கார்க்கியின் பார்வையில்

ஈரல்..!

“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு

“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.

ரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள  இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.

ரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.

சரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.

“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்”  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.

“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”

நின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.

குமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.

“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்?” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.

“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”

“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்  

“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”

“சரிடா.. நான் போறேன்”

ரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.

ஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.

“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”

அந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது.  அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.

“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா? அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு?”  அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.

அன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.

 மிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி.  அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.

ஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.

மாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.

பொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு  நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.

 ரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.

___________________________________________________________________________________________

க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்

 “டேய் பய்யா,  ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே?”  திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.

“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.

பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா? நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.

அங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.

வீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.

ரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

பூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”

வேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.

“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.

ரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.

பூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய  முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.

வேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்

__________________________________________________________________________________________ 

 இரவு.

சிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.

வேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.   

சின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.

வேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –

“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”

சின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.

ஜனவரி 7, 2011 Posted by | சாதி வெறி, சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி, culture | , , , | 3 பின்னூட்டங்கள்

நதியின் மடியில்…!

முடிவற்று நீண்ட
அந்த நாளின் இடையில் நான்
அந்த நதியைக் கண்டேன்…
அதன் மூலத்தைக் கண்டேனில்லை நான்..
அதன் முடிவையும் காணேணோ அறியேன்
துவக்கமும் இலக்கும் அற்று
வழிந்தோடும் நதி…
செல்லும் தடந்தோறும் கண்டவற்றையெல்லாம்
தனக்குள் வரித்துக் கொண்டோடும் நதி..
கரைகள் அற்ற
திசையென்று ஏதுமற்று
வேகமாயும் வேகமற்றும்
ஆழமாயும் ஆழமற்றும்
தானே தன் பாதையைப் பற்றியோடும்
நதியின் மடியில் நான் அமர்ந்தேன்….

நிறைய தண்ணீர்..
தனதாற்றலைத் தானேயறியாத 
ஒரு பெண்ணின் உடல் போல்
வளைந்து நெளிந்து
சுழித்துப் புரண்டு
காமுற்ற அரவமாய்
இரையை நெருங்கிய வேங்கையாய்
வன்மையுமாய் மென்மையுமாய்
வனாந்திரங்களையும் வெட்டவெளிகளையும் தின்று
தரைமேல் படர்ந்து செல்லும் நதி
ஒரே நேரத்தில் பேரரசி போலும்
பிச்சைக்காரி போலும் நடந்து செல்கிறது…

ஆதியில் நாகரீகங்களைப் பெற்றெடுத்த
அதன் கருவறையில்
அமிலத்தின் நெடி காரமாய் –
விகாரமாய் வீசிற்று..
தன்னால் செழித்துக் கொழித்தவைகள்
இன்று தன்னாலேயே வாடிச் சாவதைக்
கண்டு நதி வடித்த கண்ணீர்
பத்து ரூபாய்க்கு விலை போகிறது..
வரப்புகளின் மடைகளில் மன்வெட்டிக்
கொத்தலின் இனிய முத்தங்களெல்லாம்
இனி பழங்கனவு தானோ…
துள்ளி விளையாட வயலும் வரப்புமில்லை…
விளையாட்டைக் கண்டித்து மடை கட்ட
விவசாயியுமில்லை.. 
செம்மண் திப்பி கலந்த அதன் சிவந்த
நிறத்தை உறிஞ்சியெடுத்த அமெரிக்க
இயந்திரத்தின் மலவாயிலிருந்து
நிறமிழந்து ஒரு ப்ளாஸ்டிக் புட்டியிடம்
தன் சுதந்திரமுமிழந்து நிற்கும் சோகம்

வழியும் கண்ணீரோடு நின்ற என்னிடம்
மொழியும் வார்த்தைகளும் அற்று
வெறும் சப்தங்களாய் மதோடு
பேசிச் சென்றாள் அந்தத் தாய்..

“ஓ என் பிள்ளாய்…
என் மடியினின்றும் விலகிச் செல் நீ..
எதை வேண்டி வந்தாய் இன்று..?
உனக்களிக்க ஏதுமில்லை என்னிடம்..
இந்த வனமும் எனதில்லை..
இந்த நீரும் எனதில்லை..
இந்த மீன்களும் எனதில்லை..
நானே எனக்கில்லாத ஓர் நாளில்
எனை நாடி ஏன் வந்தாய்..?
இப்போதே விலகிச் செல் நீ…

அள்ளித் தந்த எனையே
அள்ளிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
என்னில் பிறந்து
என்னில் தவழ்ந்து
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகளே என்னைக்
களவாடிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
பிறந்த மலையும் விலை போனது
வாழ்ந்த பூமியும் விலை போனது
சேரும் கடலும் விலை போனது
நானும் விலை போய் விட்டேன் என் பிள்ளாய்…
ஏதுமற்ற இடத்தில் எதைத்
தேடி வந்தாய் என் பிள்ளாய்…
இருளில் தொலைத்ததை நீ
வெளிச்சத்தில் தேடுகிறாய்…
சோம்பி அமரும் நீ வேண்டாமெனக்கு
இப்போதே விலகிச் செல் நீ…
உன் கண்ணீர் வேண்டாமெனக்கு
என் மலை வேண்டும்
என் வனம் வேண்டும்
என் நிலம் வேண்டும்
என் வரப்பு வேண்டும்
என் கடல் வேண்டும்..
மீட்டுத் தருவாயா என் பிள்ளாய்…?”

சலசலக்கும் சப்தங்களினூடே
ஒரு சோக ராகமும் சில பறைகளின்
ஒலியும்…
செம்மண் திப்பிகளின்றிச் சிவக்கிறது
நதி…
இனி கண்ணீரில்லை…!

செப்ரெம்பர் 16, 2010 Posted by | கவிதை, புனைவு | , | 2 பின்னூட்டங்கள்

உறக்கம் கலைந்து போன தருணம்..

சட்டென்று கலைந்தது
உறக்கம்…
கூச்சல் – இல்லை – கூக்குரல் –
இல்லை ஏதோவொன்று
உலுக்கியெழுப்பிவிட்டது..
கண்களின் முன்னே
நான் உறங்கிப் போன பழைய உலகம்
புதிதாய் ஒரு கோணத்தில் விரிகிறது..
பெரிதாய் மாற்றங்களேதும் இல்லை
அதே காஷ்மீர்
அதே போபால்
அதே பாலஸ்தீன்
அதே போஸ்னியா
அதே ஆப்கான்
அதே ஈராக்
அதே ஈழம்
அதே –
ஒரு ரூபாய் அரிசி
உடன்பிறப்புக் கடிதம்
வண்ணத் தொலைக்காட்சி
கருப்பு வாழ்க்கை…

ஆனால்..
அங்கே சில மனிதர்களுக்கு மட்டும்
கண் காது மூக்கு கை கால்கள்
இல்லை..
வாயும் வயிறும் மலவாயும் மட்டுமேயிருந்தது.
ஏககாலத்தில்
வாய் தின்று கொண்டேயிருந்தது
வயிறு செறித்துக் கொண்டேயிருந்தது
மலவாய் கழிந்து கொண்டேயிருந்தது
இந்த சுற்று வட்டத்திற்கு வெளியே
வயிறும் மலவாயும் ஓய்வெடுத்த
தருணங்களில் வாய் பேசியது…
பேசிக் கொண்டேயிருந்தது…
கலை இலக்கியம் அரசியல்
வாழ்வு சாவு….

