கார்க்கியின் பார்வையில்

இந்தியா விற்பனைக்கு..!!

சில மாதங்கள் முன்பு பி.டி கத்தரிக்காய்க்கு சந்தையில் விற்க அனுமதி வழங்குவதற்கு எதிராக இங்கே கடும் அமளி ஏற்பட்டது. ஜனநாயக
முற்போக்கு சக்திகளோடும், விஞ்சானிகள், அறிவுத் துறையினர், விவசாயிகள் பொது மக்கள் என்று பரவலாக பி.டி கத்தரிக்காய்க்கு ஒரு கடும் எதிர்ப்பு உருவாகியது. பரவலான எதிர்ப்புக் குரல்களோடு  சேர்ந்து கொண்டு என்.ஜி.ஓக்கள் சிலரும் கூட வித விதமான வடிவங்களில்
பி.டி.கத்தரியை எதிர்த்து போராடிய காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கொஞ்ச நாட்கள் மக்கள் கருத்தறியும் கருத்தரங்கங்கள் என்ற பெயரில் நடத்திய
நாடகங்களையும் தொடர்ந்து பி.டி கத்தரி விஷயத்தில் ‘பொதுக்கருத்து’ ஒன்றை எட்டும் வரையில் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அறிவித்திருந்தார். உடனே ஆங்கில ஊடகங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக என்.ஜி.ஓக்கள் தமது வெற்றியை அறிவித்துக் கொண்டாடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

இதுவரையில் நீங்கள் கேட்டது திரைப்படத்தின் இடைவேளை வரையிலான கதையைத் தான். இடைவேளைக்குப் பின் தான் கதையில் மிக முக்கியமான திடுக்கிடும் திருப்பங்களும் சதிகளும் அரங்கேறுகிறது.  கடந்த மாதத்தின் மத்தியில் இந்தியா அமெரிக்காவோடு விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மத்திய அமைச்சரவையின் இரகசிய ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்கிறது. இதனடிப்படையில் இந்திய – அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கார்கில், மான்சாண்டோ  போன்ற பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களை பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறது.

மேலும் அமெரிக்காவோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு விவசாயத்தில் அன்னிய நேரடி தலையீட்டை அனுமதிப்பதற்கும் ஓசையில்லாமல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நேரடியாக நமது விளைநிலங்களின் மேல் கைவைக்க முடியும். போதிய சட்ட அறிவு இல்லாத ஏழைவிவசாயிகளிடம் நேரடியாக ஏமாற்று ஒப்பந்தங்களைப் போட்டு நல்ல செழிப்பான விளைநிலங்களில் மரபணு மாற்ற விதைகளையும் வீரிய சக்தி கொண்ட உரங்களையும் கொட்டி விஷமாக்கப் போகிறார்கள்.

மேலும் ஏற்கனவே இருந்த தேசிய உயிரிதொழில் நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தில் ( National Biotechnology Regulatory Authority) திருத்தங்கள்
செய்து, உயிரிதொழி நுட்ப ஒழுங்காற்று சட்டம் எனும் பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முயற்சிகள் நடந்து
வருகிறது.

இந்தச் சட்டம் உண்மையில் எவ்வகையிலும் ‘ஒழுங்காற்றப்’ போவதில்லை. இது உயிரிதொழில் நுட்பத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்துபவர்களையும் ஆராய்ச்சியையும் ‘ஒழுங்குபடுத்துவது’ போல ஒரு பாவ்லா காட்டுகிறது. அதாவது மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது – ஆனால் அதற்காக அது ஏகப்பட்ட ஓட்டைகளுடனும், விதிகள் மீறப்பட்டதை சட்டரீதியாக நிரூபிப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கும்படியும் சிக்கலான ஒரு நடைமுறையை முன்வைக்கிறது.

