கார்க்கியின் பார்வையில்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

அங்காடித் தெரு – விமர்சனங்கள் மேலான விமர்சனம்..!

முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது வித்தியாசமான திரைப்படம்; வித்தியாசமான கதைக் களம்; சாமர்த்தியமான
ஷார்ப்பான வசனங்கள்; தென் தமிழகத்து நாடார் இளைஞர்கள் மேல் அதே சாதி முதலாளிகள் அவிழ்த்து விடும் சுரண்டலை முதன் முறையாக பேசிய படம்; பல பின்னவீனத்துவ குறியீடுகளை கொண்ட படம் (அதெல்லாம் என்னான்னு கேட்காதீங்க – எனக்குத் தெரியாது); நாயகியின் உடல் மொழி ஒரு எட்டாவது உலக அதிசயம்; ஜெயமோகனுக்கு ஜெய் – ம்ம்ம்ம்….இந்தக் கடிவாளமிடப்பட்ட முற்போக்குக் கழுதைகள் சுற்றித் திரியும் ஊரில் அக்கப்போரில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..

படத்தில் சொன்ன விஷயங்களைக் கொண்டு நல்ல பல விமர்சனக் கட்டுரைகள் வலைத்தளங்களில் வெளியானது.. ஆனால் இதில் சொல்லாத சில விஷயங்களும் இருக்கிறது; அல்லது சொன்ன விஷயங்களின் இடைவெளிக்குள் வேறு சில உண்மைகளும்
பொதிந்திருக்கிறது. அதில் ஒன்று சரவணா ஸ்டோ ர்ஸுக்கு எந்த விதத்திலும் குறையாமல் ஊழியர்களை ஒடுக்கிச் சுரண்டும் இன்னொரு கடையினருக்கு டைட்டிலில் நன்றி தெரிவித்திருப்பது. பொதுவில் நாடார் சாதி முதலாளிகள் மிக அடிப்படையிலேயே சுரண்டலும், போலிப் பெருமிதமும் கொண்டவர்களாக இருக்கையில் ஒரு குறிப்பிட்ட கடையை குறி வைத்தது போல திரைக்கதையை அமைத்திருப்பது இன்னொன்று. அடுத்து முக்கியமாக நான் கருதுவது ஒடுக்குமுறையின் மேலான கோபத்துக்கு கச்சிதமாக மடை போட்டு ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் செலுத்தியிருப்பது.

இங்கே பதிவுலகில் அங்காடித் தெரு நாயகன் நாயகிக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து குமுறியவர்களின் குமுறல் உணர்ச்சி எத்தகையது? இந்த உணர்ச்சி ஓரிரு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வடிந்து போய் விடுமா இல்லை அதைத் தாண்டிச் சென்று வினையாற்றுமா? “அடப்பாவமே இவாளெல்லாம் இந்த ம்ருஹங்களை அடச்சி வச்சி கஷ்ட்டப்படுத்தறாளே” என்று மிருகக் காட்சி சாலையின் கூண்டுகளுக்கு முன் நின்று உச்சுக் கொட்டும் பரிதாப உணர்ச்சிக் குரல்களைக் கேட்டிருக்கிறீர்களா? அரசியல் ஏதுமற்ற வெறும் பரிதாபம் தான் அது. டிக்கெட்டுக்கான நேரக் கெடு முடிந்து மிருகக்காட்சி சாலையின் கேட்டைக் கடந்த உடன் வடிந்து போகும் பரிதாப உணர்ச்சி அது. இங்கே திரையரங்கை விட்டு வெளியேறி ஒரு பதிவும் சில பின்னூட்டங்களும் வரையில் தாக்குப் பிடித்து நிற்பது கொஞ்சம் பாராட்டக் கூடியது தான்.

