரக்டாக அமெரிக்க
ஹாலிவுட்டின் மீதே தமது தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்தப் புனிதமான புனிதப்போரில் ஈடுபட்டுள்ள நமது கலைஞர் பெருமக்களுக்கு நாம் நமது ஆதரவை நல்க வேண்டியது நமக்கான வரலாற்றுக் கடமையாகிறது. எப்படிப் பார்த்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு ரஜினியின் ரசிகக்கோமுட்டிகளே இந்தத் திருப்பணியை பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றி விடுவார்கள். ஆனாலும் நூற்றுக்கணக்கான கோடிகளை பிக்பாக்கெட் அடிக்க ஒருவாரமும் ஊருக்குப் பத்து கோமுட்டிப்பயல்களும் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை.

அவர்கள் வருவார்கள். நம்மிடம் வருவார்கள். ஏன்னா தமிழன் நெத்தியில் தானே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அவர்களை நமது வீட்டுக்கே கூட்டி வருவதை விட இலவசமாக் கொடுத்த
டீ.விக்கு வேறு என்ன புடுங்குற வேலை இருக்க முடியும்? நமது ஆதரவை எதிர்பார்த்து நமது வீடுகளுக்கே வரும் அவர்களை நாம் செமத்தையாக ஆதரித்து விடுவோம். நாம் ஆதரிக்கும்
ஆதரிப்பில் இன்னும் ஒரு பத்து வருசத்துக்காவது இந்த படத்தின் சாதனை முறியடிக்கப் பட முடியாததாக இருக்க வேண்டும். வேற எவனுக்கும் இப்படி இருநூறு கோடியில் படம் எடுக்க தில்லு வரவே கூடாது.

எனவே மக்களே.. இப்படி பெரும் பொருட் செலவில் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பை – திரைக் காவியத்தை – திரை ஓவியத்தை நாம்
கட்டாயமாகப் பார்த்து நமது பர்மா பஜார் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து யாரும் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே காசு கொடுத்து வாங்குங்கள் – ஏனென்றால் Piracy kills என்று திரைத்துறை ஜாம்பவான்களே சொல்கிறார்கள். பர்மா பஜார் வியாபாரிகள் ஏற்கனவே பாவம் கடும் தொழில் நசிவையும் காவல்துறை அடக்குமுறையையும் மீறி மக்களுக்காக இப்படி கலைச்சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்..!

எந்திரன்…. ஆபாசக் கவுண்ட்Down Starts…. 1,2,3

ஓகஸ்ட் 9, 2010 Posted by | எந்திரன், எந்திரன் பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா, சினிமா விமர்சனம், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், வைரமுத்து | , , , , , , , , , , | 37 பின்னூட்டங்கள்

உறக்கம் கலைந்து போன தருணம்..

சட்டென்று கலைந்தது
உறக்கம்…
கூச்சல் – இல்லை – கூக்குரல் –
இல்லை ஏதோவொன்று
உலுக்கியெழுப்பிவிட்டது..
கண்களின் முன்னே
நான் உறங்கிப் போன பழைய உலகம்
புதிதாய் ஒரு கோணத்தில் விரிகிறது..
பெரிதாய் மாற்றங்களேதும் இல்லை
அதே காஷ்மீர்
அதே போபால்
அதே பாலஸ்தீன்
அதே போஸ்னியா
அதே ஆப்கான்
அதே ஈராக்
அதே ஈழம்
அதே –
ஒரு ரூபாய் அரிசி
உடன்பிறப்புக் கடிதம்
வண்ணத் தொலைக்காட்சி
கருப்பு வாழ்க்கை…

ஆனால்..
அங்கே சில மனிதர்களுக்கு மட்டும்
கண் காது மூக்கு கை கால்கள்
இல்லை..
வாயும் வயிறும் மலவாயும் மட்டுமேயிருந்தது.
ஏககாலத்தில்
வாய் தின்று கொண்டேயிருந்தது
வயிறு செறித்துக் கொண்டேயிருந்தது
மலவாய் கழிந்து கொண்டேயிருந்தது
இந்த சுற்று வட்டத்திற்கு வெளியே
வயிறும் மலவாயும் ஓய்வெடுத்த
தருணங்களில் வாய் பேசியது…
பேசிக் கொண்டேயிருந்தது…
கலை இலக்கியம் அரசியல்
வாழ்வு சாவு….

பெரிய வாய் –
அதன் ஒருமுனை தென் துருவத்திலும்
இன்னொரு முனை வட துருவத்திலும்
நிலை கொண்டு நின்றது…
மேலுதடு சந்திரனையும்
கீழுதடு சமுத்திரத்தையும் தொட்டது..

பெரிய வயிறு –
உள்ளே பழுப்புக் காகித சோவியத் நூல்களும்
பளீர் காகித பின்னவீன இலக்கியமும்
மட்டிக் காகித தினத்தந்தியும்
இறைந்து கிடக்கிறது..

