பீகாரின் 11% வளர்ச்சி: உண்மை என்ன?
முதலாளித்துவ ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் கூத்தாடுகின்றனர். பீகாரின் 11% ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் தான் இவர்களை இப்படி துள்ள வைத்துள்ளது. டைம்ஸ் ஆப் இண்டியா ஏட்டினால் தனது சந்தோசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இதற்காகவே ஒரு சிறப்பு வெளியீடு கொண்டு வந்துள்ளது. சென்றவருடம் பீகார் துனை முதல்வர் சுசீல் குமார் 16% வளர்ச்சி விகிதத்தை பீகார் எட்டியுள்ளது என்று சொன்னபோதாவது சில பொருளாதார அறிஞர்கள் அதில் இருந்த பொய்களை அம்பலப்படுத்தினர். ஆனால் இந்த முறை முதலாளித்துவ ஊடகங்களின் வெறிக்கூச்சல் எல்லாவற்றையும் அமுக்கி விட்டது. இனிமேல் இந்த ‘புள்ளிவிபரத்தை’ அம்பலப்படுத்தும் விரிவான ஆய்வரிக்கைகள் வெளியாகலாம்; அதற்கு முன் முதலாளித்துவ ஏடுகளில் வெளியான செய்திகளினூடேயே கவனித்த சில முரண்பாடுகள் மட்டும் இங்கே.
தொழிற்துறை வளர்ச்சி இந்த 11 சதவீதத்தில் எந்தவித பங்களிப்பும் செலுத்தாத நிலையில் சேவைத் துறையும் விவசாயத்துறையுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. அதே கட்டுரையில், மூன்றாண்டுகள் வெள்ளமும் தொடர்ந்த வரட்சியையும் கடந்தே இந்த வளர்ச்சி வீதம் எட்டப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இது உண்மைதானா?
எப்படி இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர்?
அதற்கான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ முறையில் இதற்கு ஒரு எளிமையான சூத்திரம் சொல்கிறார்கள் (கீன்ஸுக்கு பின் வரும் முதலாளித்துவவாதிகள்). அது, மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + ( ஏற்றுமதி – இறக்குமதி ). இதன்படி மொ.உ.உ என்பது நுகர்வு, முதலீடு, அரசுசெலவினங்கள் இவற்றோடு ஏற்றுமதியை (அதிலிருந்து இறக்குமதி மதிப்பை கழித்துவிட்டு) கூட்டினால் வரும் சதவீதமாகும். தொழில்துறை வளர்ச்சி பீகாரில் இல்லை. மூன்றாண்டுகளாக வரட்சி, பஞ்சம் தொடர்ந்து வெள்ளம் என்பதால் விவசாயத்துறையின் பங்களிப்பு என்பதும் குறைவாகத்தானிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த 11% விகிதத்திற்கு மிக அதிகளவில் பங்களித்திருப்பது தனிநபர் நுகர்வு என்பது தெளிவாகிறது. டைம்ஸ் செய்தியின் படியே பீகாரில் ஆட்டொமொபைல் விற்பனை 2009ல் 45% அதிகரித்திருக்கிறது.
அடுத்து, பீகாரின் சராசரி தனிநபர் நுகர்வும் சராசரி தனிநபர் வருமானமும் தேசிய சராசரியை விட படுபாதாளத்தில் இருக்கும் போது, மேலும் அது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சரிந்து வரும் நேரத்தில் மாநிலத்தின் நுகர்வு சார்ந்து தூண்டப்பட்டுள்ள வளர்ச்சி 11 சதவீதம் என்பதன் அர்த்தம், சமீப காலத்தில் பணக்காரர்கள் செலவிடும் தொகை கூடியிருக்கிறது என்பது தான். இது அம்மாநிலத்தில் மோட்டார் வாகனங்கள், கார்களின் விற்பனை 45% அதிகரித்திருப்பதிலிருந்து புலனாகிறது. மேலும் முன்பைப் போல் அல்லாமல் இப்போது போலீசுத் துறை ஆட்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் திருடர்கள், கடத்தல்காரர்கள் பெரும்பாலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகள், மேட்டுக்குடியினரை அதிகம் செலவழிக்கவும் தங்கள் செல்வத்தை டாம்பீகமாக காட்டிக் கொள்ளவும் (show off) துணிவைக் கொடுத்திருக்கிறது.
இன்னொருபுறம், பெரும் தரகு முதலாளிகள் குறிப்பாக சர்க்கரை ஆலைகளில் மாத்திரம் நாலாயிரம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். மாநில அரசு இம்முதலாளிகள் தமது சரக்குகளை சுலபமாக எடுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளில் செலவு செய்திருக்கிறது. இப்படி தனியார் தரகு முதலாளிகளின் முதலீடும், அரசு அவர்களின் நலனுக்காகச் செய்துள்ள முதலீடும், ஒரு சிறு மேட்டுக்குடியினரின் ஆடம்பர நுகர்வும் தான் இந்த 11% வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகள்.
இதையே சிறந்த ஆட்சி (good governance) என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு பத்து ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் பெருவாரியாக இருக்கும் ஒரு மாநிலத்தில், ஒரு சின்ன கும்பலின் ஆடம்பரங்களும் கேளிக்கைகளும் கூடியிருப்பதையே முன்னேற்றம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை வக்கிர புத்தியும் திமிரும் இருக்க வேண்டும்? முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டும் எந்தவொரு புள்ளிவிபரங்களுக்குள்ளும் புகுந்து நோண்டிப் பார்த்தால் இப்படியான புளுகுகளும் முரண்பாடுகளும் தான் மண்டிக்கிடக்கிறது.
//மாநில அரசு இம்முதலாளிகள் தமது சரக்குகளை சுலபமாக எடுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளில் செலவு செய்திருக்கிறது//
This infrastructure development, did create jobs and eventually benefited people, right?
What exactly is your point? That there should not be any infrastructure development in the state and the money should grow in trees in every ones houses?