அவன்..!
காலையிலொன்றும் உச்சியிலொன்றும் மாலையிலொன்றுமாக நாளுக்கு மூன்று முறை பேருந்து வந்து செல்லும் கிராமம் அது. சூரியன் எட்டிப்பார்க்காத மூன்று மணிக்கே அந்த ஊர் விழித்துக் கொள்ளும். நாத்து நடுவது, களை பிடுங்குவது, மருந்தடிப்பது, மேய்ச்சலுக்கு ஆடு மாடுகளை ஒட்டிச் செல்வது, வேலாங்குளத்தில் விளைந்த கீரையை சந்தையில் விற்பது, என்று கிழடு கட்டைகளைத் தவிர ஊரே ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும். அந்த நேரத்திலேயே கந்தசாமி பாய்லரில் கொதிக்கும் தண்ணீரை பைப்பில் பிடித்து கண்ணாடித் தேனீர்க் கோப்பைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். இடது கை புறமாக பிளாஸ்டிக் கோப்பைகள் சில தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். கீழே சிலர் குந்தவைத்து உட்கார்ந்திருந்தனர்.
அங்கே தான் அவனும் இருந்தான்.
அவனுக்கு முழியே சரியில்லை. கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். சுற்றிலும் இருந்தவர்கள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தங்களுக்குள் தேனீர் அருந்திக் கொண்டே சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கோ நிலை கொள்ளவில்லை; காலை மாற்றி மாற்றி நின்று பார்த்தான். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது.
“கவுண்டரய்யா.. நீங்க என்ன சொல்லுங்க.. நம்ம கந்த்சாமி போடற டீய அடிக்கறக்கு இந்த சில்லாவுலயே வேற ஆளு கெடையாதுங்கறேன்” அழுக்கு முண்டா பனியன் ஒன்று கை வைத்த பனியன் போட்டுக் கொண்டு பெஞ்சியில் குந்தியிருந்த ‘கவுண்டரய்யாவைப்’ பார்த்து சிலாகித்துக் கொண்டது.
“இல்லாமையா பின்ன? சுத்துப் பட்டு ஊர்லயெல்லாம் மாதாரிகளுக்கும் நமக்கும் ஒரே கெளாசாம்பா.. நம்ம கந்த்சாமி தான் இன்னும் சுத்தபத்தமா கட நடத்திட்டிருக்கான்..” மண்டைக்கு மேலிருந்த மயிர் நரைத்துப் போன கவுண்டரைய்யா, தனக்கு மண்டைக்குள்ளும் நரைத்துப் போய் விட்டதென்பதை உணர்த்தியது.
இடையில் புகுந்து கொண்ட கந்தசாமி அவன் பங்குக்கு,
“சுத்தந்தானுங்களே முக்கியம்.. எங்கப்பாரு காலத்திலேருந்தே நாங்க சாப்பாட்டுக் கட நடத்தறோம்.. அவரு காலத்திலேயே மாதாரிகளுக்குத் தேங்காச் செரட்டைல தான் டீ குடுப்போம்.. ஏதோ இன்னிக்கு காலம் மாறுனதால பிளாஸ்டிக் தம்ளர்ல குடுக்கறோம்.”
காலை நேரமானதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை – உள்ளே போன ஆட்டையோ கோழியையோ வெளியே தள்ள சூடான டீ அவசியமாக இருந்ததால் சனக் கூட்டம் மற்ற நாட்களை விட அதிகமாகவே இருந்தது. அதில் சிலர் இந்த ‘சுத்தப் பேச்சில்’ கலந்து கொண்டு தங்கள் ஊர் சுத்தபத்தமாக இருக்கிறது என்பதில் தங்களுக்கு இருந்த பெருமிதத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
அவனுக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டதோ என்னவோ தன்னையே மறந்து விட்டான் போல.. அவன் கால்களுக்குக் கீழே கிடக்கும் மலத்தை மிதிப்பதைக் கூட உணராமல் முறைத்துக் கொண்டே நின்றான்.. முகத்தின் பாதியைக் கண்களே எடுத்துக் கொண்டது போல அப்படி ஒரு முறைப்பு!
அந்தக் கூட்டத்தில் சிலருக்கு இந்தப் பேச்சுக்களில் சுத்தமாக ஒப்புதலே இல்லை.. ஆனாலும் ‘ஐயாவை’ எதிர்த்துப் பேச பயந்து கொண்டு வாயை மூடிக் கொண்டு நின்றனர். இவன் அவர்களையும் பார்த்தான் – அதே கோபத்தோடு. எதிரிகள் மேல் வரும் ஆத்திரத்தை விட இப்படி பேசாமல் கழுத்தறுக்கும் கோழைகள் மேல் தான் வெறி அதிகம் வரும் என்பது எத்தனை உண்மை!
அவன் ஒரு முடிவோடு எழுந்தான். தன்னுடைய இறகுகளை படபடவென அடித்துக் கொண்டே பறந்து போய் கவுண்டரய்யாவின் டீ கிளாசின் மேல் உட்கார்ந்தான்.
“அடச்சீ… இந்த ஈச்சித் தொல்லை தாங்கலப்பா” கவுண்டரய்யா சலித்துக் கொண்டே அவனை விரட்ட, அவன் நேரே போய் முண்டாசுக்காரரின் கிளாசின் விளிம்பில் உட்கார்ந்தான். அவனும் விரட்டியடிக்கவே… அங்கே இது வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தவன் ஒருவன் தம்ளரிலும் போய் உட்கார்ந்தான்.
அவர்கள் மீண்டும் தேனீரின் சுவையை சிலாகித்துக் கொண்டனர்!
ஒன்றும் பேசாதவன் எல்லாவற்றையும் கவனித்தான். அவன் முக பாவனையில் இருந்து வெட்க்கப்பட்டானா இல்லை அவமானமடைந்தானா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே நடையைக் கட்டினான்.
அவன் இப்போது சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான் – காலில் இருந்த மலம் இப்போது சுத்தமாகி விட்டிருந்தது. முன்னங்காலை வாயில் வைத்துப் பார்த்தான் – தேனீர் கசந்தது.
This have a touch of ‘Twist in the tale’ by Jeffrey Archer.
By i dont mind, i liked it.