மறுபுறம், மிகக் கச்சிதமாக பொதுமக்களைக் கவ்வுகிறது. அந்தச் சட்டத்தின் 13(63)ம் பிரிவின் படி, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஒருவர் எதிர்த்து பேச வேண்டும் என்றாலே தகுந்த ‘அறிவியல்’ ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் சிறை தண்டனையோ அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மற்றொரு பிரிவின் படி, மாநில அரசாங்கம் மரபணு தொழில்நுட்பம் தொடர்பாக கொண்டு வரும் எந்தவிதமான சட்டத்தையும் மத்திய அரசின் இந்தச் சட்டம் அமுக்கிவிடும். இதன் 27(1) பிரிவின் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூட மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் செல்லுபடியாகாது.

இப்போது ஜெயராம் ரமேஷ் பின்வாங்கிய சூழலையும் அந்தப் பின்வாங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். மக்களிடையேயும், விஞ்ஞான அறிஞர்கள் மட்டத்திலும், விவசாயிகள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு மற்றும் சில மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காயை தடை செய்யும் அரசாணை வெளியிட்டிருந்த சூழலில் தான் மத்திய அரசு பின்வாங்கியது. இப்போது போடப்படவிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க எத்தனிக்கிறார்கள்.

நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் விவசாய நிலங்களை ஒப்படைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் – அவர்கள் விளைவிக்கும் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்தும் போது எதிர்ப்புகள் உருவானால் அதை அடக்கி ஒடுக்க ஒரு சட்டம். சுதந்திரச் சந்தையைப் பற்றி வாய்கிழிய பேசும் ஆங்கில ஊடகங்கள் இந்த சுதந்திரச் சந்தையில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. நாளைக்கு பி.டி காய்கறிகளையும் அரிசியையும் வாங்க மறுப்பீர்களானால் உங்கள் மேல் கூட இந்தச் சட்டம் பாயும். நீங்கள் எதைத் தின்ன வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க விடாத சுதந்திரம் தான் தனியார்மய தாசர்கள் பேசும் சுதந்திரச் சந்தை.

இது முதலாளிகளுக்கான – அதுவும் அமெரிக்க பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான – சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டம். மக்கள் மேல் மரபணு மாற்றப் பயிர்களை தினிக்க பின்வாசல் வழியாய் நுழையப்போகும் கருப்புச் சட்டம். நேற்றைய செய்திகளில் குஜராத்தில் பி.டி பருத்தியில் அதன் விஷத்தையும் முறியடித்து தாக்கும் காய்ப்புழுக்கள் தோன்றி பரவுகிறது எனும் செய்தி படத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், இப்படிச் செய்தி வெளியிடுவதும், அதை நீங்கள் வாசித்து இன்னொருவரிடம் சொல்லுவதையும் கூட குற்றமாக்கி
தண்டிக்க முடியும்.

அவுரிச் செடி பயிரட மறுத்த விவசாயிகளை அன்றைக்கு பிரிடிஷ் காலனிய போலீசு அடித்து உதைத்து கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடவும் – அதை சந்தையில் நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. அது காலனிய யுகம் என்றால் இது மறுகாலனிய யுகம். முதலில் பி.டி கத்தரியை அனுமதிக்கப் போவதாகச் சொல்லி ஒரு முன்னோட்டம் பார்த்து விட்டு; அதற்கு எந்த விதமான எதிர்ப்பு எந்த வகையிலெல்லாம் வருகிறது என்று ஆழம் பார்த்து விட்டு – இப்போது எதிர்ப்புகளை முற்றிலும் ஒடுக்க
பக்காவான சட்டங்களை இயற்றி நேரடியாக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது ஆளும் கும்பல்.

மக்கள் எதிர்ப்புகளை மக்களோடு மக்களாக ஊடுருவி அந்த எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திச் சென்று சரியான தருணத்தில் கைகழுவி மக்களின் முதுகில் குத்தும் துரோகத்தை அன்றைக்கு காலனிய காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசு செய்தது என்றால் – இன்றைக்கு அதே வேளையை என்.ஜி.ஓக்கள் செய்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு மேஸ்திரி வேலை பார்க்கிறது. பாத்திரங்கள் மட்டும் தான் மாறியிருக்கிறது – கதை அப்படியே தான் தொடர்கிறது.