பெரிய வாய் –
அதன் ஒருமுனை தென் துருவத்திலும்
இன்னொரு முனை வட துருவத்திலும்
நிலை கொண்டு நின்றது…
மேலுதடு சந்திரனையும்
கீழுதடு சமுத்திரத்தையும் தொட்டது..

பெரிய வயிறு –
உள்ளே பழுப்புக் காகித சோவியத் நூல்களும்
பளீர் காகித பின்னவீன இலக்கியமும்
மட்டிக் காகித தினத்தந்தியும்
இறைந்து கிடக்கிறது..

பெரிய ஆசனவாய் –
பழுப்பும் பளீரும் மட்டியும் கலந்து
மஞ்சளாய்ப் போவதெல்லாம்
இலக்கியம் தான் என்கிறது வாய்..

‘என்ன தான் சொல்லுங்க தோழர்..
கம்யூனிஸ்டுங்க கிட்ட
நிறைய ஆண் மைய்யத் திமிர்…’
வாய் பேசியது

‘எனக்குத் தெரியாத மார்க்சியமா..
எனக்குத் தெரியாத முதலாளித்துவமா..
எனக்குத் தெரியாத கலை இலக்கியமா…
ரசியா தெரியுமா சீனா தெரியுமா
வட கொரியா தெரியுமா க்யூபா தெரியுமா…’
வயிறு செறித்தது

யோனியின் மயிர் கொண்டு வரைந்த
ஓவியங்களை
இலக்கியமாய் பிரசவிக்கும் ஆசனவாய்…
நரகலின் நாறும் உரிமையே
பெணுரிமை என்கிறது வாய்….

கழிவுகளின் நாற்றம் மூக்கைத் துளைக்க
மீண்டும் –
சட்டென்று கலைந்தது உறக்கம்…
-கார்க்கி

ஜூலை 27, 2010 Posted by | கவிதை, பதிவர் வட்டம் | , , , | 2 பின்னூட்டங்கள்

செயலின்மையிலிருந்து செயலுக்கு…

நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…

திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…

உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது

மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….

இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….

நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…

அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..

ஜூலை 1, 2010 Posted by | Alppaigal, கவிதை, போலி கருத்துரிமை, culture, facist, politics | , , , | 2 பின்னூட்டங்கள்

இன்னும் கொஞ்சம் வாழ்க்கை..!

அது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஒரு குட்டி தீபாவளி
போல இருக்கும். மில்லில் அன்றைக்குத் தான் சம்பளம் கொடுப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்கு வரும் போது அப்பா எனக்கும்  அண்ணாவுக்கும் லாலா கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வருவார். அம்மா வீட்டில் ஒரு பழைய உஷா தையல் மிஷின் ஒன்றை வைத்து தெரிந்தவர்களுக்கு கிழிந்த பழைய துணியெல்லாம் தைத்துக் கொடுப்பாள். தையல் மிசின் இருக்கும் மூலையிலேயே பக்கத்து திட்டில் ஒரு பழுப்பேரிய டப்பா இருக்கும். அதில் அம்மாவுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட்டு வருவாள். அது முழுக்க நிரம்பி வழியும் மாதத்தில் எனக்கும் அண்ணாவுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய்கள் கிடைக்கும்.

ஏழாம் தேதிக்கு அடுத்து வரும் சனிக்கிழமை எனக்கு இன்னுமொரு கொண்டாட்டமான நாள். அப்பாவுக்கு வார லீவு நாள் சனிக்கிழமை தான்.
சிலவுக் கணக்கை எழுதிய பின் அந்த மாதத்துக்கான மளிகை சாமான் வாங்கும் நாள் தான் அடுத்து வரும் முதல் சனிக்கிழமை. பொருட்களை
பிடித்துக் கொள்ள என்னையும் சைக்கிளின் பின்னே அமர வைத்து கூட்டிப் போவார். டவுனைப் பார்க்கப் போகும் சந்தோசத்தை விட எனக்கு நாங்கள் பொருள் வாங்கப் போகும் கடையில் கணக்கெழுதும் கணேசனைப் பார்க்கப் போகும் சந்தோசம் தான் தூக்கலாக இருக்கும்.

எங்கள் வீடு தாராபுரம் தாண்டி வெள்ளகோயில் போகும் வழியில் மூலனூரில் இருந்தது. பக்கத்தில் ஓரளவுக்கு பெரிய டவுன் என்றால் அது தாராபுரம் தான். தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்கள் திருப்பூர் செல்லும் வழியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் வந்தால் ஒரு ரவுண்டானா
இருக்கும். அதில் வலது புறம் திரும்பி ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு நால் ரோடு சந்திப்பு வரும் – அந்த இடத்திற்கு பூக்கடை
நிறுத்தம் என்று பெயர். அதில் இடது புறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் இடது புறம் கரூர் வைசியா பேங்கிற்கு நேர் எதிரே வலது புறத்தில் பால் பாண்டி டிரேடர்ஸ் இருக்கும்.

பதினைந்து வருடத்திற்கு முன் ஊக்கு முதல் சகல மளிகை சாமானும் விற்கும் பெரிய கடை அந்த வட்டாரத்திலேயே பால் பாண்டி டிரேடர்ஸ் தான். எந்த நேரமும் ஐம்பதுக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள். போனதும் கணேசனிடம் முதலில் பில் போட வேண்டும். பில் என்பது கையால் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படும் சிட்டை தான். அந்த சிட்டையின் கடைசியில் மொத்த தொகை போட்டிருப்பார்கள். அதை கல்லாவில் அண்ணாச்சியிடம் கட்ட வேண்டும். பின் அந்த பில்லின் நீளத்தைப் பொருத்து அதை உள்ளே வேலை செய்யும் கடைப் பையனிடம் கணக்கெழுதிய கணேசனே கொடுப்பார். பொருட்கள் கட்டப்பட்டு சரிபார்க்கப் படும் வரையில் கல்லாவுக்கு நேர் எதிராக போடப் பட்டிருக்கும் அரிசி மூடைகளில் அப்பா அமர்ந்திருப்பார். கணேசன் என்னைக் கூப்பிட்டு தன் அருகேயே அமர வைத்துக் கொள்வார்.

