ஈரல்..!
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.
ரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.
ரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.
சரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.
“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்” கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.
ரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.
“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”
நின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.
குமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.
“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்?” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.
“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”
“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்
“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”
“சரிடா.. நான் போறேன்”
ரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.
ஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.
“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”
அந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது. அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.
“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா? அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு?” அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.
அன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.
மிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி. அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.
ஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.
மாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.
பொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.
ரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.
___________________________________________________________________________________________
க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்
“டேய் பய்யா, ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே?” திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.
“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.
பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா? நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.
அங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.
வீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.
ரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
பூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”
வேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.
“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.
ரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.
பூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.
வேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்
__________________________________________________________________________________________
இரவு.
சிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.
வேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
சின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.
வேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –
“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”
சின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.
மட்டக் குதிரை…!
வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.
“சனியன்…” மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.
நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.
“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.
கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.
“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.
“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.
பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.
“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..
“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..
“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க”என்று அதட்டலாய் ஒன்று…
“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..”என்று மிரட்டலாய்…
“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…
“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..” அதட்டலாய்…
“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…
“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…
முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.
குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம். கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.
வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.
அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.
பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.
மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.
அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.
“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை
அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர். அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.
முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.
” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”
“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”
“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”
தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது. முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.
குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.
நதியின் மடியில்…!
முடிவற்று நீண்ட
அந்த நாளின் இடையில் நான்
அந்த நதியைக் கண்டேன்…
அதன் மூலத்தைக் கண்டேனில்லை நான்..
அதன் முடிவையும் காணேணோ அறியேன்
துவக்கமும் இலக்கும் அற்று
வழிந்தோடும் நதி…
செல்லும் தடந்தோறும் கண்டவற்றையெல்லாம்
தனக்குள் வரித்துக் கொண்டோடும் நதி..
கரைகள் அற்ற
திசையென்று ஏதுமற்று
வேகமாயும் வேகமற்றும்
ஆழமாயும் ஆழமற்றும்
தானே தன் பாதையைப் பற்றியோடும்
நதியின் மடியில் நான் அமர்ந்தேன்….
நிறைய தண்ணீர்..
தனதாற்றலைத் தானேயறியாத
ஒரு பெண்ணின் உடல் போல்
வளைந்து நெளிந்து
சுழித்துப் புரண்டு
காமுற்ற அரவமாய்
இரையை நெருங்கிய வேங்கையாய்
வன்மையுமாய் மென்மையுமாய்
வனாந்திரங்களையும் வெட்டவெளிகளையும் தின்று
தரைமேல் படர்ந்து செல்லும் நதி
ஒரே நேரத்தில் பேரரசி போலும்
பிச்சைக்காரி போலும் நடந்து செல்கிறது…
ஆதியில் நாகரீகங்களைப் பெற்றெடுத்த
அதன் கருவறையில்
அமிலத்தின் நெடி காரமாய் –
விகாரமாய் வீசிற்று..
தன்னால் செழித்துக் கொழித்தவைகள்
இன்று தன்னாலேயே வாடிச் சாவதைக்
கண்டு நதி வடித்த கண்ணீர்
பத்து ரூபாய்க்கு விலை போகிறது..
வரப்புகளின் மடைகளில் மன்வெட்டிக்
கொத்தலின் இனிய முத்தங்களெல்லாம்
இனி பழங்கனவு தானோ…
துள்ளி விளையாட வயலும் வரப்புமில்லை…
விளையாட்டைக் கண்டித்து மடை கட்ட
விவசாயியுமில்லை..
செம்மண் திப்பி கலந்த அதன் சிவந்த
நிறத்தை உறிஞ்சியெடுத்த அமெரிக்க
இயந்திரத்தின் மலவாயிலிருந்து
நிறமிழந்து ஒரு ப்ளாஸ்டிக் புட்டியிடம்
தன் சுதந்திரமுமிழந்து நிற்கும் சோகம்
வழியும் கண்ணீரோடு நின்ற என்னிடம்
மொழியும் வார்த்தைகளும் அற்று
வெறும் சப்தங்களாய் மதோடு
பேசிச் சென்றாள் அந்தத் தாய்..
“ஓ என் பிள்ளாய்…
என் மடியினின்றும் விலகிச் செல் நீ..
எதை வேண்டி வந்தாய் இன்று..?
உனக்களிக்க ஏதுமில்லை என்னிடம்..
இந்த வனமும் எனதில்லை..
இந்த நீரும் எனதில்லை..
இந்த மீன்களும் எனதில்லை..
நானே எனக்கில்லாத ஓர் நாளில்
எனை நாடி ஏன் வந்தாய்..?
இப்போதே விலகிச் செல் நீ…
அள்ளித் தந்த எனையே
அள்ளிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
என்னில் பிறந்து
என்னில் தவழ்ந்து
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகளே என்னைக்
களவாடிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
பிறந்த மலையும் விலை போனது
வாழ்ந்த பூமியும் விலை போனது
சேரும் கடலும் விலை போனது
நானும் விலை போய் விட்டேன் என் பிள்ளாய்…
ஏதுமற்ற இடத்தில் எதைத்
தேடி வந்தாய் என் பிள்ளாய்…
இருளில் தொலைத்ததை நீ
வெளிச்சத்தில் தேடுகிறாய்…
சோம்பி அமரும் நீ வேண்டாமெனக்கு
இப்போதே விலகிச் செல் நீ…
உன் கண்ணீர் வேண்டாமெனக்கு
என் மலை வேண்டும்
என் வனம் வேண்டும்
என் நிலம் வேண்டும்
என் வரப்பு வேண்டும்
என் கடல் வேண்டும்..
மீட்டுத் தருவாயா என் பிள்ளாய்…?”
சலசலக்கும் சப்தங்களினூடே
ஒரு சோக ராகமும் சில பறைகளின்
ஒலியும்…
செம்மண் திப்பிகளின்றிச் சிவக்கிறது
நதி…
இனி கண்ணீரில்லை…!