பி.டி கத்தரியை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு – மத்திய அரசு தற்காலிகமாய் தள்ளிவைக்கிறோம் என்று சொன்னதையே வெற்றியாக அறிவித்து விட்டு இப்போது அரசு மீண்டும் கருப்புச் சட்டங்களின் மூலம் மரபணு தொழில்நுட்பத்தை பின்வாசல் வழியாக அனுமதித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு வரையில் பிலிம் காட்டிக் கொண்டிருந்த என்.ஜி.ஓக்கள் இப்போது தலைமறைவாகி விட்டார்கள்.

இது உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய தருணம். தமக்குள் ஒன்றுபட்டு இந்த அமெரிக்கதாசர்களைத் தோற்கடித்து தூக்கியெறியாத வரை விடிவுகாலம் கிடையாது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் மெய்யான நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஒன்றுபட்டு போராடி மக்கள் எதிரிகளையும் துரோகிகளையும் முறியடிக்க முன்வர வேண்டும்.

மார்ச் 24, 2010 Posted by | politics | , , , , , | 5 பின்னூட்டங்கள்

நித்ய லீலைகளும் சாரு நிவேதிதாவும் பின்னே சில எதிர்வினைகளும்..!

காலை வழக்கம் போல பக்கத்துப் பெட்டிக்கடையில் முரசொலியும் தந்தியும் வாங்கச் சென்ற போது கடைக்காரர் ‘பாஸ்.. இன்னிக்கு தினகரன் வாங்குங்க.. செம்ம மேட்டரு’ என்றார்.. அந்த நொடியிலிருந்தே இந்த நாள் ஒரு இனிய நாளாகத் துவங்கியது. நித்தியின் நித்திய லீலைகள் ஒருபக்கம் என்றால் ‘பகவான்’ கல்கி வேறு இன்னொரு பக்கம் சீப்பட்டுக் கொண்டிருந்தார். வடக்கில் இச்சாதாரி சாமி என்றொருத்தன்… ம்ம்… இந்த வாரம் சாமியார் வாரம் போலிருக்கிறது.

காலையிலிருந்து இந்த நிமிடம் வரை நான் சந்தித்த நபர்களெல்லாம் ஒரு வித பரவசத்திலிருந்தார்கள் – பின்னே அது நடிகை ரஞ்சிதாவாச்சே. அப்போதே எனக்கு பதிவுலகில் இந்த மேட்டருக்கு என்ன விதமான எதிர்வினைகள் இருக்கும் என்று ஒருவிதமான அனுமானம் இருந்தது. பதிவர்கள் அதைப் பொய்யாக்கிவிடவில்லை என்பதை மாலை பிரவுசிங் செண்டரில் ஒரு ரெண்டு நேரம் செலவழித்த பின் உறுதியானது.

சென்ற மாதம் என்.டி திவாரி குத்தாட்டம் போட்டு மாட்டிக் கொண்ட போது பல செயின் மெயில்கள் வந்தது. அதிலாகட்டும் இப்போது இந்த சம்பவத்திலாகட்டும் ஒரு கணிசமான பிரிவினரின் எதிர்வினைகளில் சூடான பெருமூச்சை உணர முடிகிறது. ஒரு நன்பர் தேனீர் கடை உரையாடலின் போது சொன்னார் –

“என்பத்தஞ்சு வயசுல கெழவன் என்னா ஆட்டம் போட்டிருக்கான்? ச்சே.. மனுசன் என்னா சாப்டறான்னே தெரியலையே பாஸு..”

இன்றைக்கு வலைத்தளமொன்றில் ஒரு அன்பர் ‘ரஞ்சிதா செம்ம வெயிட்டாச்சே.. இவன் எப்படி சமாளிச்சான்?” என்று மறுமொழி எழுதியிருக்கிறார்.

“என்ன தான் சாமியாருக்கு சக்தியிருந்தாலும் மாத்திரைய போட்டுட்டு தான் களத்தில இறங்கியிருக்காரு” என்கிறார் டீக் கடையொன்றில்
மாலை முரசு வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்.