அரிசி மூடைகள் வரிசையாக வைத்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னே தான் கணேசன் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருப்பர். அங்கேயிருந்து
அவரைத் தெளிவாக கவனிக்க முடியும். கனேசனைப் பார்த்தவர்கள் முதலில் ஆச்சர்யப்படுவார்கள். அவருக்கு காதும் மூளையும் தலையில்
இருக்கிறதா இல்லை கைகளில் இருக்கிறதா என்று ஒரு குழப்பம் வரும்.

“அண்ணாச்சி, கொள்ளு ஒரு கிலோ, து.பருப்பு ரெண்டுகிலோ, க.எண்ணை அஞ்சு லிட்டர்,. மஞ்சள் கால் கிலோ, ச.மாவு ரெண்டு கிலோ, ம.மாவு
ரெண்டு கிலோ, வெ.ரவை ரெண்டு கிலோ, கோ.ரவை ஒரு கிலோ, ப.பருப்பு ஒரு கிலோ, ஊதுபத்தி ரெண்டு ரோலு, ஒட்டகம் மார்க் அரப்பு அரை கிலோ, புலி மார்க் சீயக்கா அரை கிலோ, ஐய்யார் இருவது சின்ன சிப்பம், பச்சரிசி ரெண்டு கிலோ, உளுந்து ஒரு கிலோ, கடுகு அம்பது கிராம், கேரளா குண்டு மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், மல்லி நூறு கிராம், புளி ஒரு கிலோ, கல் உப்பு அரை கிலோ, சக்கரை மூணு கிலோ, திரி ரோஸ் டீ தூள் நூறு கிராம், கண்ணன் காபி தூல் நூறு கிராம், சூப்பர் மேக்ஸ் பிளேடு நாலு, ரெண்டு நட்ராஜ் பென்சில்.. அப்புறம் அவ்வளது தான் – சீக்கிரம் பில்லப் போடுங்க” மாத சம்பளக்காரர்கள் இப்படி தாறுமாறாக ஒப்பித்து விட்டு அவசரப் பட்டுக் கொண்டு நிற்பார்கள்.

அவர் ஒவ்வொரு பொருளின் பெயரையும் அளவையும் சொல்லி முடித்த பிண்ண நொடியில் அது எழுதப்பட்டு அதற்கான விலையும் எழுதப்பட்டு விடும். இந்த மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் விலை ஏறி இறங்கும். காலையில் அண்ணாச்சி அன்றைய விலை நிலவரத்தை வரிசையாக கிலோவுக்கு இத்தனை என்று சொல்லுவதை கனேசன் ஒரு டீயை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் வாடிக்கையாளர்கள் பல்வேறு அளவைகளில் சொல்வதை அவர் சொல்லி முடிக்கும் முன்னரே மனதுக்குள் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விலையை வரிசையாக எழுதி, கீழே கோடு கிழித்த அடுத்த பத்து நொடிகளில் வரிசையாக எல்லா தொகையையும் கூட்டி மொத்த தொகையை எழுதி விடுவார். வேலை செய்யும் அனுபவம் கொண்ட பையனிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் சின்ன பில்லை கொடுக்க வேண்டும். அவசரம் அல்லாத பெரிய பில்லையும் கூட புதிய பையனுக்கு அவ்வப்போது கொடுக்க வேண்டும் – அவனும் பயிற்சி பெற்று தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா.

இந்த நுணுக்கமான அவதானிப்புகள் எல்லாம் பில்லை எழுதி, பொருளுக்குண்டான விலையை அதன் அளவுக்கேற்ப எழுதி, அதன் மொத்த மதிப்பை கூட்டி எழுதும் அந்த நேரத்திற்குள்ளேயே முடிந்து விடும். இதையெல்லாம் கை எழுதிக் கொண்டிருக்கும் போதே வாய் விசாரிப்புகளில் இறங்கியிருக்கும்.

“என்ன அண்ணாச்சி, பையன காலேஜுல சேத்துட்டியளா. எத்தன ரூவா கட்டினிய?”

“அத ஏங்க கேக்கறீங்க.. வாங்குன ஒன்னார்ருவா மார்க்குக்கு இன்சினீருக்குப் படிக்கனுமாம் தொரைக்கு. பணம் பொரட்டத்தான் இப்போ நாயா அலைஞ்சிட்டு இருக்கேன்” அந்த நடுத்தர வயது சலிப்புக்கு உடனே ஆறுதல் வரும்..

“விடுங்கண்ணாச்சி.. நாம தான் படிக்க வைக்க ஆளில்லாம இன்னிக்கு லோல்படுறோம்.. நம்ம பிளையளாவது படிக்கட்டுமே.. காச என்ன முடிஞ்சா
கொண்டு போறம்… இன்னாங்க பில்ல பிடிங்க. காச அங்க கல்லாவுல கட்டுங்க” சிட்டையை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே திரும்பி “ஏல..
செல்லதொர இங்க வால. அண்ணாச்சிக்கு இந்த லிஸ்ட்ட வெரசாக் கட்டித் தா. ஒரு கலரு ஒடச்சி கொடு – நீங்க அந்தா அந்த மூடைல
இருங்கண்ணாச்சி.. பய சீக்கிரமா போட்டுத் தருவான்”

அத்தனை கவனமான வேலைக்கு இடையிலும், விசாரிப்புகளுக்கு இடையிலும், உள்ளே யார் சும்மா நிற்கிறார்கள் என்கிற கவனிப்புகளுக்கு
இடையிலும், எந்நேரமும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலிக்கு இடையிலும், முகத்தில் நிரந்தரமாய் ஒரு சிரிப்பு தேங்கியிருக்கும். முகத்தின் அமைப்பே சிரிப்பது போல் தானோ என்று நான் சந்தேகப் பட்டதும் உண்டு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளை கணேசன் அழைத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். கடையில் கூட்டம் குறைவாய் இருக்கும் நாளில் ஏதாவது பில்லை என்னிடம் கொடுத்து மொத்த தொகையை கூட்டித் தரச் சொல்வார். நான் திணருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அதே கணக்கை தனது மின்னல் வேக பாணியில் போட்டு விட்டு ‘நாங்கெல்லாம் அந்தக் கால எட்டாவதாக்கும்; அந்தக்கால எட்டாவதும் இந்தக் கால எம்மேயும் ஒன்னுதான் தெரியுமாடே’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்.

