கார்க்கியின் பார்வையில்

எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!

சனிக்கிழமை மாலை நன்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்ற நேரமாகப் பார்த்து மொத்த குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எகிறிக் குதித்து விடும் கொலைவெறியோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவே நானும் ஆர்வத்தோடு என்ன நிகழ்ச்சி என்று கவனிக்க ஆரம்பித்தேன். அது எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நடிகை “ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் படையோடு வந்து கேதாரத்தைக் வென்றனர் தமிழர்கள்; இப்போது மீண்டும் மனங்களை வெல்ல எந்திரனாக வந்துள்ளனர்” என்று ஏதேதோ பில்டப் கொடுத்து நிகழ்ச்சியை இனிதே ஆரம்பித்தார்.

தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர்களும் இன்னபிற அல்லுசில்லுகளும் தமக்கு பெரிய நகம் இருப்பதையும் சொரிந்து விடுவதில் தமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியவாறே இருந்தனர். பெரும்பாலும் எல்லோரது பேசு பொருளின் நாயகனும் மேடையின் கீழே பத்தாயிரம் வருடம் வாழ்ந்து வரும் இமயமலை பாபாவிடம் கற்றுக் கொண்ட மோன தவத்தில் அமர்ந்திருந்த ரஜினி தான் என்பதை இங்கே குறிப்பிடத்தேவயில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கிழண்டு போன காலத்தில் நடித்த திரைப்படங்களில் தமது சூப்பர் பவர் இமேஜையோ நடிப்புத் திறமையையோ நம்பியதை விட அன்றைக்கு புதிதாய் திரையுலகிற்கு வந்த இளவயது நாயகிகளின் தொடையையும் மார்பையுமே நம்பியிருந்த அதே அவலமான நிலைக்கு ரஜினி காந்தும் வந்து விட்டதை அவ்வப்போது காட்டிய டிரெய்லர் காட்சிகளில் உணர முடிந்தது.

ரஜினியின் வழக்கமான உத்திகளான அரசியல் கண்ணாமூச்சி, பஞ்சு டயலாக் சவடால், தலையைச் சொரியும் கிறுக்குத்தனங்கள் போன்றவை இனிமேல் தனது இரசிகர்களிடம் செல்ப் எடுக்காது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். பாபா பட வெளியீட்டு சமயத்தில் ஓவர் டோ சாகிப் போன ஆன்மீகவாதி வேடமும் எருமைக்கு பவுடர் அப்பிய கதையாக பல்லிளிக்க ஆரம்பித்து விட்டதால் அவரது இப்போதைய நம்பிக்கை ஓவர் பில்டப்பும் ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களும் தான். ஷங்கரும் லேசுபட்டவரல்ல.. கம்யூட்டரையே சோசியக் கிளியாக்கி விட்ட மக்கள் கூட்டம் தான் தனது டார்கெட் ஆடியன்ஸ் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். தொப்பையின் படம் வரைவது, தார் ரோட்டில் பட்டுப்புடவை டிசைன் வரைவது போன்ற உயர்ரக கலாரசனை கொண்டவர். அவரது மூளையில் உதிக்கும் இது போன்ற புதுமையான கற்பனைகளுக்கெல்லாம் கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் துணை இருக்கும் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன.

இந்தப்படம் இயந்திர மனிதன் சம்பந்தப்பட்டது என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலமும் முன்னோட்டக் காட்சிகளின் மூலமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹாலிவுட் திரைப்படங்களோடு போட்டியிடும் திறமை கொண்டவர் என்று போற்றப்படும் ஷங்கரும், கிழண்டு ஓய்ந்து போன ரஜினியின் இன்றைய பரிதாப நிலையையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயமாக உலக அழகியோடு ரோபாட் போடும் குத்து டான்சு ஒன்று படத்தில் இடம் பெரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய தேதியில் அஜித் விஜய் போன்ற லுச்சா பயல்களே திரையில் தமது காதலியைப் பார்த்து “நான் நடந்தா அதிரடி, நான் ஆய் போகலைன்னா குசு வெடி” என்று காதல் மொழி பேசும் போது, வைரமுத்து போன்ற வார்த்தை வியாபாரியையும், ஹாலிவுட்டிலேயே தேங்காய் மூடிக் கச்சேரி நடத்தி வந்திருக்கும் ரகுமான் போன்ற ஹைடெக் பாகவதரையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? “இவன் பேர் சொன்னதும் நிலவும் தரைதட்டும், அடி அழகே உலகழகே இவன் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்” என்கிற காதல் ரசம் சொட்டும் இலக்கியத்தரமான கவிதை வரிகளைக் கேட்க முடிந்தது.

ரொம்ப காசு கொழுப்பு இருக்கிறவனெல்லாம் காதலியைக் கொஞ்சும் போது கூட பில்டப்போட தான் கொஞ்சுவானுக போலிருக்கு. பாவம் அந்தக் காதலிகள். கர்த்தாவே நீர் அவர்களுக்காகவும் மனமிரங்கும்.

விடாது கறுப்பு…!

எல்லா சொரிஞ்ஞர்களும் சொரிந்து முடிந்த பின் கடைசியாக தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். ஒரே கல்லில் அதிகபட்சம் எத்தனை மாங்காய் அடிக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கமாகக் காட்டினார். பேரனின் சன்பிக்சர்ஸ் செய்து வரும் செம்மொழிச் சேவையை பாராட்ட வேண்டும், ரஜினியைப் புகழ்ந்து அவரது ரசிகர்களை கவர் செய்ய வேண்டும், ரகுமானைப் புகழ்ந்து அவரது ரசிகர்களையும் கவர வேண்டும், மொத்தமாக தமிழர்களுக்கு குச்சி ஐஸ் விற்க வேண்டும், இத்தனையையும் தாண்டி திராவிட இயக்கத்தின் சமீப காலத்திய அரசியல் பண்பாட்டின் படி ‘கல்யாண வூட்லயும்…..; எளவூட்லயும்…..’ எனும் தத்துவத்தை நிலைநாட்டியாக வேண்டும். ஒரே பந்தில் நாலு சிக்ஸர் அடிக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் தான் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினார்.

ஆரம்ப வாக்கியத்திலேயே அவர் மற்ற சொரிஞ்ஞர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதையும் தான் அகம் புறம் எனும் இலக்கிய எல்லைகளில் கரைகண்டவர் என்பதையும் நிறுவிக் காட்டிவிட்டார். புறத்தில் சொரியும் அதே நேரத்தில் அகத்தையும் சொரிந்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அண்ணாவின் இதயத்திடம் இளவல் கற்றுக் கொண்ட அரசியல் ட்யூஷன்.  புரியும் விதமாகச் சொன்னால் ஒரே நேரத்தில் அடுத்தவனைப் பாராட்டியது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னையே பாராட்டிக் கொண்டது போலவும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவர் வீசிய கூக்ளி கீழ்கண்ட விதமாக வெளிப்பட்டு தமிழர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தது – “ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் நான் எந்திரன் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”

“தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் மலேசியாவுக்குப் போய் ஒளிந்து கொண்டால் மட்டும் நான் சும்மா விட்டு விடுவேனா அங்கேயும் வந்து ஆட்டையைக் கலைப்பேன்..” என்பது போல் இருந்தது அவர் தொடர்ந்து சொன்ன வாழ்த்துச் செய்தி. ஏற்கனவே அந்த அரங்கில் மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்திருக்கும்; ஆனாலும் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபா கற்றுக் கொடுத்த யோக சாதனைகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார். கஞ்சாவுக்கு இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது எனும் பேருண்மை முந்தாநேற்று தான் எனது சிறு மூளைக்கே எட்டியது.

எல்லோரும் கண்டிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.