வலைத்தளங்களில் கண்ட வேறு சில மறுமொழிகளின் பின்னேயும், பல இடங்களில் கேட்க நேர்ந்த உரையாடல்களின் பின்னேயும் கூட
இதேவிதமான வெப்பப் பெருமூச்சுகளைக் காண முடிந்தது. செக்சின் மேல் தமக்கு இருக்கும் அச்சம், பிரமிப்பு, தனக்குக் கிடைக்க வில்லையே என்கிற பொறாமை போன்றவையே அம்மறுமொழிகளின் உள்ளார்ந்த அர்த்தமாக இருக்கிறது. பீனிஸ் என்வி போல ‘இந்த’ பொறாமைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் போடும் கூச்சல் என்பது பெண் நாயைக் கவர நடந்த சண்டையில் தோற்றுப் போன சொரி நாய்கள் தெரு முனையில் நின்று ஊளையிடுமே அப்படித்தான் இருக்கிறது.

கைக்கும் வாய்க்கும் பத்தாத நடுதர வர்க்க அல்ப்பைகளுக்கு தமது பிரச்சினைக்கு நேரடிக் காரணம் யார் என்பதை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது. ஒரு சாமானிய உழைக்கும் வர்க்கத் தொழிலாளிக்குத் தெரியும் தனது இல்லாமைக்கு யார் காரணம் என்று. படித்த நடுத்தர் வர்க்கமோ படித்த முட்டாள்கள்; கண்ணிருந்தும் குருடர்கள்.. இவர்களுக்கு மேல் வர்க்கத்தவர்களைப் பற்றிய கிசு கிசுக்களில் தான் அக்கறையே ஒழிய தன்னை வஞ்சித்த அந்த வர்க்கத்தை தோற்கடித்து தூக்கியெறிய வேண்டும் எனும் முனைப்போ அக்கறையோ கிடையாது. இந்தக் கிசு கிசுக்கள் தரும் கிளுகிளுப்பில் இரண்டொரு நாட்களை ஓட்டி விட்டு அடுத்து ஒரு சத்தியானந்தத்தையோ வித்தியானந்தத்தையோ தேடி ஓடிவிடும்.

அடுத்து சில அலுக்கோசுகள்.. “என்ன இருந்தாலும் சாமி செஞ்சதெல்லம் ஒரு தப்பா? அவரு ஒரு ஆண் – அவள் ஒரு பெண் – அவரிடம் காசு இருந்தது – அவளுக்கு அது தேவையாய் இருந்தது – அவருக்கு அரிப்பு இருந்தது – இவள் அதைச் சொரிந்து விட தயாராய் இருந்தாள்.. அது எப்புடி சன் டீவி பெட்ரூமுக்குள்ள போயி கேமரா வைக்கலாம்? மனித உரிமை மாட்டு உரிமை லொட்டு லொசுக்கு” என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்..

ஏண்டா… அந்தாளு நான் சாமி.. பிரம்மச்சாரி… ரொம்ப யோக்கியன்.. நீயும் வா யோக்கியனா இருக்க சொல்லித் தாரேன்னு சொல்லி காசு
வாங்கியிருக்கான்; என்னய பாரு எம் மூஞ்சிய பாருன்னு ஊரெல்லாம் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டி நல்லா கல்லா கட்டியிருக்கான்; அஞ்சு
வருசத்துக்கு மின்ன அட்ரஸ் இல்லாம அலைஞ்சிட்டிருந்த லூசுப் பயலுக்கு இன்னிக்கு ஆயிரங் கோடி சொத்திருக்குது.. இதெல்லாம் எங்கயிருந்த எப்படி வந்தது?

இதெல்லாம் அவனுடைய ஒழுக்க சீலன் முகமூடியின் மேல் நிறுவப்பட்ட இமேஜ் காரணமாகத்தானே சாத்தியப்பட்டது? இந்த அஞ்சு வருசத்தில் அவன் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளும், உலகெங்கும் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளும் எந்த அடிப்படையில் அவனால் சேர்க்க முடிந்தது? அந்த அடிப்படையே நொறுங்கிக் கிடக்கும் போது உனக்கு அவனது தனி மனித உரிமை பரிபோனது தான் பிரச்சினையா? லட்சக்கணக்கானவர்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது உனக்கு பிரச்சினையாக இல்லையா?