என்னிடம் அவருக்கு தனி அக்கரை உண்டு. நான் அப்பாவோடு போகும் போதெல்லாம் தனியே என்னிடம் விசாரிப்பார். அவரின் சட்டையின் மேல்
பை பெரிதாக இருக்கும் அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருக்கும். அதில் கையை விட்டு அள்ளி எத்தனை வருகிறதோ அத்தனையும் எனக்கே கொடுப்பார். மளிகைக் கடைகளில் ரோஜா பாக்கு, பான் பராக் போன்ற லாகிரி வஸ்துக்களை மொத்தமாக வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு
அதன் முகவர்கள் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். நீங்கள் இந்த முப்பது நாப்பது ரூபாய் விலையில் விற்கும் டிஜிடல் வாட்ச்சை எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வாட்சுகளே அனேகமாக கிடைப்பதில்லை. முன்பு அது போன்ற வாட்சுகளை சும்மா இலவச இணைப்பாக கொடுப்பார்கள். அதுவும் ஓரிரண்டு மாதத்துக்கு ஓடும். பச்சை மஞ்சள் நீலம் ரோஸ் என்று கலர் கலரான ப்ளோரஸண்ட் நிற வாரில் மிக்கி மௌஸ், டாம் & ஜெர்ரி படம் எல்லாம் போட்டிருக்கும்.

கணேசன் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் என்றாவது ஒரு நாள் கணக்கெழுதும் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காலம்
ஒன்று இருந்தது. பத்தாவதற்குப் பின் அப்பா என்னை பழனியில் பாலிடெக்னிக் படிக்க அனுப்பி விட்டார். அங்கே பாட்டி தாத்தாவின் வீட்டில்
நின்று படித்துக் கொண்டு ஆறு மாதம் ஒருமுறை தான் மூலனூருக்கு வருவேன். பாலிடெக்னிக் முடிந்து ஒருவழியாக ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ்
கம்பெனியில் சேர்ந்தேன். ஒரு ஆறு ஆண்டு காலம் வாழ்கையும் பிழைப்பும் என்னை எனது சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எடுத்து விட்டது.
வீட்டுக்குப் போகும் நாளில் எல்லாம் அம்மாவோடும் அப்பாவோடும் செலவிடவே நேரம் பத்தாத நிலையில் பால்பாண்டி டிரேடர்சும் அப்பாவோடு சைக்கிளில் போன நினைவுகளும் ஏறக்குறைய மறந்தே விட்டது.

இரண்டாயிரத்து மூன்றாம் வருட வாக்கில் நான் எங்கள் கம்பெனியின் திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது காலையில்
தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு –

“சங்கர், உங்களுக்கு ஒரு இன்ஸ்டாலேஷன் செட்யூல் ஆகி இருக்குங்க” மேரியின் அதே வழக்கமான சலிப்பூட்டும் குரல்

“அப்படியா.. கஸ்டமர் அட்ரஸ், காண்டாக்ட் போன் நெம்பர் எல்லாம் சொல்லுங்க மேடம்” அசுவாரசியமாய் காதைக் குடைந்து கொண்டே
நோட் பேடை கையில் எடுத்துக் கொண்டேன்.

“நோட் பண்ணிக்குங்க – எம்.எஸ் பால்பாண்டி டிரேடர்ஸ், பூக்கடை ரோடு, தாராபுரம். காண்டாக்ட் நேம் – மிஸ்டர். பால்பாண்டி

நிமிர்ந்து உட்கார்ந்தேன் – ‘பால்பாண்டி டிரேடர்ஸ்’… தாராபுரம்… உய்ய்ய்ய்…! வாயிலிருந்து உற்சாகமாய் விசில் புறப்பட்டது.

“ஹல்லோ.. சங்கர்..! வாட் ஈஸ் திஸ்???” மேரியின் குரலில் லேசான சூடு.

“இ..இல்ல அ..அயாம்.. சா.. சாரிங்க. அ.. அது வந்து தாராபுரம் எங்க சொந்த ஊரு. அதான் எக்ஸைட்மெண்ட்ல…” திக்கித் திக்கி வந்து விழுந்தது
வார்த்தைகள்.

“ம்ம்ம்.. இட்ஸ் ஓக்கே. டேக் கேர் ஆஃப் த இன்ஸ்டலேஷன். முடிச்சிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க. பை” தட்டென்று போனை அறைந்து சாத்தினாள்.

என்ன தான் நமக்கு தொழில்நுட்பங்கள் நிறைய தெரிந்திருந்தாலும், வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தாலும் அதை பக்கத்திலிருந்து
பார்க்க ஆட்களிலில்லாதது ஒரு கொடுமை. நமது திறனை நாம் அயல் ஆட்களிடம் நிரூபிப்பதில் இருக்கும் பெருமிதத்தை விட நமக்குத் தெரிந்த
நபர்களின் முன் அதை காட்டுவதில் ஒரு அல்ப திருப்தி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. கடைக்குப் போன என்னைப் பார்த்து அடையாளம்
தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்த அண்ணாச்சி ‘வாங்க சார். உட்காருங்க சார். டீ குடிக்கறீங்களா சார்’ என்று குழைந்த போது எனக்கு அதே அல்ப திருப்தி ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போனது.

“என்ன அண்ணாச்சி என்னை அடையாளம் தெரியலையா?” கையில் இருந்த டூல்ஸ் பேக்கை அவர் டேபிளின் மேல் வைத்துக் கொண்டே கேட்டேன்.

“யாரு…. அட! நம்ம மணி மவனா நீ. என்னப்பா அளே அடையாளம் தெரியாம மாறிட்டயே. டவுசர போட்டு மூக்குல ஒழுக்கிட்டு வந்து நிப்பா நீ..
இப்ப இஞ்சினியரா..”

அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் கணேசன். கொஞ்சம் நரை முடிகள் வாங்கியிருந்தார். கண்ணில் ஒரு திக்கான கண்ணாடி ஏறியிருந்தது. வழக்கமான அவரது டேபிளுக்கு பதில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் டேபிள் இருந்தது. அதன் அருகிலேயே இரண்டு அட்டைப் பெட்டிகள் – மானிட்டரும், சி.பி.யுவும்.

“சரி அண்ணாச்சி.. நான் சீக்கிரம் சிஸ்டத்த இன்ஸ்டால் பண்ணிடறேன்” திரும்பிப் பார்க்காமல் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கணேசனின்
இடத்திற்குச் சென்றேன்.

