நான் கடவுள் விமர்சனம்
இணைய புத்திஜீவிகள் எல்லோரும் இந்தப் படத்தைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் “நமக்குத்தான் ஒருவேளை புரியலையோ” என்ற சந்தேகத்தில் “நல்லாத்தான் இருக்கு…….ஆனா….” என்று மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நான் பாலா படங்களைப் பார்ப்பதில்லை; நிறைய செயற்கைத்தனம் இருக்கும் என்பது ஒரு காரணம். இந்த முறை ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் நன்பனோடு பார்க்கப் போனேன்.
முதலில் ருத்ரன். காசி மாநகரத்தைச் சேர்ந்த அகோரி – அதாவது நமக்குப் புரியும் மொழியில், பினந்தின்னி சாமியார். இவனை காசியில் ஜாதக தோஷங்களுக்காக காசியில் நேர்ந்து விட்டு விட்ட தகப்பன் தேடிவரும் காட்சியில் தான் படம் ஆரம்பமாகிறது. ஒத்தாசைக்கு வரும் காசி நகர பார்ப்பான் ஜாதகக் காரணங்களுக்காக பிள்ளையை காசியில் விட்டு விட்டதாக தகப்பன் சொன்னதும் பொங்கியெழுகிறார். இந்தியில் திட்டுகிறார்; நம்மாளு காலில் விழுந்ததும் ‘சரி சரி பார்க்கலாம் என்கிறார்’ – எழுத்துப் பிச்சர் ஒடும் போது
ஜெயமோகன் பெயரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
படம் நெடுக இந்த நபரை எல்லா கதாபாத்திரங்களும் ஒருவித மிரட்சியுடன் பார்க்கிறார்கள். அட, நம்ம போலீசும் கோர்ட்டும் கூட இவனிடம் பம்முகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்குத் தெரிந்து எலும்பு வீசுபவனிடம் மட்டும் தான் இவர்கள் பம்முவார்கள். ஊருக்கு வந்து சேரும் பினந்தின்னிச் சாமி அங்கே கோயிலில் பிச்சையெடுக்கும் கூட்டம் ஒண்டும் ஒரு இடத்துக்குப் பக்கத்தில் தனது ஜாகையை அமைத்துக் கொள்கிறது. அங்கே இருக்கும் லோக்கல் சாமிகள் – போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாக சொல்கிறான் ஒரு சாமி – வலித்துக் கொடுத்த கஞ்சாவைக் கூட தொடாமல் சுத்தபத்தமாக தனி கஞ்சா அடிக்கும் அளவுக்கு காசியைச் சேர்ந்த அகோரி தன் புனிதத் தன்மையை தமிழ் நாட்டில் காப்பாற்றிக்
கொள்கிறான். கடுமையான டயட் கண்ட்ரோலில் இருக்கும் அகோரி, நரமாமிசம் தவிர்த்து வேறு அசுத்த உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை.
அடிக்கடி சமஸ்கிருதத்தில் “அஹம் ப்ரம்ஹாஸ்மி…” என்று வானத்தைப் பார்த்துக் கூவிக் கொண்டிருப்பது இந்த நபரின் முக்கிய வேலைகளில் ஒன்று. ம்ம்ம்ம்….. நியாயமாகப் பார்த்தால்
இந்த ருத்ரனை அழைத்து வந்து – முரண்டு பிடித்தால் பொடனியில் ஒன்று போட்டாவது – மனநல மருத்துவரிடம் சேர்த்திருக்க வேண்டும். தெருவில் இப்படி பரிதாபத்துக்குரிய ஒருத்தனைப் பார்த்தால் நாம் அப்படித்தான் நினைப்போம்; ஆனால் படத்தில் வரும் இந்த மனநோயாளியை எல்லோரும் ரசிக்கிறார்கள்.
அடுத்து பிச்சைக்காரர்கள் – நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் மிருகங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் தானே? அதே போன்ற ஒரு ரசனையைத் தான் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் / குரூபிகள் தமக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் ரசிகக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.
பார்வையாளன் இவர்களின் உலகத்தை ரசனையோடு பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து அந்தக் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தில் உருவாகக் காரணமான சமூக அமைப்புமுறையின் மேல் எழ வேண்டிய கோபம் முதலாளி தாண்டவனைத் தாண்ட மாட்டேனென்கிறது. தாண்டவனின் கையாள் முருகன் பிச்சைக்காரர்களிடம் நெகிழும் இடங்களில் பார்வையாளனும் நெகிழ்கிறான்; பிச்சைக்காரர்களை “உருப்படிகள்” என்று விளிப்பதைக் கேட்டு சிரிக்கிறான். நயன்தாரா போல் வேடமிட்டு ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து வெட்கப்படுகிறான். இப்படி தம்மை நெகிழவும் சிரிக்கவும் வைத்த அந்த பிச்சைக்காரர்களில் ஒருவனான அங்கவீனமான சிறுவனை ஒரு மலையாள “முதலாளி” தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகு தான் பார்வையாளன் கோபப்படுகிறான். அந்த மக்களை புறக்கனித்து அவர்களுக்கு ஒரு
கொடூரமான வாழ்க்கையைப் பரிசளித்திருக்கும் இந்த சமூக அமைப்பின் மேலோ, இந்த அயோக்கியத்தனங்களுக்கு வால் பிடித்து நிற்கும் போலீசு உள்ளிட்ட அரசு அமைப்பின் மேலோ பாய்ந்திருக்க வேண்டிய கோபம், மலையாள முதலாளியையும் தாண்டவனையும் அகோரி ருத்ரன் “தண்டிப்பதன்” மூலன் சாந்தமடைகிறது.
படத்தில் பாடிப்பிச்சையெடுக்கும் குருட்டுப் பிச்சைக்காரி கதாபாத்திரத்திம் முதலில் ஒரு முதலாளியிடன் இருந்து அடுத்து இன்னொரு முதலாளி கையில் வந்து சேர்கிறாள். முகம்
கோரமான இன்னொரு முதலாளியிடம் காமுகியாய் அனுப்ப புது முதலாளி முடிவெடுக்க இவள் மறுக்கிறாள். அதன் காரணமாய் அவன் இவள் முகத்தை சுவற்றில் தேய்த்து கோரப்படுத்தி விடுகிறான். முகம் கோரப்பட்ட இவள் பினந்தின்னிச் சாமியிடம் வந்து மரண வரம் கேட்க, இவரும் சந்தோஷமாய் அதைக் கொடுத்தருளுகிறார்.