எல்லா கார்பொரேட் சாமியார்களுக்கும் அமெரிக்கா தொடங்கி உலகெங்கும் கிளைகள் தொடங்கி ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் நிறுவி விடுகிறார்கள்.. பத்து வருடங்களுக்குள் அறுவடையைத் தொடங்கி விடுகிறார்கள். ஹவாலா பணத்தைக் கொண்டு வருவது, கருப்பை வெள்ளையாக்குவது போன்ற பொருளாதாரக் குற்றங்கள் மூலமாகத்தான் ஓரு சில ஆண்டுகளிலேயே ஆயிரக்கணக்கான
கோடிகளில் புரளுகிறார்கள். இது அரசுக்குத் தெரியாமல் இருக்க அது ஒன்றும் வாயில் விரல் வைத்துச் சூப்பும் பாப்பா அல்ல; அரசுக்குத்
தெரியும். தெரிந்தே தான் இவர்களை நீடிக்க அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பஃபர் ஸோன் (buffer zone) தேவைப்படுகிறது. மக்களின் கோபம் தம்மை நோக்கித் திரும்பாமலிருக்க இது போன்றவர்கள் ஆளும் வர்க்கத்துக்குத் தேவை.

அட லூசுகளா.. நீங்கள் கண்ணை மூடி மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்களேடா.. கண்ணைத் திறந்து பாருங்களடா என்று கத்த வேண்டும் போல தோன்றுகிறது.

சில நாட்கள் முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களிடம் சென்று தான் பேசி அவர்கள் மீட்டெடுத்து சீர்படுத்துவதாகச் சொன்னானே.. அதன் அர்த்தம் இது தான். யார் யாரை மீட்டெடுப்பது; யார் யாரை சீர்படுத்துவது – தில்லிருந்தால் அவன் மட்டும் அங்கே கால் வைத்துப் பார்க்கட்டும் தெரியும் சேதி. எவனுக்கு வேண்டும் இங்கே நிம்மதியும் அமைதியும்? இந்த சாமியார் பாடுகள் உண்டாக்கப் பார்க்கும் அமைதி மயான அமைதி.. இவர்கள் ஏற்படுத்தப் பார்க்கும் நிம்மது மரணத்தின் நிம்மதி. இங்கே தனி மனித உரிமையாவது வெங்காயமாவது – கோடிக்கணக்கான மக்களின் உரிமையே நாசப்படுத்தப்பட்ட பிறகு தனிமனித உரிமையாம். அயோக்கிய ராஸ்கல்ஸ்

சில அப்பாவி நல்லவர்கள் சொல்கிறார்கள் “பெரியார்வாதிகளின் வேலையை இந்த சாமியார்கள் குறைத்து விடுகிறார்கள்” என்று.

இதெல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமா? உலகம் தட்டை என்று நம்பியது வேண்டுமானால் நம்பிக்கை எனலாம் – அது உலகம் உருண்டை என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெட்டத் தெளிவாக நிரூபனமாகும் ஒரு நாளுக்காக காத்திருந்து கலைந்து போய்விடும். ஆனால் இதுவோ வெறும் நம்பிக்கை அல்ல. நீங்கள் கரடியாய் கத்தினாலும் சரி.. ஜெயேந்திரன், பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, நித்தியானந்தன், இச்சாதாரி, கிச்சாதாரி என்று ஆயிரம் – லட்சம் சாமியார்கள் அம்பலப்பட்டு ஜட்டி கிழிந்து நின்றாலும் கூட – அடுத்த ரெண்டாவது வாரம் ஒரு xxxஆனந்தன் பின்னே போய் விழுவார்கள். அவனும் அயோக்கியனாகத்தானிருப்பான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