என்றுமில்லாத அதிசயமாய் கணேசன் பதட்டமாய் இருந்தார். என்னை முதலில் ஓரிரு வினாடிகள் வெறுமையாய்ப் பார்த்தார். மெதுவாய்
புன்னகைத்தார். அவரது கைகள் அந்த அழுக்கேறிய, கூர்மையான முனைகள் மழுங்கி ஒரு நீள் வட்ட வடிவத்துக்கே வந்து விட்ட – மழுங்கிப் போன
கிளிப்பில் கத்தையாய் சிட்டைகளை லூசாக பற்றியிருந்த – கார்ட் போர்டு அட்டையை இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் லேசாய் நடுக்கம் இருந்தது. அது முதுமை காரணமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னண்ணே… சவுக்கியமா இருக்கீங்களா”

அந்த அட்டையை டேபிளின் மேல் வைத்தார். எழுந்து நின்று அவரை விட உயரமாய் வளர்ந்து விட்ட என் தோள்களை இரு கைகளாலும்
பற்றினார். எனது இரு புஜங்களின் வழியே அவர் உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டே வந்து எனது இரு மணிக்கட்டுகளையும் பற்றினார்.
இடது கையில் புதிதாய் நான் வாங்கிக் கட்டியிருந்த டைட்டன் வாட்சை பார்த்தார். ஒரு பெருமிதமான புன்னகை அவரது முகத்தில் எழுந்தது.

“நல்லா இருக்கேன் தம்பி.. ” ஏதோ கேட்க வேண்டும் போல் அவரது முகம் என்னை எதிர்பார்த்தது.

“என்னண்ணே..” என்றேன் அவரது பழுப்பேறிய கண்களுக்குள் பார்த்துக் கொண்டே.

“அ..அது.. வ..வந்து…”

“சொல்லுங்கண்ணே”

“இந்தக் கம்பியூட்டரை எத்தனை நாளிலே படிக்க முடியும் தம்பி” அவரது கண்கள் என் முகத்திலிருந்து விலகி உள்ளே அண்ணாச்சியை ஒரு முறை
பார்த்தது.

“ஆப்பரேட் பண்ண எப்படியும் அடிப்படை தெரிஞ்சிருக்கணும்ணே. எப்படியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருசமோ ஆகலாம் – ஆர்வத்தைப்
பொருத்து” என்றேன். எனக்கு அந்தக் கேள்வியின் பொருள் புரியவில்லை.

அவர் முகத்தில் ஒரு ஆயாசம் தோன்றியது. எனது மணிக்கட்டுகளை விடுவித்தவர். அவர் சீட்டில் அமர்ந்தார். அந்த சிட்டை பேடை ஏக்கத்துடன்
பற்றிக் கொண்டார்.

அன்று நான் அந்த சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யும் போது கணேசன் கம்ப்யூட்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். இன்ஸ்டலேசன் முடிந்து
டேலி சாப்ட்வேரை திறந்து எப்படி கூட்டல் கழித்தல் கணக்கு போட வேண்டும், வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது என்பது எப்படி என்பதை
நான் விளக்கிக் கொண்டிருந்த போது அவரது கண்கள் ஒரு பசியெடுத்த புலியின் கூண்டுக்குள் தவறி விழுந்து விட்ட மானின் கண்களைப் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து கிளம்பும் போது கணேசன் என் தோளைப் பிடித்து இருத்தினார். அவரது மேல் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி எனது கையில் திணித்தார்.

“என்ன.. கணேசா.. இன்னும் ரெண்டு நாள்ல அந்த கம்பியூட்டர கத்துகிடுவியாலே… அந்த அட்டைய தூக்கி தூர போட்டுட்டு இனிம கம்பியூட்டர்ல வேல பாக்க கத்துக்கல” அண்ணாச்சி உற்சாகமாய் கணேசனிடம் சொல்லிக் கொன்டிருந்த போது நான் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன். பஸ்ஸில் தாராபுரத்திலிருந்து மூலனூர் வரும் வரையில் எனக்கு கணேசனின் கண்களே நினைவிலாடியது. வில்லுப்பாட்டு வித்வானை பாப் சாங் பாட நிர்பந்திப்பது போல் இருந்து அந்த சூழ்நிலை.

அதற்குப் பின் எனது பணிச்சூழல் என்னை இந்தியாவின் பரப்பெங்கும் மேற்கும்-கிழக்குமாய், வடக்கும்-தெற்குமாய் அலைக்கழித்தது. எத்தனையோ
ஊர்கள், எத்தனையோ கணேசன்கள், எத்தனையோ அனுபவங்கள்… போன மாதம் இரண்டு வார லீவில் மீண்டும் ஊருக்குப் போயிருந்தேன். எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எனக்கு தாராபுரத்தின் நினைவும், கணேசனின் நினைவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.
அவரைப் போய் சந்திக்கலாம் என்று கிளம்பினேன்.

இந்த ஏழு வருடத்தில் தாராபுரம் பெரிதாக மாறவேயில்லை. சாலைகள் மட்டும் கொஞ்சம் அகலமாகியிருந்தது. பால்பாண்டி டிரேடர்ஸ் கூட அதிகம் மாறவில்லை. கல்லாவில் அண்ணாச்சியின் சாடையில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே அண்ணாச்சியின் புகைப்படம்
ஒன்று மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது பார்வை கணேசனின் இடத்திற்குச் சென்றது – அங்கே அவர் இல்லை. அந்த டேபிளில் – நான் இன்ஸ்டால் செய்த சிஸ்டத்தின் முன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் கணேசனிடம் நான் முன்பு எப்போதும் பார்க்கும் வாஞ்சை இல்லை. டென்ஷனாக இருந்தான். டேலியில் ஏதோ கோளாரு போல அந்த மங்கிய ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டம் முன்பைப் போல இல்லை. முன்பு இருந்ததை விட பாதி தான் இருந்தது.

“என்ன சார் வேணும்?” கல்லாவில் இருந்த இளைஞன் கேட்டான்.

“இல்ல.. இங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… கணேசன்னு பேரு.. அவரைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக்
கொண்டே சொன்னேன்.

“ஓ… அவரா.. இருக்காரே.. உள்ள பாக்கிங் செக்சனில் இருக்கார். வரச் சொல்லவா..”

“இல்லங்க. வேணாம். நானே போய் பார்த்துக்கிறேன்”

கணேசன் கிழண்டு போயிருந்தார். நிறைய மெலிந்திருந்தார். கண்ணாடி பழுப்பேறியிருந்தது. அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி நடுங்கும் கைகளால் ஏதோ பருப்பை பொட்டலமாக மடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விரல்களின் இடுக்கில் அந்த பொட்டலம் விழ முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் நேரே அவர் முன் போய் நின்றேன். ஒரு சின்ன போராட்டத்துக்குப் பின் சனல் கயிரால் ஒருவழியாக பொட்டலத்தைக் கட்டி முடித்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“யேய்.. சங்கரு….என்னப்பா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே” அவரது கை அனிச்சையாக அவரது சட்டை பாக்கெட்டுக்குச் சென்றது.
காலியான பாக்கெட்டைத் தடவி விட்டு ஏமாற்றமாய் கீழிறங்கியது.

“அது… அண்ணாச்சி மவன் கொஞ்சம் வெறைப்பான ஆளு. மிட்டாய்க்கெல்லாம் சம்பளத்துல பிடிச்சிக்கிறாரு..” வரட்சியாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“பரவாயில்லண்ணே… வாங்க டீ சாப்பிடுவோமா”

“சரி வா..”

வெளியேறும் போது அவர் அந்த பய்யனைத் திரும்பிப் பார்த்தார் – அவன் இன்னும் டேலியோடு போராடிக் கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு
என்னைப் பார்த்தார். அதில் ஏதோவொரு செய்தி இருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு மனம் கணத்துக் கிடந்தது. ஒரு காலத்தில் இதே கடையில் கணக்கராய் இருந்தவர்.. இன்று இதே கடையில் தொழில் கற்றுக் கொள்ள வந்த சின்னப் பயல்களோடு சேர்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார். கால மாற்றம் தான் என்றாலும்.. நானும் கூட அவரின் இந்த நிலைக்கு காரணமாய் இருந்துள்ளேன் என்பது எனக்கு உறுத்தலாய் இருந்தது. எத்தனை கணேசன்களின் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் நான் உலைவைத்திருப்பேனோ என்ற கவலை என்னை வாட்டியது. நாங்கள் சாலையைக் கடந்து எதிரே கரூர் வைசியா பேங்கை ஒட்டி இருந்த பாய் கடைக்குப் போனோம்.

“என்னண்ணே இந்த வயசுக்கப்புறம் உங்கள பொட்டலம் மடிக்க விட்டுட்டாங்களே” எனக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

“அதனால என்னப்பா… அதுவும் ஒரு வேலை தானே” அவர் டீயை ஊதிக் குடிப்பதில் மும்முரமாய் இருந்தார்.

“இல்லண்ணே.. இதே கடைல நீங்க மதிப்பா சட்ட மடிப்புக் கலையாம கணக்கெழுதிட்டு இருந்தீங்க.. இப்ப அதே கடைல சின்னப் பசங்களோட
நின்னு வேல பாக்கீங்களே.. அதுக்கு நானும் ஏதோவொரு வகையில காரணமா போனது கஸ்டமா இருக்குண்ணே”

டீ தம்ளரை வைத்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தார். லேசாக சிரித்தார். அது என்னை சீண்டுவது போலிருந்தது.

“என்னண்ணே.. இப்படிச் சிரிக்கிறீங்க”

“பின்ன சிரிக்காம என்னப்பா… ஏதோ பழைய சிவாஜி படத்துல வரும் ரங்காராவ் நிலமையில நான் இருக்கதா நினைச்சியா நீ.. அது என்ன
சொல்லுவாங்க… ஆங்! வாழ்ந்து கெட்ட மாதிரி. வாழ்ந்தா தானே கெட முடியும். ம்ம்ம்…. அன்னிக்கு நீ இந்த கம்பியூட்டர போட்டுக் குடுத்துட்டு
போன நாள்ல எனக்கு ரொம்ப கஸ்டமாத் தான் இருந்தது. எத்தனையோ வருசமா இதே கடைல கணக்கெழுதிருக்கேன்… நான் படிச்ச படிப்பு வேற.. நான் போட்ட கணக்கு வேற… இது புதுசா வந்தது. எனக்கும் பயம் தான். ரெண்டு நா டயம் குடுத்தாரு அண்ணாச்சி. எனக்கு ஒரு எழவும் புரியலை. புரிஞ்சிக்கிடற வயசும் தாண்டியாச்சி. கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி பொட்டலம் மடிக்க போட்டாரு – சம்பளத்தயும் அதுக்கு தக்க கம்மி பண்ணிட்டாரு. எத்தனையோ வருசம் கூடவே வேலை பாத்த கடைப் பய்யன்களே ஒருத்தனும் ஏன்னு கேக்க வரல…”

டீ தம்ளரை கையிலெடுத்தவர் ‘சர்க்’ என்று உறிஞ்சி அதன் சுவையைக் கண் மூடி இரசித்தார். பின் தொடர்ந்தார்..

“கூட நின்னு ஏன்னு நியாயம் கேக்க நாதியில்லைங்கறது தான் எதார்த்தம். இந்த வயசுக்கப்புறம் என்னாலும் தனியா நின்று ரோசம் காட்ட முடியலை. வச்சிக் காப்பாத்த புள்ளைங்களும் இல்லை. ஏத்துக்கிட்டேன். வேற வழியில்லாம ஏத்துக்கிட்டேன். ஆனா.. எனக்கு இன்னிக்கு நடந்தது தான் எனக்குப் பதிலா புதுசா வந்திருக்கவனுக்கும் நடக்கும். சிட்டைல கணக்கெழுதிட்டு இருந்த என்னைக் கம்பியூட்டர் வந்து தூக்கி வீசிச்சி. கம்பியூட்டர்ல வேல பாக்கவன வேற எதுனா அதை விட பெருசா ஒன்னு வந்து தூக்கி வீசும். எனக்கு இந்தப் பிள்ளைய பாத்தா பாவமா இருக்கும். நான் நின்ன மேனிக்கு கீழ விழுந்தவன் – லேசாத் தான் அடிபட்டுச்சி. ஆனா.. ஒசரத்துல நின்னு கீழ விழுந்தா? அன்னிக்கும் ஏன்னு கேக்க நாதியத்து தான் நிக்கனும். நாமெல்லாம் கூலிக்காரங்க சங்கரு… நான் சின்னக் கூலிக்காரன்.. நீ பெரிய கூலிக்காரன். கூலிக்குத் தக்க அடி தான் விழும் தம்பி”

“நம்ம வீடுகள்ல பழைய பொருளைப் புது பொருள் வந்து மாத்தி வைக்கும். அதுக்கெல்லாம் உயிர் இல்லை தம்பி. ஆனா நமக்கு உயிர் இருக்கு.
குடும்பம் இருக்கு. நாம் கூட்டுக்குத் திரும்பினா வாயைப் பிளந்துகிட்டு குஞ்சுகள் காத்துக் கிடக்கும். நாமும் பழசாவோம்.. அறிவு பழசாகும்.. புதுசா
ஏதோவொன்னு வந்து நிக்கும். ஆனா.. புதுசை நாம் கத்துக்கற அளவுக்கு முதலாளிங்க யாரும் நமக்கு நேரம் தர்றதில்ல.. வேலை செய்யற நாள்ல கசக்கி பிழிஞ்சு நம்மோட சாரெல்லாத்தையும் உறிஞ்சிட்டு சக்கையா துப்பிடறாங்க. நாமெல்லாம் தனித்தனியா நிக்கறோம். தனித்தனியா
தோக்கிறோம். தனித்தனியா விழுந்திடறோம். பக்கத்தில் நின்னவன் விழும் போது நாமும் விழப்போறம் – நம்மையும் தள்ளி விடப்போறான்னு
புரிஞ்சிக்கிடறதில்லை.. தனித்தனியான மாடுகளை நாளுக்கொன்னா நரி மெஞ்ச மாதிரி ஆகுது நம்ம நிலமை” பேசி முடித்து விட்டு மிச்சமிருந்த
டீயை உறிஞ்சத் தொடங்கினார்.

எனக்கு பேச்சே எழவில்லை. அந்தக் கணத்தில் – இந்த வாழ்க்கை.. இந்த வசதி.. இந்த நாளின் எனது மேன்மை.. நானே சுயமாய் உருவாக்கியது என்று நினைத்த ஒரு அழகிய மாளிகை.. எல்லாம் என் கண்முன்னே நழுவிச் செல்வது போல் ஒரு காட்சி தோன்றியது. ஐயோ… நான் – நான் எனது இளமையெல்லாம் தொலைந்து.. ஒரு நடுவயதினனாய்.. தனியனாய்  நிற்கிறேன். என் காலடியில் பூமி நழுவிச் செல்கிறது. நான் கிழண்டு
போய் விட்டேன். நான் இனி இளைமை முறுக்குத் தெறிக்கும் பந்தையக் குதிரையல்ல. மட்டக் குதிரை. என்னால் இனி பந்தையத்தில் ஓட முடியாது. யாருக்கும் நான் தேவையில்லை.. என்னைச் சுற்றிலும் புதிதாய்ச் சில குதிரைகள்.. அவை என்னைப் பார்த்து சிரிக்கிறது. உறுதியான பல் வரிசை தெரிய சிரிக்கிறது.. அது – அது.. இல்லை.. அது குதிரைகளல்ல.. அங்கே கம்ப்யூட்டரில் டேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞன் போல் தெரிகிறது. இல்லை அது குதிரைகள் தான்.. இல்லை.. அது அந்தப் பையன் தான். அவன் தோள் மேல் அண்ணாச்சி அமர்ந்திருந்தார். அண்ணாச்சிகள் அமர்ந்திருந்தனர். கையில் ஏதோ உறுத்தியது.. அது.. இன்னொரு கை. அது யாருடைய கையோ.. திரும்பிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே இன்னொரு மட்டக் குதிரை. அதைத் தொடர்ந்து இன்னொன்று. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நாங்கள் ஓடினோம். அண்ணாச்சியை நோக்கி ஓடினோம்… அண்ணாச்சிகளை நோக்கி ஓடினோம்…

“தம்பி.. தம்பி..” கணேசன் என் தோளை உலுக்கிக் கொண்டிருந்தார். “என்னப்பா டீ கிளாஸைக் கீழ போட்டுட்டியே. ஒடம்பு சரியில்லையா?”

“இல்லை.. ஒன்னுமில்லை” முகம் முழுக்க வேர்த்திருந்தது. “சரி போலாம்”

“ம்ம்.. இந்தா.. இதை வச்சிக்க” அவர் எனது வலது கை உள்ளங்கையில் சில ஆரஞ்சு மிட்டாய்களை வைத்தார். என்னைப் பார்த்து திருப்தியாய் சிரித்தார். அது என்னை உணர வைத்த திருப்தி. திரும்பி கடையை நோக்கி நடந்தார்.

மே 25, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , , , | 5 பின்னூட்டங்கள்

சண்முகத்தின் கதை..!

“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.

“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”

“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.

“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா?”

“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.

சண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.

கடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”

‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.

“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.

“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.

“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.

“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.

“……”

“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.

சரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

“சரோ..”

“…..”

“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”

இருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள்? நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்
வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.

“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.

“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.

“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”

“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”

“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”

“இல்லடா.. சுசிய கொல்லனுமாம்”

“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே? இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு?”

“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.

“என்ன.. யாரையாவது கடிச்சிடுச்சா”

“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.

“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”

“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”

“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க? சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்

“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”

“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.

“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.

சீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முகத்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”

மாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –

“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.

“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.

“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

பின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.

வேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.

சண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து
கொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.

“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.

‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.

“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.

“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.

காரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –

“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு
ஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.

“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா? அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா? சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம்? கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச
பட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.

“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா..? செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா? உனக்கே அதெல்லாம் தெரியுமில்லே…”

“டே.. சாவறது என்ன அத்தன சுலபமா? சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”

சண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா? அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.

சண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.

மே 14, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , | 3 பின்னூட்டங்கள்

அவன்..!

காலையிலொன்றும் உச்சியிலொன்றும் மாலையிலொன்றுமாக நாளுக்கு மூன்று முறை பேருந்து வந்து செல்லும் கிராமம் அது. சூரியன் எட்டிப்பார்க்காத மூன்று மணிக்கே அந்த ஊர் விழித்துக் கொள்ளும். நாத்து நடுவது, களை பிடுங்குவது, மருந்தடிப்பது, மேய்ச்சலுக்கு ஆடு மாடுகளை ஒட்டிச் செல்வது, வேலாங்குளத்தில் விளைந்த கீரையை சந்தையில் விற்பது, என்று கிழடு கட்டைகளைத் தவிர ஊரே ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும். அந்த நேரத்திலேயே கந்தசாமி பாய்லரில் கொதிக்கும் தண்ணீரை பைப்பில் பிடித்து கண்ணாடித் தேனீர்க் கோப்பைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். இடது கை புறமாக பிளாஸ்டிக் கோப்பைகள் சில தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். கீழே சிலர் குந்தவைத்து உட்கார்ந்திருந்தனர்.

அங்கே தான் அவனும் இருந்தான்.
அவனுக்கு முழியே சரியில்லை. கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். சுற்றிலும் இருந்தவர்கள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தங்களுக்குள் தேனீர் அருந்திக் கொண்டே சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கோ நிலை கொள்ளவில்லை; காலை மாற்றி மாற்றி நின்று பார்த்தான். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது.
“கவுண்டரய்யா.. நீங்க என்ன சொல்லுங்க.. நம்ம கந்த்சாமி போடற டீய அடிக்கறக்கு இந்த சில்லாவுலயே வேற ஆளு கெடையாதுங்கறேன்” அழுக்கு முண்டா பனியன் ஒன்று கை வைத்த பனியன் போட்டுக் கொண்டு பெஞ்சியில் குந்தியிருந்த ‘கவுண்டரய்யாவைப்’ பார்த்து சிலாகித்துக் கொண்டது.

“இல்லாமையா பின்ன? சுத்துப் பட்டு ஊர்லயெல்லாம் மாதாரிகளுக்கும் நமக்கும் ஒரே கெளாசாம்பா.. நம்ம கந்த்சாமி தான் இன்னும் சுத்தபத்தமா கட நடத்திட்டிருக்கான்..” மண்டைக்கு மேலிருந்த மயிர் நரைத்துப் போன கவுண்டரைய்யா, தனக்கு மண்டைக்குள்ளும் நரைத்துப் போய் விட்டதென்பதை உணர்த்தியது.