மொத்தம் மூன்று கொலைகள் ஆயிற்றா? அடுத்த காட்சியில் நியாயமாக கம்பியென்னத்தான் போயிருக்க வேண்டும்… ஆனால் நாம்மாளு காசியிலிருந்து ஸ்பெசலாய் எழுந்தருளி இருக்கும் அகோரியல்லவா? எனவே அடுத்த காட்சியில் கூலாக காசிக்கே போய்விடுகிறார். கொலைக்கு ஒன்று வீதம் மூன்று முறை கங்கையில் முங்கியெழுகிறார் – பின்னனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க தன் குருவை நோக்கி கம்பீரமாய் நடந்து வர, காட்சி உறைகிறது – பார்வையாளர்கள் பிச்சைக்காரப் பயல்களை மறந்து விட்டு சந்தோஷமாய் மனநிறைவோடு எழுந்து வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.
அகோரிகள், தாந்திரிகர்கள், காபாலிகர்கள், காலபைரவர்கள் என்பதெல்லாம் இந்து மதத்தின் தீவிர மனநோயாளிகளால் பின்பற்றப்படும் ‘கல்ட்’கள் (cult). இதெல்லாம் தடைசெய்யப்பட
வேண்டிய பைத்தியக்காரத்தனங்கள்.ஆனால் இந்தப் படமோ அவர்கள் மேல் ஒரு வித மரியாதையை / பிரமிப்பை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது. கண் பார்வையற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க இரண்டு மூன்று ரவுடிகள் தூக்கிச் செல்ல முயன்றால், அங்கே இருக்கும் எல்லோரும் சேர்ந்து ‘பொது மாத்து’ கொடுத்திருக்க வேண்டும் – எங்கூர்ல எவனாவது இப்படி செஞ்சிருந்தான்னா ஊரே சேர்ந்து கிழிச்சிருப்பாங்க- இங்கே என்னடாவென்றால், எல்லோரும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு மட்டும் அந்நியன் விக்ரம் போல பறந்து பறந்து அடிக்கிறார். ஏட்டைய்யா மரியாதையாக செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு நெருங்குகிறார் – எதுக்கு? – கஞ்சாவைக் கொடுக்க!
படம் நெடுக ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கடவுளைச் செல்லமாக பகடி செய்து கொள்கிறார்கள். ஓரிடத்தில் கிருஷ்ணனை “உள்பாவாடைக் களவானி” என்கிறான் ஒரு சிறுவன். உச்சமாக ஒரு கிழவர் கடவுளைத் “தேவிடியாப்பய” என்றும் சொல்கிறார்… இதையெல்லாம் கொண்டு இந்த படம் இந்துத்துவத்தை எதிர்த்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. பருண்மையாகப் பார்க்கையில் பார்வையாளர்கள் எல்லோருடைய ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளானா “பயங்கர” வில்லன் தாண்டவனை தண்டிப்பது ஒரு அகோரி தான்; எனவே திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அகோரியின் மேல் – இந்த வகை லூசுத்தனங்களை அனுமதித்திருக்கும் இந்து மதத்தின் மேல் – அருவெறுப்பு தோன்றுவதற்குப் பதில்
பார்வையாளனுக்கு ஆதர்சமும், பிரமிப்பும், மரியாதையும் தான் தோன்றுகிறது.
தினமலரின் பார்வையில் லோக்கல் சாமியார்கள் எப்படித்தெரிவார்களோ அப்படித்தான் படத்தில் வரும் லோக்கல் சாமியார்களும் ( கஞ்சா குடிக்கி சாமிகளாகட்டும் கையும் காலும்
இல்லாத சாமியாகட்டும்) காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே தினமலரின் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரி எப்படித் தெரிவானோ அப்படித்தான் அகோரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான்.
அப்போ பிச்சைக்காரர்கள்? – அவர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு எண்டெர்டெயின்மெண்ட்! மிருகங்களை வேடிக்கை பார்த்து ரசிப்பதைப் போல பார்த்து ரசிக்கிறார்கள். மீண்டும் வடநாட்டில் இருந்து ஒரு பினந்தின்னிச் சாமி எழுந்தருள அவர்கள் பிரார்த்திக்க வேண்டியது தான்!! அந்த மீசைக்கார போலீசு இன்ஸ்பெக்டர் என்னவாயிருப்பார்? அவர் இன்னொரு தாண்டவனை உருவாக்குவதில் இப்போ பிஸியாக இருப்பாராயிருக்கும்.
படம் விட்டு வெளியே வரும் போது நன்பனிடம் கேட்டேன் -
“ஏண்டா.. அந்தப் பிச்சைக்காரங்களைப் பார்த்து அப்படி கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருந்தியே…?”
“ஆமாண்டா… வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கனும் அப்பத்தாண்டா வாழ்க்கைய ரசிக்க முடியும்”
“இல்ல… அந்தப் பிச்சைக்காரர்களையும், குரூபிகளையும் இந்த சமூகம் புறக்கனிச்சிருக்கே, அதைப் பத்தி என்ன நினைக்கிறே?”
“என்ன பன்றது… பாவந்தான்… ஆனா, அது அவங்க விதி. நம்மாள முடிஞ்ச அஞ்சோ பத்தோ போடத்தான் நம்மாள முடியும். வேறென்னத்த செய்யச் சொல்றே?”
“அப்ப அந்த தாண்டவனைப் போல மாஃபியாக்கள்?”
“அதான் சாமியே தண்டனை கொடுத்திச்சில்லே?”
இயக்குனர் பாலா நிச்சயமாக ஜெயித்து விட்டார் என்று புரிந்தது.
மற்றபடி நல்ல பின்னனி இசை, புத்திசாலித்தனமான கேமராக் கோணங்கள், அருமையான ஒளிப்பதிவு…. blah, blah, blah, blah, blah….. அவ்வளவுதான்
- கார்க்கி
ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!
“யாத்ரியோ க்ருப்யா க்யான் தே… காடி நெம்பர் சார், சாத், ஷுன்யெ, தோ… – ப்ப்பாபாபாங்ங்ங்ங்…. தடக் தடக் தடக்…”
அறிவிப்பாளினியின் குரலைத் தின்று கொண்டே சோம்பலாய் நுழைந்தது அந்த ரயில்.
“சௌ ருப்யா தே தோ மஹராஜ்” என்றபடி எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தார் அந்த வயதான போர்ட்டர். ஒடுக்கு விழுந்த கருத்த முகம். உழைத்தே தேய்ந்து போன கெச்சலான உடல்.
“சௌ ருப்பா too much ஹே பாய். மே பச்சாஸ் ருப்யா தே ரஹாஹூ” ஆங்ரேஜியும் இந்தியும் கலந்து திக்கித்திக்கி சொன்னேன்.
