தீப-இருள்!
எல்லோர் வீட்டிலும் ஒளியேற்றும்
சிவகாசித் தீக்குச்சிகள்
சிவகாசிச் சிறுவனின் வீட்டிலோ
இருளை ஏற்றுகிறது
உறக்கமறியாத கரங்கள் சுற்றிய
முறுக்கு தொண்டையில்
முள்ளாய் இறங்குகிறது.
எங்கள் சிவகாசிப் பொடியன்
சுருட்டிய பட்டாசின் சிதறும்
ஒலியில் அவன் வாழ்வின்
சிதறல் ஒலி கரைந்தே போனது..
போராட்டத்தின் மெல்லிய ஒலியைக்
கேட்கும் வலிமையை காதுகள் இழந்து விட்டது –
பட்டாசின் வலுத்த சப்தங்கள் அதனை
உறுதிப்படுத்தி ஒலிக்கிறது!
இரவு பகலாய் தையல் இயந்திரத்தின்
பெடலை மிதித்த எங்கள் தோழனின்
கழண்டு போன மூட்டுகளுக்கு
எண்ணைக் குளியல் வேண்டாம்
ஒரு நாள் ஓய்வும்
குவாட்டர் ஓல்டு மங்கும் போதும்
புதுத் துணியின் நாற்றத்தில் மறைகிறது
பருத்தியறுத்தவனின் வியர்வை மணம்
கொன்று கெடுத்தான் கிருஷ்ணன்-
மறுநாள் ஓவர் டைம் செய்கிறார்கள்
துப்புரவு தொழிலாளிகள்
-kaargi