அடப்பாவிகளா சொந்த சாதிக்காரனைக் கூட இந்த அண்ணாச்சிகள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்களே.. என்று பரிதாபம் காட்டுபவர்கள் விஷயத்தின் முழு உண்மையை அறிந்தவர்களல்ல. தமிழ்நாட்டில் சொந்த சாதியினரைத் தான் சுலபத்தில் சுரண்ட முடியும். பிரிக்காலில் ஏழை நாயுடுகள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏழை நாடார்கள், சக்தி குழுமங்களில் ஏழை கவுண்டர்கள்.. இப்படி இங்கே தொழில் நிறுவனங்கள் எல்லாம் சாதிச் சங்கங்களின் கிளைகள் போலத் தானே விளங்குகிறது. திருமாவுக்கு தலித்துகள் எப்படியோ ராமதாஸுக்கு வன்னியர்கள் எப்படியோ அப்படித்தான் அண்ணாச்சிகளுக்கு அவர்களது ஊழியர்கள். அண்ணாச்சிகள் கடும் உழைப்பாளிகள் என்பது உண்மை – அதிகாலையில் எழுந்து மார்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவதில் தொடங்கி இரவு பதினோரு மணிக்கு கடையெடுத்து வைக்கும் வரை அவர்களின் உழைப்பு அசாதாரணமானது – இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அதே சாதியைச் சேர்ந்த எல்லா பணக்கார முதலாளிகளும் அதே அளவு உழைப்பாளிகள் இல்லையென்பதும், அவர்களின் வெற்றிக்கு உழைப்பு மட்டுமே காரணமில்லை என்பதும்.

தமிழகம் முதலாளித்துவம் ஓரளவு வளர்ந்த மாநிலம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மத்திய காலத்திய ஐரோப்பாவைப் போல் அல்லாமல் அந்த மூலதனம் என்பது தனது வளர்ச்சிக்கு நடப்பிலிருக்கும் அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் (பார்ப்பனியத்தை) தனக்குள் சுவீகரித்துக் கொண்டே வளர்ந்துள்ளது. இங்கே உள்ளூர் மூலதனமும் தொழிற்சாலைகளும் சாதிச் சங்கங்களைப் போலவே அணி சேர்ந்து நிற்கிறது.

யார் இந்த சாதிக்காரர்கள்? ஒரு சாதியினர் தொழில்களில் அதிகளவு ஈடுபடுவதால் மட்டுமே அந்த மொத்த சாதியினரும் தொழில்மயமாகி விட்டதாக சொல்லி விடமுடியுமா? ஒரு சாதியின் எல்லா அங்கத்தினரும் சமமான சமூக அந்தஸ்த்து கொண்டவர்களா?

இல்லை என்பது தான் பதில். உதாரணமாக, நாடார்கள் என்று குறிப்பிடுவது முதலில் ஒரே சாதி அல்ல. அது ஒரு அம்ப்ரெல்லா பெயர் (Umbrella name) சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாடார்கள் என்று ஒரு சாதி கிடையாது (அது ஒரு பட்டம் (அ) சிறப்புப் பெயர்). சாணார், கிராமனி, பணிக்கர், ஈழுவ, என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர்களை இணைத்து தான் இன்றைய நாடார் சாதியே உருவாக்கப்பட்டது. அதில் ‘நாடான்’ என்பது அப்பகுதியில் நிலங்களை வைத்திருந்த சிலருக்கு இருந்த சிறப்புப் பெயர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தழுவிய சாதி என்பது வெகு சிலது தான். பார்ப்பனர்கள் பரவலாக தமிழகம் தழுவி இருந்தனர். நாயக்கர்கள், செட்டியார்களும் தமிழகம் தழுவி இருந்தனர். இவர்களுக்கு அதற்கான வரலாற்றுப் பின்புலம் இருந்தது.

இதையெல்லாம் அவ்வளவு எளிதில் இன்றைய நாடார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். செப்புப்பட்டையம் தாமிரப் பட்டயம் என்று தங்களை சந்திர குல ஷத்ரியர்களாக காட்டிக் கொள்ளும் முனைப்பு இன்றைய நாடார்களுக்கு நிறையவே இருக்கிறது – ஆனால் இன்றும் அரசு ஆவணக் காப்பகத்தில் இருக்கும் அன்றைய ஆவனங்களும் கால்டுவெல் போன்றோர் எழுதிய குறிப்புகளும் அவர்களுடைய பாண்டிய குல பெருமைக்கு தடையாகவே இருக்கிறது.

இன்றைக்கு இடைநிலைக் கட்டத்திலிருக்கும் சாதிகள் ஒவ்வொரு வட்டாரத்துக்குட்பட்டவை தான். உதாரணமாக இன்றைக்கு குரும்பர் என்று அழைக்கப்படும் சாதியிலேயே குரும்பர், குரும்பா, குருபா, உள்ளு குருபா, ஹாலு குருபா என்று பல ‘பிரிவுகள்’ இருக்கின்றது. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சார பின்னணி, பொருளாதார பின்னணி இருக்கிறது. ஆனால் நாடார்கள் என்று ஒரே பெயரால் அழைக்கப்படுபவர்கள் மத்தியில் இன்றைக்கு இந்த உட்பிரிவுகள் மிகவும் மெல்லியதாய் இருக்கிறது – அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. தென்மாவட்டங்களில் இருந்த சாணார், கிராமணி போன்றவர்களையும் சேர்த்து இணைத்து ‘மாஸ்’ காட்டுவதில் ஏற்கனவே ஆதிக்க நிலையில் இருந்த நாடார்களின் நலனும் இருந்தது.

இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் நாடார்கள் எல்லோரும் பனையேறிகள் அல்ல. பழைய பனையேறிகள் எல்லோரும் சின்ன மளிகைக்கடை நடத்துவோராகவோ அல்லது பெரும் முதலாளிகளிடம் கூலிக்கு வேலை பார்ப்பவராகவோ தான் இருக்கிறார்கள். டோண்டு சொல்வது போல எல்லா நாடார்களும் அரசை எதிர்பார்க்காமல் சுயமாக தொழில் செய்து தானே சுயம்புவாக முன்னேறி விடவில்லை. ஏற்கனவே ஊரில் நிலம் நீச்சு என்று இருந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழில்களைக் கைப்பற்றியுள்ளனர். ஊரில் பராரியாக இருந்த பனையேறி இங்கும் பராரியாகத் தான் இருக்கிறார். பணம் படைத்த நாடார்களுக்கு பனையேறிகளின் எண்ணிக்கை பலம் தேவை அவ்வளவு தான்; மற்றபடி அவர்கள் வேறு யாரும் தம்மை பனையேறி என்று அழைப்பதையே கூட கேவலமாக கருதிக் கொள்வார்கள்.

மேலும் இந்த நவீன கொத்தடிமைத்தனம் ரங்கநாதன் தெருவோடு முடிந்து விடுவதோ – நாடார்களின் தனிச் சிறப்போ அல்ல. இதை விட கேடு கெட்ட கொத்தடிமைத்தனத்தைக் கண்டிருக்கிறேன். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எம்ஜாலில் இருக்கும் வீரமணி பிஸ்கட் இண்டஸ்ட்ரீஸில் அங்காடித்தெருவில் காட்டியதை விட ஆயிரம் மடங்கு அதிக கொத்தடிமைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அதன் முதலாளி வீரமணி நாடார் – இது நான் நேரில் கண்டது. வீரமணி நாடாரை மிஞ்சும் கொத்தடிமைத் தனத்தை கடப்பா மாவட்டம் கிரானைட் குவாரிகளில் ரெட்டிகளும், கம்மவார் நாயுடுகளும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். பிரிக்காலின் நாயுடு முதலாளியின் கொடுமையும், சக்தி குரூப் கவுண்டர் முதலாளியின் கொடுமைகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. இவர்களுக்கெல்லாம் அப்பன்மார்கள் தான் வால்மார்ட், ஜீ.ஈ, கோக், பெப்சி முதலான பன்னாட்டு முதலாளிகள். சீனத்தில் பல தொழிலாளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சரியான ஊதியம் கூட தராமல் கசக்கிப் பிழிந்து தயாரிக்கப்படும் பொம்மைகளோடு தான் உங்கள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“என்னா இருந்தாலும் இந்த சைனீஸ் கூட்ஸ் எல்லாம் ரொம்ப சீப்பு சார்” என்று சப்புக் கொட்டிக் கொண்டே “அங்காடித் தெரு பார்த்தீங்களா… ராஸ்கல்ஸ் என்னா கொடுமை சார்..?” என்று அங்கலாய்த்துக் கொள்ளும் குரல்களை சமீபமாக நிறைய கேட்கிறேன்.

மூலதனத்துக்கு சாதி, மொழி, இனம், எல்லைகள் என்று எதுவுமே கிடையாது. அங்காடித் தெரு அஞ்சலியின் சோகத்திற்கு எந்த அளவிலும் குறையாத சோகம் அந்த சீனத்துத் தொழிலாளியின் சோகம். உணர்ச்சிக்கு அறிவு கிடையாது. இன்னார் மேல் கோபம் – அதைவிட அதிக அநியாயம் செய்த இன்னொருவர் மேல் கோபமில்லை என்று பகுத்துப் பார்க்கும் அறிவு உணர்ச்சிக்கு இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது போலி உணர்ச்சி. அங்காடித் தெரு அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகத்துக்காக அண்ணாச்சிகளின் மேல் ஆத்திரப்படும் மக்கள் அதை விட அதிக சோகத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மேலும் ஆத்திரப்பட வேண்டும். அப்போது தான் அது நேர்மையான உணர்ச்சியாக இருக்கும்.

திரையரங்கை விட்டு வெளியேறியதும் எழும் கண நேர உணர்ச்சியின் உந்துதலுக்கு ஆயுசு எத்தனை நேரம்? இதே பதிவுலகில் எத்தனையோ
பதிவுகளில் “சுதந்திரச் சந்தையில் விளையும் போட்டியால் சேவைகளின் விலைகள் குறைந்து நுகர்வோருக்கு நலனே விளைகிறது” என்று அதியமான் பேசியபோதெல்லாம், அந்த குறைந்த விலை ‘ரங்கநாதன் தெரு சட்டையின்’ பின்னே வழியும் அஞ்சலியின் கண்ணீரை எத்தனை பேர் கண்டுணர்ந்தீர்கள்?

அங்காடித் தெரு திரைப்படத்தில் எனக்கு இருக்கும் விமர்சனம் ஒன்று தான். நடந்த சம்பவங்களை ஒரு சில தனிநபர்களோடு சுருக்கி
விட்டிருக்கிறார்கள்.. எங்கள் செல்போன் சேவையில் கட்டணம் குறைவு என்று கூவியழைக்கும் விளம்பரங்களுக்குப் பின்னும் ஒரு அண்ணாச்சி இருக்கிறார் – என்ன.. அவரு கொஞ்சம் பெரிய அண்ணாச்சி; பேரு கொஞ்சம் ஸ்டைலா அனில் அம்பானின்னு இருக்கும். குறைந்த விலையில் நிறைந்த நுகர்வு என்பதன் பின்னணியில் தொழிலாளர்களை சுரண்டுவது தான் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகளின் அடித்தளம் என்றால் அதுவே தான் அம்பானிகளின் அடித்தளமும் கூட. என்ன.. அவர்கள் கொஞ்சம் ஹைடெக் என்பதோடு தமக்கு சாதகமாய் அரசு அரசாங்கம் சட்டம் போலீசு என்று சகலத்தையும் வளைக்கும் வல்லமை கொண்ட பெரிய அண்ணாச்சிகள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகனின் உணர்ச்சி கடிவாளம் போட்டது போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தையும் அதன் முதலாளியையும் மாத்திரம் நோக்கிப் பயணப்படுகிறது – அது நேர்மையான உணர்ச்சியாக பொதுவான சுரண்டலை எதிர்த்துக் கிளர்ந்து எழ மறுக்கிறது.

வலைத்தளங்களில் வந்த விமர்சணங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு சில அண்ணாச்சிகளின் மேல் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தாக்குப்பிடிக்கும் செல்லக் கோபமாக சுருங்கி விட்டது தான் வருத்தம். நேர்மையாகப் பார்த்தால் இது உலகளாவிய மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிரான கோபமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இது எட்டி நின்று வேடிக்கை பார்த்து உச்சுக் கொட்டி நகர்ந்து விடும் குட்டிமுதலாளித்துவ போலி உணர்ச்சி. இதற்கு வக்கணை பேச மட்டும் தான் தெரியும்; வினையாற்றத் துப்புமில்லை யோக்கியதையுமில்லை. மிருகக் காட்சி சாலையின் மிருகங்களின் மேல் வெளிப்படும் பரிதாபத்திற்கும் அஞ்சலியின் மேல் இவர்கள் காட்டும் கரிசனத்துக்கும் வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை
தான்.

ஏப்ரல் 5, 2010 Posted by | Alppaigal, culture, Films, Uncategorized | , | 20 பின்னூட்டங்கள்