இந்த சாமியார்களெல்லாம் சல்லிவேர் தான். இந்த மதம், அதன் நம்பிக்கைகள், அதன் புரோக்கர்கள் என்று இதெல்லாம் நிலைத்து நிற்க
காரணமாயிருக்கும் இந்தப் பொருளாதாரச் சூழல் தான் ஆணி வேர். உடலுறவும் சுய இன்பமும் அளிக்கும் கண நேர நெகிழ்வுணர்ச்சியும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் இரண்டரை மணி நேர ஆன்மீக உரை அளிக்கும் புல்லரிப்பு ஒன்று தான் – புறநிலையில் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஏதோவொன்றில் இளைப்பாருதல் தேவையாயிருக்கிறது – இரு கரம் நீட்டி அணைத்துக் கொள்ள அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன்; அம்பானியும் மன்மோகன் சிங்கும் ஏறி மிதித்த வலி தெரியாமல் வாழும் கலையைச் சொல்லித் தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிடுகிறார் ஸ்ரீ ஸ்ரீ.

கான்சர் முற்றிப் போன நிலையில் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக செயலிழக்கும். அப்போது கான்சருக்கு மருந்தளிப்பீர்களா அல்லது கைவலிக்கு அமிர்தாஞ்சன், இடுப்பு வலிக்கு மூவ், தலைவலிக்கு ஆக்சன் பைவ் ஹண்ட்ரட் என்று தனித்தனியாக மருத்து சாப்பிடுவீர்களா? “நோய் முதல் நாடி” – இந்த கார்ப்பொரேட் சாமியார் நோயின் மூலம் இந்த சமூகப் பொருளாதார அமைப்பு! இது நீடிக்கும் வரை இவர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

கேள்விப்பட்டிருப்பீர்களே – இந்த வருடம் சபரி மலையில் போன வருடத்தை விட கூட்டமாம். இத்தனைக்கும் போன வருடம் தான் மகர ஜோதியின் பூலவாக்கு அம்பலமானது.

பெரியார் இயக்கத் தோழர்களே.. இன்னமும் நீங்கள் இருளில் தொலைந்த சாவியை வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

அடுத்து சாரு நிவேதிதாவின் நிலை தான் உள்ளதிலேயே மிக வேடிக்கையாய் இருக்கிறது. இந்த மொத்த திரைப்படத்தில் கடைசியில் சீரியஸ் காமெடியனானது சாரு நிவேதிதா தான்.  இத்தனை நாட்களாக ஒரு அயோக்கியனுக்கு பிரண்ட் அம்பாஸிடராக இருந்து விட்டு, அம்புலிமாமா பாலமித்ரா பூந்தளிர் ரேஞ்சு கதைகளை உற்பத்தி செய்து விட்டுக் கொண்டு அந்த நாதாரி நாய்க்கு விளக்குப் பிடித்துக் கொண்டிருந்த எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் எப்படி இந்தாளால் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. இயற்கை அவரின் இதயத்தை டில்லி எருமையின் தோலைப் போல படைத்திருக்குமோ என்னவோ.

இவரு ரொம்ப நல்லவராம்.. ஏமாளியாம்.. ஏமாந்துட்டாராம் – எருமை ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்கிறார் – இதையும் கூட இலக்கியம் என்பார்கள் அவரது சொம்பு தூக்கிகள்!

முதல் முறை தேட்டைக்குப் போகும் கள்ளனுக்கு உறுத்தும் – மனசு குத்தும்; அதே இருபதாவது முறை களவெடுக்கப் போனவனுக்கு? அதையே உணர்வுப் பூர்வமாய் ஆத்மார்த்தமாய் படைப்பூக்கத்தோடு மனப்பூர்வமாய் செய்வான். நீங்கள் பார்த்திருப்பீர்களே, சி.பி.எம் கட்சியினர் சிங்கூரிலும் நந்திகிராமிலும் அவர்கள் கட்சியினர் நடத்திய படுகொலைகளை எத்தனை உணர்வுப் பூர்வமாய் தற்காத்துப் பேசினார்கள் என்று. நீங்கள் படித்திருப்பீர்களே, எத்தனை முறை முறியடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டாலும் சொரனையே இல்லாமல் புளுகுகளையே எழுதிவரும் ஜெயமோனை. சா.நி கூட அப்படித்தான் – மரத்துப் போயிருக்கும். அவரைச் சொல்லும் எந்த வார்த்தைகளும் அவரது உள்ளத்தைக் குத்தாது. அதிகமாகப் போனால்
அப்ஸொலூட் வோட்கா ரெண்டு ஷாட் – ஸ்பான்ஸர் செய்யத்தான் இணையக் கோமாளிகள் சிலர் இருக்கிறார்களே.

