கார்க்கியின் பார்வையில்

Do we have a choice?

கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.

இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?

உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!

அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.

வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.

நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.

இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.

இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? –

ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.

தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.

உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!

ஒக்ரோபர் 21, 2007 - Posted by | culture, medias | ,

2 பின்னூட்டங்கள் »

  1. ///உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
    / அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!///

    These last lines are excellent…..

    பின்னூட்டம் by Asuran | ஒக்ரோபர் 22, 2007 | மறுமொழி

  2. இவ்வளவு எழுதிட்டு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தது கொஞ்சம் உறுத்துகிறது. தமிழிலேயே வையுங்களேன்!

    பின்னூட்டம் by பாலாஜி | ஒக்ரோபர் 25, 2007 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக