கார்க்கியின் பார்வையில்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்