இடையில் புகுந்து கொண்ட கந்தசாமி அவன் பங்குக்கு,
“சுத்தந்தானுங்களே முக்கியம்.. எங்கப்பாரு காலத்திலேருந்தே நாங்க சாப்பாட்டுக் கட நடத்தறோம்.. அவரு காலத்திலேயே மாதாரிகளுக்குத் தேங்காச் செரட்டைல தான் டீ குடுப்போம்.. ஏதோ இன்னிக்கு காலம் மாறுனதால பிளாஸ்டிக் தம்ளர்ல குடுக்கறோம்.”
காலை நேரமானதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை – உள்ளே போன ஆட்டையோ கோழியையோ வெளியே தள்ள சூடான டீ அவசியமாக இருந்ததால் சனக் கூட்டம் மற்ற நாட்களை விட அதிகமாகவே இருந்தது. அதில் சிலர் இந்த ‘சுத்தப் பேச்சில்’ கலந்து கொண்டு தங்கள் ஊர் சுத்தபத்தமாக இருக்கிறது என்பதில் தங்களுக்கு இருந்த பெருமிதத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அவனுக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டதோ என்னவோ தன்னையே மறந்து விட்டான் போல.. அவன் கால்களுக்குக் கீழே கிடக்கும் மலத்தை மிதிப்பதைக் கூட உணராமல் முறைத்துக் கொண்டே நின்றான்.. முகத்தின் பாதியைக் கண்களே எடுத்துக் கொண்டது போல அப்படி ஒரு முறைப்பு!

அந்தக் கூட்டத்தில் சிலருக்கு இந்தப் பேச்சுக்களில் சுத்தமாக ஒப்புதலே இல்லை.. ஆனாலும் ‘ஐயாவை’ எதிர்த்துப் பேச பயந்து கொண்டு வாயை  மூடிக் கொண்டு நின்றனர். இவன் அவர்களையும் பார்த்தான் – அதே கோபத்தோடு. எதிரிகள் மேல் வரும் ஆத்திரத்தை விட இப்படி பேசாமல் கழுத்தறுக்கும் கோழைகள் மேல் தான் வெறி அதிகம் வரும் என்பது எத்தனை உண்மை!

அவன் ஒரு முடிவோடு எழுந்தான். தன்னுடைய இறகுகளை படபடவென அடித்துக் கொண்டே பறந்து போய் கவுண்டரய்யாவின் டீ கிளாசின் மேல் உட்கார்ந்தான்.

“அடச்சீ… இந்த ஈச்சித் தொல்லை தாங்கலப்பா” கவுண்டரய்யா சலித்துக் கொண்டே அவனை விரட்ட, அவன் நேரே போய் முண்டாசுக்காரரின் கிளாசின் விளிம்பில் உட்கார்ந்தான். அவனும் விரட்டியடிக்கவே… அங்கே இது வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தவன் ஒருவன் தம்ளரிலும் போய் உட்கார்ந்தான்.

அவர்கள் மீண்டும் தேனீரின் சுவையை சிலாகித்துக் கொண்டனர்!
ஒன்றும் பேசாதவன் எல்லாவற்றையும் கவனித்தான். அவன் முக பாவனையில் இருந்து வெட்க்கப்பட்டானா இல்லை அவமானமடைந்தானா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே நடையைக் கட்டினான்.

அவன் இப்போது சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான் – காலில் இருந்த மலம் இப்போது சுத்தமாகி விட்டிருந்தது. முன்னங்காலை வாயில் வைத்துப் பார்த்தான் – தேனீர் கசந்தது.

ஜனவரி 19, 2010 Posted by | short story | , , | 1 பின்னூட்டம்

கடந்து போன ஆண்டுகள்; நிலைத்து நிற்கும் எதார்த்தங்கள்..!

கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அனாயசியமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி அவளே எனக்கு அழகி.

இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெரிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!

“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.

“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.

பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேனீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கிரகம் கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.

தேனீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.

“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.

“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.

“பாண்டிச்சேரிங்க”

“என்ன விசமா?”

“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”

“தங்கறதெல்லாம்?”

“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.

சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள் தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கே தான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நன்பர்கள் தான் இருந்தனர். அதில் கோபால் மிக  நெருங்கிய நன்பன். அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் கலைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்

“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்

“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை

“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வென்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.

“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.

“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்

“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.

“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீ வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..”  வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…

“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்.. கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.

பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.

“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெரிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு  மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.

அங்கே விவசாயம் தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணி தான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தே தான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீன் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.

“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்”  தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.

ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும் தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள் தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தா தான். அதற்குப் பின் ஒரு இரண்டு  வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.

என் பெரியப்பாவின் மகள் தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்கா தான் எனக்கு அம்மா.

“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கைய்யால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பா தான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.

ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.

பண்ணிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவும் எவரும்  வருவதில்லை.

போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வரும் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நன்பர்களே கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் காரியங்களும் கூட நன்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.

எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவர் சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.

வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தரியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.

பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.

அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.

மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.

முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?

ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின்அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.

“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள் தான் அவை.

“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”

“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது.  அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.

“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.

“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்பஎங்க இருக்காங்க?”

“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியே படலியா?”மௌனமாக இருந்தேன்.

“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”

“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”

“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டு தான் வருவேன்”

“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”

“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸ¤ல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”

“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.

நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.

“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”

டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயனிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.

இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.

“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”

“வெவசாயமெல்லாம்?”

“அதெல்லாம் ஓய்ஞ்சி போயில் பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”

“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”

“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரனும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹ¤ம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”

இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுன்னாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காறை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற என்னம் இப்போது மாறி விட்டது.

“சரி போலாம் கோபாலு”

“ஏண்டா உள்ளெ போகலியா”

“போயி?”

அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில் தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பை நோக்கி நடந்தோம்.

சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..

“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.

“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”

“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோனி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில் தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.

“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”

“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”

அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. ·பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் தான்.

அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.

“சரி போலாம்” என்றவாரே வெளியில் வந்தேன்.

பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,

“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன  பொடியனெல்லாம் போடா வாடான்னு தான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்வே கெடைக்காது.”

பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவொன்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.

கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கே தான் தங்கியிருந்தேன்.

இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரை தான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள் தான் புழுத்து நாறுகிறது.

ஜனவரி 13, 2010 Posted by | culture, short story | , , , , | 7 பின்னூட்டங்கள்

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் ”

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்ரெம்பர் 15, 2008 Posted by | culture, short story | , | 20 பின்னூட்டங்கள்