பெரிய ஆசனவாய் –
பழுப்பும் பளீரும் மட்டியும் கலந்து
மஞ்சளாய்ப் போவதெல்லாம்
இலக்கியம் தான் என்கிறது வாய்..

‘என்ன தான் சொல்லுங்க தோழர்..
கம்யூனிஸ்டுங்க கிட்ட
நிறைய ஆண் மைய்யத் திமிர்…’
வாய் பேசியது

‘எனக்குத் தெரியாத மார்க்சியமா..
எனக்குத் தெரியாத முதலாளித்துவமா..
எனக்குத் தெரியாத கலை இலக்கியமா…
ரசியா தெரியுமா சீனா தெரியுமா
வட கொரியா தெரியுமா க்யூபா தெரியுமா…’
வயிறு செறித்தது

யோனியின் மயிர் கொண்டு வரைந்த
ஓவியங்களை
இலக்கியமாய் பிரசவிக்கும் ஆசனவாய்…
நரகலின் நாறும் உரிமையே
பெணுரிமை என்கிறது வாய்….

கழிவுகளின் நாற்றம் மூக்கைத் துளைக்க
மீண்டும் –
சட்டென்று கலைந்தது உறக்கம்…
-கார்க்கி

ஜூலை 27, 2010 Posted by | கவிதை, பதிவர் வட்டம் | , , , | 2 பின்னூட்டங்கள்

எங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..!

தீயாய்ச் சுட்ட கோடை
மெல்லக் கடக்கிறது
சூள் கொண்ட அடர் மழை மேகங்கள்
மெல்லச் சூழ்கிறது..

கடந்து செல்லும் மேகங்களாய்க்
கடந்து செல்லும் நாட்கள்
கலையும் நினைவுகள்
நாளையும் இன்றும் நேற்று தான்
நேற்றும் நாளையும் இன்று தான்
இன்றும் நேற்றும் நாளை தான்
கடந்து செல்லும் கணம் ஒவ்வொன்றும்
மூளையின் நரம்புப் பிண்ணல்களின்
நினைவு அடுக்குகளில் நிறைய –
அழித்துச் செல்கிறது
புதிதாய் –
எழுதிச் செல்கிறது
 
சோகங்கள் நிகழ்வுகளாகி
நிகழ்வுகள் செய்திகளாகி
செய்திகள் நிதர்சனங்களாகி
நிதிர்சனங்கள் நியாயங்களாயும்
விதிகளாயும் ஒழுங்குகளாயும்
சமூகத்தில் உறைந்து போகிறது
சமூக உறைவின் செய்திகள்
நினைவுகளில் எழுதப்பட்டு
அநீதிகள் அழிக்கப்படுகிறது…

கழிந்து போன வருடங்களின்
இடைவெளிகளில் போபாலின்
கதறல் தேய்ந்து காணாமல்
போகச் செய்யப்பட்டது..
இருபத்தைய்யாயிரம் உயிர்களின்
உணர்வுகளும் ஆசைகளும்
தந்தியின் எட்டாம் பக்கத்து
எட்டாம் பத்தியில் இடம் பிடிக்க
முண்டியடிக்கின்றன..
வரிசையில் காத்திருக்கின்றன
முள்ளிவாய்க்கால் பிணங்கள்

நர்மதை நதியோடு போன
பிணங்களின் முனகல்கள்
காஷ்மீரின் முகடுகளிலும்
முள்ளிவாய்க்கால் மயானங்களிலும்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது..

காஷ்மீரத்தின் உடலில்
பாய்ந்த ஈயக் குண்டுகள்
ஈழத்துக் குழந்தையின் உடலைக்
கிழித்துக் கொண்டு வெளியேறுகிறது..
பார்த்துக் கெக்கெளிக்கிறார் வாரன் ஆண்டர்சன்..
செம்மொழிக் கவிதையால் களிம்பு தடவுகிறார்
கவிஞர் எட்டப்பக்கவிராயர்
கோவையில் கைத்தட்டல் –
கொழும்புவில் எதிரொலிக்கிறது…

வழிந்த ரத்தம் வேறு வேறு
சரிந்த உடல்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
மொழி வேறு வேறு
குத்துவாட்கள் வேறு வேறு
ஆனால் அதன் உறை மட்டும் ஒன்று

தனியே அழும் கண்கள்
இணைந்து சிவக்கும் நாட்களை நோக்கி…

-கார்க்கி

ஜூலை 13, 2010 Posted by | கவிதை | , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..

சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங் என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி
கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர். மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.

பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற
தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.

கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல்
படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.

இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.

உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ்  என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.

தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.

ஜூலை 6, 2010 Posted by | கல்வி, பதிவர் வட்டம், culture, Education, politics | , , , , , | 3 பின்னூட்டங்கள்

செயலின்மையிலிருந்து செயலுக்கு…

நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…

திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…

உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது

மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….

இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….

நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…

அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..

ஜூலை 1, 2010 Posted by | Alppaigal, கவிதை, போலி கருத்துரிமை, culture, facist, politics | , , , | 2 பின்னூட்டங்கள்