படத்தின் பட்ஜெட் நூற்றம்பது கோடி என்றார்கள் சிலர். இருநூறு கோடி என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளையின் மதிப்பு அத்துனையென்றால் கறுப்பின் மதிப்பு எத்தனை இருக்கும் என்பதை யோசித்தால் லேசாகக் கிறுகிறுப்பே ஏற்படுகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட்டிற்கு கோலிவுட் விடுத்துள்ள சவால் தான். ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஏப்பை சாப்பைகளெல்லாம் ஷங்கரின் தொழில்நுட்ப அறிவுக்கு முன் இனி பிச்சையெடுக்க வேண்டியது தான். இல்லையா பின்னே நவீன தொழில் நுட்பத்தை வைத்து அவனெல்லாம் பண்டோரா கிரகத்தை தான் உருவாக்கினான் – நம்மாளுக மாதிரி (எந்திரன்) சிட்டி டான்ஸ் எடுக்க முடியுமா? தொப்பைல அந்த தொங்கிப் போன சொங்கியோட மூஞ்சியத்தான் வரைய முடியுமா? என்ன ஒரே குறைன்னா… இந்த விஷயத்துல ஷங்கர் தனது முன்னோடியான இராம. நாராயணனுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்திருக்கலாம். என்ன
இருந்தாலும் அம்மனையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் குத்து டான்ஸ் ஆட விட்டு ஷங்கருக்கே இந்த விசயத்தில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பது அவர் தானே.

இந்தியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான ஏழைகளின் எண்ணிக்கைப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து இந்தியர்களை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள நமது அரசு,
இன்னொரு பக்கம் சீனாவோடு வல்லரசு போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நமது திரைக்கலைஞர்களோ சீனா போன்ற அல்லுசில்லுகளோடு மோதாமல் டைரக்டாக அமெரிக்க
ஹாலிவுட்டின் மீதே தமது தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்தப் புனிதமான புனிதப்போரில் ஈடுபட்டுள்ள நமது கலைஞர் பெருமக்களுக்கு நாம் நமது ஆதரவை நல்க வேண்டியது நமக்கான வரலாற்றுக் கடமையாகிறது. எப்படிப் பார்த்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு ரஜினியின் ரசிகக்கோமுட்டிகளே இந்தத் திருப்பணியை பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றி விடுவார்கள். ஆனாலும் நூற்றுக்கணக்கான கோடிகளை பிக்பாக்கெட் அடிக்க ஒருவாரமும் ஊருக்குப் பத்து கோமுட்டிப்பயல்களும் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை.

அவர்கள் வருவார்கள். நம்மிடம் வருவார்கள். ஏன்னா தமிழன் நெத்தியில் தானே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அவர்களை நமது வீட்டுக்கே கூட்டி வருவதை விட இலவசமாக் கொடுத்த
டீ.விக்கு வேறு என்ன புடுங்குற வேலை இருக்க முடியும்? நமது ஆதரவை எதிர்பார்த்து நமது வீடுகளுக்கே வரும் அவர்களை நாம் செமத்தையாக ஆதரித்து விடுவோம். நாம் ஆதரிக்கும்
ஆதரிப்பில் இன்னும் ஒரு பத்து வருசத்துக்காவது இந்த படத்தின் சாதனை முறியடிக்கப் பட முடியாததாக இருக்க வேண்டும். வேற எவனுக்கும் இப்படி இருநூறு கோடியில் படம் எடுக்க தில்லு வரவே கூடாது.

எனவே மக்களே.. இப்படி பெரும் பொருட் செலவில் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பை – திரைக் காவியத்தை – திரை ஓவியத்தை நாம்
கட்டாயமாகப் பார்த்து நமது பர்மா பஜார் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து யாரும் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே காசு கொடுத்து வாங்குங்கள் – ஏனென்றால் Piracy kills என்று திரைத்துறை ஜாம்பவான்களே சொல்கிறார்கள். பர்மா பஜார் வியாபாரிகள் ஏற்கனவே பாவம் கடும் தொழில் நசிவையும் காவல்துறை அடக்குமுறையையும் மீறி மக்களுக்காக இப்படி கலைச்சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்..!

எந்திரன்…. ஆபாசக் கவுண்ட்Down Starts…. 1,2,3

ஓகஸ்ட் 9, 2010 Posted by | எந்திரன், எந்திரன் பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா, சினிமா விமர்சனம், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், வைரமுத்து | , , , , , , , , , , | 37 பின்னூட்டங்கள்