“யே ஜாதா வெயிட் ஹே ஸாப்” இரண்டு பெரிய பயணப் பொதிகள்…
தெரியாத மொழியில் வேறென்ன பேரம் பேசி விட முடியும். மேலும் அவர் அந்த பெட்டிகளை தள்ளாடித் தள்ளாடி தூக்க முயன்றது மனதை என்னவோ செய்தது.
“அச்சா சலோ பாய்” என்றவாறே அவர் தலை மேல் அந்தப் பொதிகளை ஏற்ற உதவினேன்.
எனது சீட்டின் கீழே அவற்றை பெரும் சிரமத்தொடு சொறுகி விட்டு அவர் கையில் நூறு ரூபாய் தாளை கொடுத்த போது கேட்டார் -
“ஸாப் ஆப் மதராஸி ஹே?”
“ஜீ ஹாங்” இரண்டு வருடங்கள் முன்பு இந்த ஊரில் கால் வைத்த போது எதிர் கொண்ட அதே கேள்வி – ஊரை விட்டு கிளம்பும் போதும்
இரண்டு வருடங்கள்! இரண்டு முழு வருடங்கள்!!! நான் வேலை பார்க்கத் துவங்கிய பின் நீண்ட நாட்கள் தங்கிவிட்ட ஊர் இது தான்.
ரயில் மெல்ல சோம்பல் முறித்து நகரத் துவங்கியது. சன்னலோர இருக்கையில் சாய்ந்து பின்னோக்கிப் பாயும் காட்சிகளில் லயித்தேன். ரயில் பயணம் சந்தோஷமானது – அதில்
கிடைக்கும் அந்த நேர இடைவெளிக்காகவே ரயில் பயணத்தை நான் நேசிப்பதுண்டு. கொஞ்ச நேரத்தில் பச்சை வயல்கள் கடந்து போக ஆரம்பித்தது.. கண்களில் நழுவும் பசுமை..
மனதினுள் ஆழப்பதிந்து விட்ட சில பசுமையான நினைவுகளைத் தூண்டி விட ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்க வாய்ப்பே தராத தொடர்ந்த ஓட்டம். இப்படி ஆசுவாசமான தருணங்கள்
அபூர்வமாய் வாய்க்கும் சமயங்களில் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்து விடும். பழைய நாட்களை நினைப்பது என்றாலே எனக்கு அச்சமாகத் தான் இருக்கும். இன்றைய நாள் நரகம்
என்றால் முந்தைய நாட்கள் பாழும் நரகம். ஊர் ஊராய் ஓடத் தொடங்கி ஒன்பது வருடங்களாகி விட்டது.. எப்போது முடிவுறும் என்றே தெரியாத சாலையில் பயணிப்பது போன்றதொரு
உணர்வு சமீப நாட்களாய் எழத்தொடங்கி விட்டது.
சாய்ந்து அழ தோள் இல்லாதவனின் தோல்வியும், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆட்களில்லாதவனின் வெற்றியும் பெரும் சோகங்கள். இந்த ஒன்பது வருட பயணத்தில் இப்படியான
சந்தர்ப்பங்கள் மாறி மாறி வந்தபின் இன்று சிரிப்போ அழுகையோ இயல்பாய் வர மறுக்கிறது. இயல்பான அன்போ காதலோ இல்லாத நாட்கள். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க
நேரமும் வாய்ப்பும் இருந்தால் மட்டும் போதாது அது இனிமையானதாயும் இருந்திருக்க வேண்டும்.
“எடோ .. எந்தாடா ஈ ட்ரெஸ்ஸு… ஈ ஆபீஸுக்கு ட்ரெஸ் கோட் உண்டு அறியுமோ? போய்க்கோடா.. ட்ரெஸ் சேஞ்ச் செய்து வா….” முதல் வேலையில் முதல் நாள் அந்த மலையாள
மேனேஜர் முகத்தை உருக்கிய இறும்பு போல் வைத்துக் கொண்டு எரிந்து விழுந்த போது எனக்கு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது பிறக்க சரியாக நாலு மணி நேரமும்
முப்பத்தைந்து நிமிடங்களும் தான் இருந்தது. ஆம் அன்று தான் எனக்குப் பிறந்த நாள். நான் அன்று உடுத்திப் போயிருந்தது என் பிறந்த நாளுக்கு ஆசையாய் வாங்கியிருந்த புது உடுப்புகள்.
பத்தாம் வகுப்பு முடிந்து மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும் முடித்து கேம்பஸில் தேர்வாகி ஆறு மாதம் வேலைக்கான உத்தரவு வராமல் காத்திருந்து தேர்வு செய்திருந்த கம்பெனிக்கு
கடிதங்கள் மேல் கடிதங்களாக நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் வயதுத் தோழர்கள் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஆறு மாதங்கள் வேலை நிச்சயமாகாத சூழலில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த போது எதிர் கொண்ட உறவுகளின் கேலிப் பார்வையும், அம்மாவின் குத்தல் பேச்சும் வேலை
கிடைத்த உடனே மறைந்த மாயம் சொல்லிக் கொடுத்த பாடம் – சொந்தங்கள் என்னும் மாளிகையின் அஸ்திபாரம் – பண்ம்!
“நீயெல்லாம் நல்லா கொட்டிக்கத்தாண்டா லாயக்கு – நீ கெட்ட கேட்டுக்கு முட்ட தோசை ஒன்னு தான் கொறை – அவனவன் படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்க,
நீ யென்னடான்னா தெள்ளவாரியா ஊர் சுத்திட்டு இருக்கே” ஆறு மாதம் முன்பு வரை சோறு ஊட்டி விட்ட அம்மா!
வாழ்க்கையிலேயே முதன்முதலாக மலச்சிக்கலால் அவதிப்பட்ட நாட்கள் அது தான். எதிர்காலம் குறித்த பயம் ஒரு பெரும் இருளைப் போல் என்னைச் சூழ்ந்திருந்த நாட்கள் அது!
அப்பாவின் தங்கைக்கு ஏற்பட்ட வைத்தியச் செலவுகளுக்காக வாங்கிய கடன் – என்னை கல்லூரியில் சேர்க்க வாங்கியிருந்த கடன் – அப்பாவுக்கு காலில் அடிப்பட்டு அந்த
வைத்தியத்திற்கு வாங்கிய கடன் – அவர் சரியாக தொழிலை கவனிக்க முடியாமல் நொடிந்து போயிருந்த நிலை.. என்று சுற்றிச் சுற்று கடன். பந்தம் பாசம் நேசம் காதல்
என்று அத்தனை வகை உறவுகளும் பணம் என்னும் அடித்தளத்தின் மேலேயே கட்டப்பட்டிருந்ததை எனக்கு வாழ்க்கை மண்டையில் ஆணி அடித்து இறக்கியதைப் போல்
கற்றுக் கொடுத்த நாட்கள் அது.