இது ஜாடிக்கேத்த மூடி. கிருஷ்ணனின் கதையை வியாஸன் எழுதியதைப் போல – ராமனின் கதையை வால்மீகி எழுதியதைப் போல. வியாஸர்களுக்கு கிருஷ்ணன்கள் தேவை – இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவார்கள். கிருஷ்ணனின் இருப்பை வியாஸனும், வியாஸனின் இருப்பை கிருஷ்ணனுமே உறுதி செய்து கொள்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன், இன்னும் சில மாதங்கள் போய் வேறு ஏதோவொரு ஆனந்தாவுக்கோ இல்லை இதே நித்தி ஒரு வேளை சுப்புணியைப் போல ஜஸ்ட் எஸ்க்கேப்பாகி விட்டால் அவருக்கேவோ மீண்டும் சாரு விளக்குப் பிடிக்கப் போவார்.
காலி டப்பாவுக்குள் எதையாவது போட்டால் தானே சப்தம் வரும்? சாருவுக்குள் எந்த எழவாவது இறங்கினால் தானே இலக்கியம் பீரிட்டடிக்கும்? வயது வேறு ஆகிவிட்டது இனிமேலுமா விந்து வங்கிக்குப் போய்க் கொண்டிருப்பது? ச்சே.. தமிழ் நாட்டு
தாஸ்த்தாவ்யெஸ்க்கிக்கு நேர்ந்த கதி இத்தனை கேவலமாய்ப் போயிருக்க வேண்டாம்.

அவர் மிக குழம்பிப்போய் இருக்கிறார். அனேகமாக நித்தியைக் கூப்பிட முயற்சித்து தோற்றிருப்பார்; முதலில் ‘அயோக்கியன், இரட்டை
ஆயுள் தண்டனை’ என்று ஒரு நாலு வரி போட்டுத் தூக்கினார். அடுத்து தியானபீட இணைய தளத்தில் வெளியான அறிவிப்பைப் பார்த்திருப்பார் – உடனே ‘அயோக்கியத்தனம் தான்… ஆனாலும் சாமிக்கு நெம்ப சக்தி’ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு கூக்ளி போன்றது – நாளைக்கு இப்படியும் சாயலாம் அப்படியும் சாயலாம். என்ன இருந்தாலும் பின்னவீனத்துவ இலக்கியவாதியில்லையா.. எத்தன பின்னவீனத்துவம்
படிச்சிருப்பாரு? இது கூட செய்யலைன்னா அப்புறம் அந்த எழவை படிச்சுத்தான் என்னாத்துக்கு?

கடைசியாக…

ஓயாமல் அலறும் கைப்பேசியால் அவதியுறும் லக்கி லூக் மெய்யாலுமே பரிதாபத்துக்குரியவர். என்ன செய்ய லக்கி, நாயை அடித்தால் பீயைச் சுமக்கத்தானே வேண்டும்?

– கார்க்கி

குறிப்பு: ஹலோ… இருங்க பாஸ் இன்னொரு மேட்டரையும் கேட்டுட்டு போங்க; சாருவோட இணைத்துல அவரோட மூஞ்சிய க்ளோசப்புல
போட்டிருக்காங்க – எதுக்கும் பாத்து பதனமா தொறங்க.

மார்ச் 3, 2010 Posted by | culture, politics | , , , , | 6 பின்னூட்டங்கள்