இந்த இடத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னுமொரு விஷயம் எனக்கும் அப்பாவுக்குமான உறவு. அது வரையில் – அதாவது நான் படித்து முடிக்கும் வரையில் – நான் அதிகம்
வெறுத்த ஒரு மனிதர் என் அப்பா தான். மிகக் கண்டிப்பானவர். நிறைய அடிப்பார். ஆனால் அந்த ஆறு மாதம் நான் வேலையற்று இருந்த நாட்களில் ஒரு முறையென்றால் ஒரு முறை
கூட கடுகடுப்பாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சில சமயங்களில் பரிதாபமாய் பார்ப்பார் – இப்போதும் கூட நேரில் பார்க்கும் போது சில சமயங்களில் அதே பரிதாபப் பார்வையை
உணர்ந்ததுண்டு. அந்தப் பார்வை – புதிதாய் போர்க்களத்துக்குப் போகும் வீரனை அடிபட்டு திரும்பி வரும் வீரன் பார்ப்பானே அதே பார்வை!. ஒரு வேளை அவர் கூட என் நிலையைக்
கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும் கூட உறவுகளின் போலித்தனத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சடித்த மாயக்காகிதங்களை துரத்தி ஓய்ந்திருப்பார்.
ஒரு காலத்தில் என்னைப் போல் ஒரு பந்தையக் குதிரையாக இருந்திருப்பார். இப்போதோ கிழட்டு பந்தையக் குதிரை – என்னிலும் மோசமான ஒரு நிலை. பந்தையக் குதிரைகளுக்கு
மதிப்பு அது திறமையாக ஓடும் வரை தான்.
ஒரு வழியாக வேலை கிடைத்து கொஞ்ச நாளிலேயே திருப்பூருக்கு மாற்றலானது – “அய்யோ செல்வா.. நீயில்லாம இந்த வீடே வெறிச்சோடிப் போகுமே”… - நான் சந்தோஷமாய்
திருப்பூர் கிளம்பினேன். அதே நேரத்தில் சகோதரிக்கு அவசர அவசரமாய்க் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, எழுபத்தையாயிரம் வரதட்சினை, நகை, பெரிய மண்டபத்தில் வரவேற்பு -
என் தலைமேல் ஒன்னறை லட்சம் புதிய கடனும் ஆறாயிரம் வட்டி கட்ட வேண்டிய பொறுப்பும் வந்து விழுந்தது.
திருப்பூரில் தங்கும் செலவும் போக்குவரத்து செலவுக்கு பெட்ரோல் காசும் கம்பெனி கொடுத்து விட எனக்கு சாப்பாட்டு செலவு மட்டும் தான். சம்பளம் அப்படியே வீட்டுக்கு
போய்விட வாரா வாரம் கிடைக்கும் லோக்கல் அலோவன்ஸில் தான் சாப்பாடு. அலைச்சலும் ஏற்றபடி அலோவன்ஸ் ஏறும் இறங்கும். சில சமயம் நூற்றைம்பது.. அதிக பட்சம் முன்னூறு.
பல வாரங்கள் அலோவன்ஸ் வர தாமதமாகும். அப்படியான சமயங்களில் மதிய உணவு வேர்க்கடலையும் அரை லிட்டர் தண்ணீரும் தான். காலையும் மாலையும் பாட்டியம்மா இட்லி.
அவர் பெயர் கூட இப்போது மறந்து விட்டேன். காலையும் மாலையும் இட்லி கொண்டு வருவார். அமிர்தம் போலிருக்கும் – காரணம் அதன் விலை – ஐம்பது பைசா!
திருப்பூர் ஒரு வினோதமான ஊர். ஒரு குட்டித் தமிழ்நாடு என்று சொல்லலாம். எல்லா வகை மனிதர்களையும் பார்க்கலாம். என்னை விட பலமடங்கு இளைய வயதில் வேலை பார்க்க
துவங்கியவர்களை அங்கே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன பிள்ளைகள் டையிங் செக்ஷன்களில் உடலெல்லாம் சாயத்தோடும் கெமிக்கல் வாசத்தோடும் கண்களில் எந்தக்
கனவுகளும் இல்லாத சிறுவர்கள். ம்ம்ம்ம்… அப்துல் கலாம் இது வரையில் கற்பனையில் கூட பார்த்திராத சிறுவர்கள். நாளொன்றுக்கு அய்ம்பது ரூபாய் வாங்குவார்களாயிருக்கும். அங்கே கம்பெனிகளெல்லாம் பழைய பண்ணைகளின் புதிய உருவம் தான். பெரும்பாலான கம்பெனிகள் கவுண்டமார்களுக்கும் நாயக்கர்களுக்கும் தான் சொந்தமாயிருக்கும்.
அவர்களுக்கும் சாதிவாரியாக சிண்டிகேட் எல்லாம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கம்பெனிகளில் பண்ணையார்த்தனம் கொடிகட்டிப் பறக்கும். முதலாளி பண்ணையார் -
மேனேஜர் – சூப்பர்வைசர்களெல்லாம் கங்கானிகள்! பதிநான்கு மணி நேரம் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து வேலை வாங்குவார்கள். அந்தச் சிறுவர்கள் தாம் உலகத் தரமான டிசர்ட்டுகளை உருவாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் நாளெல்லாம் அலைந்து திரிந்தும் தீனி கிடைக்காத ஆடுகள் கிடைக்குத் திரும்புவதைப் போல – ஜோம்பிகளைப் போல – அவர்கள் வீடு திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். அதே ஊரில் தான் எந்த லேட்டஸ்ட் மாடல் காரானாலும் – உலகில் எந்த மூலையில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் – அடுத்த ஒரே மாதத்தில் சாலையில் ஓடிப் பார்த்திருக்கிறேன்.
கருமத்தம்பட்டி, அவினாசி, பெருமாநல்லூர், பெருந்துரை, கோபி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் என்று சுற்றுப்பட்டில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து காலை
நேர திருப்பூர் பேருந்து எதிலாவது ஏறி ஒரு ஆறு மாதம் தொடர்ந்து பயணித்தால் வாழ்க்கைக்கான அத்தனை பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம். பள்ளிக்கூடத்திலிருந்து
பாதியிலேயே பிடுங்கியெறியப்பட்ட பிள்ளைகள். தாலிக்கு பவுன் சேர்க்கும் கனவுகளோடு பதின்மவயதுப் பெண்கள் -அவர்களை நெரிசலில் உரசிப் பார்க்கத் துடிக்கும் காலிகள்.
வரண்டு போன நிலத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டே அதற்கு காரணமான திருப்பூர் சாயப்பட்டரைக்கு வேலைக்காக பயனிக்கும் விவசாயி. ஊரில் சித்தாள் வேலை கிடைக்காத
வயதான பெண்மணி -
அந்தச் சூழல் முதலில் எனக்கு திருப்தி அளித்தது – குரூர திருப்தி. ஒரு அலட்சியமான கோணல் சிரிப்பு. இளக்காரமான பார்வை. உனக்கு நான் மேல் என்கிற இறுமாப்பு..
அந்த வருட தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. அந்த தீபாவளிக்குப் பின் நான் தீபாவளி கொண்டாடியதேயில்லை – வேறு எந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை.
பொதுவாக எனக்கு வரும் அலோவன்ஸ் என் சீனியரின் பெயருக்கு செக்காக வரும். அவரும் நானும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம் – பகல் நேரங்களில் அதுவே தான்
ஆபீஸும் கூட. அவர் அந்த சமயத்தில் தீபாவளிக்காக ஒரு வாரம் முன்பே விடுப்பில் சென்றுவிட்டார். அந்த தீபாவளி ஒரு மாதக் கடைசியில் வந்து சேர்ந்தது. ஒரு வாரமாக சீனியர் இல்லாததால் வண்டியில் பெட்ரோல் கூட கிடையாது. அன்று காலை என் தூங்கி எழுந்த போது பாக்கெட்டில் மொத்தமாக ஒரு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தது. இண்டு இடுக்கிலெல்லாம் தேடியதில் இன்னுமொரு மூன்று ரூபாய் தேறியது. ஒரு மூன்று ரூபாயை தனியே வைத்தேன் “இது இட்லிக்கு” இன்னொரு மூன்று ரூபாயை பாக்கெட்டில் போட்டேன் “டீக்கும்
பிஸ்கட்டுக்கும்”
“மதியத்திற்கு?”
அறை முலையில் குவிந்து கிடந்த பழைய நாளிதழ்கள் கண்ணில் பட்டது. என் சீனியருக்கு தினசரி இரண்டு நாளிதழ்கள் வாசிக்கும் வழக்கம் – தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று.
ஒரு ஆறேழு மாதமாய் அது சேர்ந்திருந்தது. அலுவலக தொலைபேசியில் இருந்து அவருக்கு கூப்பிட்டேன்,
“பாஸ், செலவுக்கு காசு வேணும்… நம்ப ரூம்ல இருக்கற பேப்பரை வேஸ்ட்டுக்கு போட்டிடவா? நீங்க கன்வேயன்ஸ் வந்ததும் அதில் கழிச்சிக்கங்க”
“ஓக்கே டா”
மொத்தமாக ஒரு நாற்பது கிலோ தேறியது. அதற்குள் இட்லி வந்துவிட குளித்து சாப்பிட்ட உடன் அதை சிரமப்பட்டு வாசலுக்கு கொண்டு வந்தேன். இதையெப்படி கடைவரைக்கும்
சுமப்பது என்று குழம்பி நின்ற போது -
“என்னண்ணே, வேஸ்ட்டுக்கா?” எதிர் அறைப் பொடியன். மதுரைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு ஊர். பக்கத்தில் ஏதோ கம்பெனியில் பேக்கிங் செக்ஷனில் வேலை. அவர்கள் ஒதுக்கிக்
கொடுத்திருந்த புறாக்கூண்டில் வசிக்கும் பத்துப் பொடியன்களில் ஒருவன்.
“ஆமாண்டா… நீ ஊருக்குப் போகலையா?”
“போனஸ் தரலைண்ணே”
“மற்றவங்களைக் காணலியே?”
“அவங்கெல்லாம் பக்கத்திலே ஈரோடு தானே.. நேத்தே கிளம்பிட்டாங்க”
“ஓ…”
“அண்ணே… சாப்ட காசில்லண்ணே.. இதக் கடை வரை தூக்கியாறேன்.. பத்து ரூவா தாரீங்களா?”
அன்றைக்கு நாங்களிருவரும் பகத்திலிருந்த “அன்பு” மெஸ்ஸில் சாப்பிட்டோம். இரண்டு அப்பளம் வைத்து அன்லிமிடட் மீல்ஸ். சர்வர் சோர்ந்து போகும் வரை வாங்கி வாங்கி சாப்பிட்டோம்.
அதற்குப் பின் மூன்று விஷயங்களை நான் செய்ததில்லை – ஒன்று – பண்டிகைகள் கொண்டாடுவதில்லை – இரண்டு – கஷ்ட்டப்பட்டு உழைப்பவர்களைப் பார்த்து ‘இவங்களுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை” என்று திருப்தி அடைந்து கொள்வதில்லை – மூன்று – சாப்பிடும் பொருளை வீணாக்குவதில்லை.
ஒரு விஷயம் செய்வதுண்டு -
எப்போதெல்லாம் கண்ணதாசன் பாட்டான “உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகளை கேட்க நேர்கிறதோ அப்போதெல்லாம்
“தெவ்டியாப்பய… அயோக்கிய ர்ராஸ்கல்” என்று நினைத்துக் கொள்வதுண்டு.
ஒரு வருடம் திருப்பூர், அப்புறம் சென்னை, கொஞ்சம் நாள் பெங்களூர், கல்கட்டா, பிறகு ஒரு வருடம் டில்லி, இப்போது கடைசியாக இங்கே இரண்டு வருடம்.
சொந்த ஊர். சொந்த மக்கள். தாய் மொழி. நம்மவர்கள். என்று எல்லா பிடிப்புகளும் உதிர்ந்து மறைந்து விட்டது. காசில்லாதவன் / வேலையில்லாதவன் எந்த மொழிக்காரனாய்
இருந்தாலும் எந்த மதத்துக்காரனாய் இருந்தாலும் எந்த ஊர்க்காரனாய் இருந்தாலும் மதிப்பற்றவன் தான். உழைத்துப் பிழைப்பவனுக்கு இந்த நேசங்கள்,பிடிப்புகள் பற்றியெல்லாம் சிலாகித்துக்
கொள்ள எந்த இனிமையான நினைவுகளும் இருக்க வாய்ப்பில்லை. அந்த திருப்பூர் சிறுவனிடம் போய் தேசபக்தி~மொழிப்பற்று~மதம்~இனப்பற்று~சொந்தம்~பந்தம்~காதல்~அன்பு
என்று பேசிப்பாருங்கள் – காறித் துப்பி விட்டு தன் வேலையைப் பார்க்க போய்விடுவான். பத்து நிமிடம் நின்று காது கொடுத்து விட்டு லேட்டாகப் போனால் நாளைக்கு சோறு கிடைக்காது.
இது தான் உண்மை – வலிக்கும் உண்மை!
ரயில் ஏதோ ஒரு பெயர் தெரியாத ஸ்டேஷனில் நின்றது. வெளியே பயங்கரமாக மழை பெய்திருந்தது. சன்னலை உயர்த்தி வெளியே பார்த்தேன். தண்டவாளத்திற்கு பக்கவாட்டில் மழைத்
தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பாலித்தீன் காகிதம் இழுத்துக் கொண்டு நீரின் போக்கில் போனது.
சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!
சாரு நிவேதிதா தொடங்கி.. ஜெயமோகன் வரையுள்ள இலக்கிய கழட்டிகளிடமும்.. வலைப்பூ உலகில் பல வடிவத்தில் (மன/மல)குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் சொறியர்களிடமும் ( மேற்படி கோமான்களுக்கு சொறிந்து விட்டுக் கொண்டிருப்பதே தம் கடன் என வாழும் அல்ப்பைகள்) கேட்கவென்றே சில சந்தேகங்கள் இருக்கிறது..
அதெப்படி உங்களுக்கு மட்டும் உலகமே சமூக/பொருளாதார ரீதியில் கொந்தளிப்பான சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் பின்நவீனம்/முன்நவீனம்/சைடுநவீனம்/அப்பர் & லோயர் நவீனம் என்று இலக்கிய அரிப்பு தீராமல் இருந்து கொண்டேயிருக்கிறது?
பக்கத்தில் நமது ரத்த சொந்தங்கள் வீடிழந்து நாடிழந்து உறவுகளை இழந்து பராரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் போதும் உங்களால் “குட்டிக்கதை” “புட்டிக்கதை” “காமக்கதை” என்று எந்த கூச்சமும் இல்லாமல் வாந்தியெடுக்க முடிகிறதே எப்படி?
சாதாரண மனிதன் ஒருவன் கூட அநியாய சாவுகளைக் கண்டு உள்ளம் குமுறும் போது உங்கள் “இலக்கிய” எழவெடுத்த மனமோ அதில் கூட அழகியலைத் தேடுகிறதே எப்படி?
எழவு வீட்டின் ஒப்பாரியில் இருக்கும் உலக இசையின் கூறு என்னவென்று தேடும் கூறுகெட்ட புத்தி உங்களுக்கு மட்டும் எப்படி?
அவன் கிள்ளினான் / இவன் ஏசினான் என்கிற ரீதியில் உங்கள் உலகத்தைச் சேர்ந்த சக மிருகங்களோடு மல்லுக்கட்ட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஒரு சதவீதமாவது ஈழத்தில் செத்துப் போன எங்கள் சகோதரனுக்காக ஒரு கவிதையோ / கட்டுரையோ எழுத எடுப்பதில்லையே ஏன்?
தாஸ்தாவெஸ்கி~டால்ஸ்டாய்~மிஷெல் பூக்கோ~இந்திய விவசாயி = இந்த வரிசையில் இறுதியில் வரும் இலக்கியவாதி குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே?
ஏழு நிமிடம் பத்து வினாடிகளில் கடவுளை இசையாய்த் தேடும் உங்கள் காதுகளில் ரை இசையில் இன்பம் தேடும் உங்கள் காதுகளில் முப்பது வருடங்களாய் பக்கத்துத் தீவிலும்~ கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இந்திய வயல் வரப்புகளிலும் ஒலித்து வரும் ஒப்பாரி கேட்க வில்லை அல்லவா? அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால் தான் என்ன?
சிதறும் ரத்தத் துளிகளில் ஓவிய நளினம் தேடும் உங்கள் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொறுகினால் தான் என்ன?
போங்கடா நீங்களும் உங்க இலக்கிய மசிரும்..
ஊரே சாவு வீடாய்க் கிடக்க கொண்டாட்டமாய் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவன் அல்பையென்றால் இந்த இலக்கிய நாதாரிகளோ அறிவார்ந்த அல்பைகளாய் இருப்பார்கள் போலிருக்கிறது.
அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
”ச்சை.. சனியனுங்க.. இப்பத்தான் கரெண்ட நிப்பாட்டனுமா நிம்மதியா சாப்புடக்கூட உடமாட்றானுக”
”இருய்யா மெளுகு வத்தி கொளுத்தறேன்”
”பாத்துப்போடி… வழியிலே சேர் கெடக்குது”
”ஆமா.. இது பெரிய்ய அரமனை.. இருந்தாலும் தடவிக்கிட்டு தானே போவனும்?”
”கெட்ட கேட்டுக்கு அரமன சொகுசு கேக்குது பாரு”
“உன்ர வாய்க்கு ஒன்னும் கொரயில்லைய்யா.. இந்தா சீக்கிரமா தின்னு முடி. மெளுகு வத்தி வெளிச்சத்துக்கு பூச்சி வரும்”
”அடிப்போடி.. இந்த ரேசன் அரிசியத் திங்கரதும் பூச்சியத் திங்கரதும் ஒன்னுதான்”
”ஒனக்கெல்லாம் ரூவாய்க்கு கிலோ அரிசி போட்டா அல்லைல கொளுப்பு கட்டுது”
”குடுக்கும் போது கிலோ ரூவாய்க்கு குடுக்கறான்.. அடுத்த நா காலைல காக்கிலோவுக்கு ரெண்டு ரூவா கேக்கறான்.. போடி நீயும் ரூவா அரிசியும்”
”நீ உங்கரக்கு ஆதரிச்சா பேள்ரதுக்கு வழியென்னங்கர”
” உங்கச் சோறு போட்டவன் இருக்கவனெல்லா பேள வழி இருக்கவனான்னு பாத்தா போடறான்?”
“செரி செரி சோத்தத் தின்னு முடி.. நரகலப் பத்தி பேசற நேரத்தப் பாரு”
”மணி ஒம்போதாகுது.. பய்யனெங்கடி?”
”ஆறாம்மவங்கிட்டெ புக்கு வாங்கப் போறேன்னு ஆறு மணிக்கிப் போனவன்… சேக்காளிகளோட சேந்து எங்கியாவது நாயமடிச்சிட்டிருப்பான்”
”சின்னப் பாப்பாளுக்கிறுக்கர பொறுப்பு இந்த நாயிக்கில்லே பாரு.. இஸ்கூல்லேர்ந்து வந்தமா படிச்சமா பொட்டாடம் தூங்குனமான்னு இல்லாம தெருப்பொறுக்கிட்டு அலையறான்.. பண்னெண்டாவது படிக்கறமே மார்க்கில்லேன்னா அப்பன மாறி நாமளும் கூலிக்குத் தான் போகனுமேன்னு பயமாச்சுமிருக்கா அவனுக்கு”
“அட சும்மாருய்யா.. மார்க்கெடுத்தா மட்டும் நீயென்ன டாக்டருக்கா படிக்க வச்சிரப்போறே?”
“நீ தாண்டி அவன செல்லங்கொஞ்சிக் கெடுக்கர”
”வக்கில்லாதவனுக்கு வாயி மட்டும் ஏளு மயிலு நீளமாம்மா..”
”இப்புடிப் பேசியே அவன் வீணளிஞ்சிப் போயிட்டாண்டி.. இந்த வருசம் அவனுக்கு பீசு கட்ட எத்தினி செரமப் பட்டோம்? ஏதோ ராயப்பன் தெரிஞ்சவனாகப் போயி ரண்டு வட்டிக்கி கொடுத்தொதவினான்,, இனி அடுத்தாப்புல காலேஜில சேக்கோனும்னா எவங்கிட்டேடி போய் நிக்கறதுன்னு நானே கவலயில இருக்கேன்”
”சரி உடுய்யா.. அவஞ்சோட்டுப் பசங்களப் பாத்தியா.. ஒவ்வொன்னும் கலர் கலரா உடுத்துக்கிட்டு பட்டாம்பூச்சி மாறி சுத்திக்கிட்டு இருக்குதுக.. நமக்கிருக்க வக்குக்கு சாயம் போன சட்டையத்தான் வாங்கிக் குடுக்க முடியுது.. அவனுக்கும் ஆசயிருக்காதா? கிரிக்கெட்டாடப் போகோனுமின்னாலும் சொந்தமா மட்ட வாங்கிட்டு வரச் சொல்றாங்களாமா.. ஏதோ சேக்காளிகளோட பேசறது அவனுக்கு சந்தோசம். அதையுமா நாம கெடுக்கோனும்?”
“இப்புடியே உட்டா அவனும் நாளைக்கு என்னிய மாறி கம்பி கட்டத்தான் லாயக்காவாண்டி. இந்த நாயிப் பொழப்பு நம்ம தலக்கட்டோடயே போகட்டும். இன்னிக்கு நா கண்டிசனா பேசறது அவனுக்கு கஸ்டமாத்தா இருக்கும்.. ஆனா நாளைக்கு அவங்குடும்பம் கடைல அரிசி வாங்கிச் சாப்புடும் போது நெனச்சிப் பாத்துக்குவான்.. அவனாவது அவம்பையனுக்கு நல்ல துணி வாங்கிக் குடுக்கட்டுமே”
“எல்லாஞ்செரிதான்யா.. இதெல்லா அவனுக்குப் புரியுமா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிப் போடற.. அவனும் மூஞ்சியத் தூக்கிட்டு உங்காமத் திங்காம சுருண்டு படுத்துக்கறான்.. சின்னப் பய்யன்யா.. வளர வேண்டிய வயசு. மத்தவிங்க ஊட்டு நெலமையும் நம்மூட்டு நெலமையும் புரியவா போகுது? தீவாளி வருது.. எல்லாரும் இப்பவே புதுசு புதுசா எடுத்துப் போட்டுட்டு அலையுதுக.. நாம ஒரு வருசமாச்சும் நோம்பியன்னிக்கு புதுசு வாங்கிக் குடுத்துருக்கமா?”
“இதெல்லா அவங்காது படப் பேசிப்போடாத.. இதெல்லா கேட்டா அவனுக்கு இன்னுங்கொஞ்சம் தொக்காயிடும்.. உப்பக் கஸ்டப்பட்டா பின்னாடிக்கி நல்ல நெலமைக்கி வந்துருவாண்டி. ”
”ஆசையிருக்குது ஆன மேல போக.. வகையிருக்குது வக்கத்த நெலைலன்னு சொன்னா மாறி இருக்குது நீ பேசறது..”
” நீ வேனாப் பாருடி.. எந்தலைய அடமானமா வச்சாவது எம்பய்யன இஞ்சினீராக்கத்தாம் போறேன்”
“இஞ்சினீராமா இன்ஞ்னீரு.. இஞ்சி விக்க அனுப்புனா இப்புடி மஞ்சச் சோத்தத் திங்கரக்கு பதிலா வெள்ளச்சோறாச்சும் திங்கலாம்..அவனும் ஆசப்பட்டத தின்னு விருப்பப்பட்டத உடுத்திக்குவான்”
“உன்ர கரி நாக்க வச்சிட்டு சும்மா இருடி..”
“என்ர கரி நாக்கு கெடக்கட்டும் கெடயில.. நீ மொதல்ல தின்னு முடிக்கர வழியப் பாரு”
ஒரு தேவதையின் மரணம்…!
போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை.. குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?
ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.
“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”
“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”
“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”
“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”
ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும் ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.
அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.
“வீட்டுக்குப் போகலையா?”
“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”
“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”
“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”
“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”
“அதுக்கில்லே…”
“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”
“………..”
“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”
“அதெப்படி…..”
“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”
“நல்ல மார்க் வாங்கனும்”
“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”
“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.
“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”
எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..
“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”
“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.
“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”
“ம்…”
“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”
“ஆனா எப்படி…?”
“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”
“ச்சும்மா இருக்கேன்”
“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”
“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”
“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”
“ம்… சரி”
“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”
“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது
“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”
“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”
“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”
“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”
கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”
அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள். அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.
“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”
“போடி.. அது என் ஸ்டைல்”
“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”
“ம்ம்… சரி”
‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”
“ம்ம்.. சரி”
“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”
“எனக்கு தெரியலடி…”
“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”
“ம்ம்.. சரி”
எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள். ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..
ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..
“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”
“என்ன?”
“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”
“ஏன்?”
“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”
“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”
“என்ன?”
“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”
“அது சரியா வராதுடா..”
“ஏன்?”
“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”
நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..
முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.
கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.
“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.
“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..
“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”
“எங்கே?”
“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”
“எதுக்குடா?”
“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”
“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”
“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”
“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.
“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”
வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”
“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”
“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”
“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”
“சந்தோஷமா இருக்கா?”
“அதெப்படி நமக்குத் தெரியும்”
“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”
“இப்ப என்ன சொல்ல வர்றே”
“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”
“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”
“பொண்ணு?”
“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”
“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.
அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.
“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”
“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”
“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”
“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”
திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம். எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
” சரி நான் போறேன் “
“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”
“வேணாம் நான் போறேன்”
“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.
“இல்ல போறேன்”
“சரி.. போ….”
சில பயணங்கள் சில அனுபங்கள்..
போன மாதம் பணி காரணமாக நானும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த எனது ஜூனியரும் நாகபுரி செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு அரசு நிறுவனம். அங்கே பாதுகாப்பான
ஒரு அறையில் மிகவும் பாதுகாப்பாக பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு இயந்திரத்தைப் பார்த்தோம். அது மிகக் கவனமாய் உறை போட்டு மூடப்பட்டு இருந்தது. பார்த்த
உடனே தெரிந்து விட்டது அதன் உறைகளைக் கழற்றியே பல வருடங்கள் இருக்குமென்று. நாங்கள் பார்க்கப் போயிருந்த அதிகாரியை அது பற்றிக் கேட்டோ ம்.
அது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு இயந்திரமென்றும் அதன் விலை என்பது கோடியென்றும் இதே போன்ற இயந்திரம் மற்ற ஊர்களில் இருக்கும்
அதே நிறுவனத்தின் மற்றைய கிளைகளிலும் இருக்கிறதென்றும் பெருமையாகக் குறிப்பிட்டார். நாங்கள் அது ஏன் உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது என்று கேட்டோ ம். அதற்கு அவர்
அதை எதற்கு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று அங்கே உள்ள ஒருவருக்கும் தெரியாது என்றும் அது வாங்கப்பட்ட
கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாகவே ஒரு முறை கூட இயக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேலை முடிந்து சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருக்கும் போது உடன் வந்த எனது ஜூனியர் -
” என்ன அநியாயம் பாத்தீங்களா சார்.. நம்மளோட வரிப்பணமெல்லாம் எப்படி வீணாகுதுன்னு” என்றார்
“என்ன சொல்றீங்க.. புரியலையே” என்றேன்
“இல்ல.. அந்த இயந்திரத்தோட விலை என்பது கோடின்னா.. இவங்களோட பத்துக்கும் மேற்பட்ட கிளைகள்ல இப்படித்தானே சும்மா தூங்கிக்கிட்டு இருக்கும்?’
“ஆமா.. அதுக்கென்ன?”
“ஒரு என்னூறு கோடி ரூவா இப்படி அநியாயமா யாருக்கும் பயனில்லாம அனாமத்தா போயிடிச்சே?”
“சரி என்னா செய்யலாம்கறீங்க?”
“இல்ல சார் இந்த கவர்மெண்ட் சரியில்லைங்க”
“அப்ப எந்த கவர்மெண்ட் சரின்றீங்க? ஆபீசருங்கெல்லாம் ஒழுக்கமா என்ன?”
“எல்லாருக்கும் உள்கை இருக்குமில்லே? எல்லா நாயுங்களும் அயோக்கியனுங்க தான் சார்”
“அப்ப என்ன தான் பண்ணலாம்கறீங்க”
“இவனுக பூரா பேரையும் தொரத்தி வுட்டுப்பிட்டு.. நம்ம காசு நமக்கே பயன்படறா மாதிரி ஒரு கவர்மெண்டு உருவாகனும்க.. டோ ட்டலா எல்லாத்தையும் மாத்தனும் சார்”
“எல்லாம் சரிதான் யார் செய்யப்போறா? நீங்க அதுக்கெல்லாம் வேலை செய்யத் தயாரா?”
“………..”
சென்னை தான் வந்து சேர்ந்தது.. பதில் வரவில்லை
___________________________________________________________________________________________________
சில வாரங்களுக்கு முன் நன்பனுக்கு சேலத்தில் அவசர கல்யாணம் – காதல் கல்யாணம். திடீர் முடிவு. திடீர் அறிவிப்பு. எனவே திடீர் பயணம்.
சேலம் செல்ல கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் ஏறினேன். ஏறும் போது நடத்துனரிடன் சேலம் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அவர் ஏழு மணி நேரம்
ஆகுமென்றார். அப்போது மணி காலை பத்து. எப்படியும் ஐந்து மணிக்கு சேர்ந்து விடலாம் என்று ஏறி அமர்ந்து கொண்டேன்.
பேருந்து ஆரம்பத்திலிருந்தே நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது. எனக்கு அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்து வந்தார். தாம்பரம் தாண்டியதும் பேருந்து வேகம் பிடிக்கும்
என்று நாங்கள் பேசிக் கொண்டோ ம். தாம்பரமும் தாண்டியது. ஆனாலும் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. டிவிஎஸ் 50 வண்டிகள் கூட எங்கள் பேருந்தை முந்திக் கொண்டு
போகும் அளவு வேகத்தில் தான் எங்கள் பேருந்து போய்க் கொண்டிருந்தது. திண்டிவனம் தாண்டியதும் பயனிகள் பொருமையிழந்து விட்டார்கள்…
கடந்து செல்லும் நடத்துனரை ஒவ்வொருவரும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். நடத்துனர் பரிதாபமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்..
“சார் நான் என்னாங்க பன்றது.. வண்டி கண்டிசன் அவ்வளவு தான். நாப்பதுக்கு மேல போனா படுத்துக்கும்.. நானும் இது ரெண்டாவது சிப்டு பார்த்துட்டு இருக்கேன். ஆளுங்களும்
இல்ல… எப்பா எறங்கி வீட்டுக்குப் போயி படுக்கலாம்னு இருக்கு என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்றார்..
பயனிகள் ஒவ்வொருவரும் பாய்ந்து பிடுங்கி விட்டார்கள்.
“வண்டி வேகமாப் போகாதுன்னாக்க ஏன் சார் எடுக்கறீங்க? ஏறும் போதே சொல்லலாமில்லே? ஏன் சார் எங்க உயிர வாங்கறீங்க?”
“நான் என்னாங்க செய்யட்டும்? வண்டி கண்டிசன் சரியில்லே… ஸ்பேர் பார்ட்ஸ் எதுவும் ஒர்க்சாப்பில் இல்லை.. மெக்கானிக் இல்ல.. புதுசா ஆளுங்களும் எடுக்கறதில்ல..”
விழுப்புரம் வந்து சேரும் வரை ஒவ்வொருவரும் பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் கரித்துக் கொட்டிக் கொண்டு வந்தார்களே ஒழிய ஒருவர் கூட அரசு பேருந்தின் அந்த அவல
நிலைக்குக் காரணமான அரசையோ, அரசு போக்குவரத்துக் கழகத்தையோ பற்றி பேசவேயில்லை.. எல்லோரும் தங்கள் கோபத்தை நடத்துனர் மேலும் ஓட்டுனர் மேலும் கொட்டித்
தீர்த்தார்களே தவிர ஒருவர் கூட ஏன் இப்படி ஒரு அரசு நிறுவனம் நலிவுற்றுப் போனது என்பது பற்றி சிந்திக்கக் கூட இல்லை.
விழுப்புரம் தாண்டியதும் நடத்துனர் பொருக்கமாட்டாமல் குமுறித்தீர்த்து விட்டார்..
“யோவ் எறங்கறதுன்ன எறங்கி வேற வண்டில வாங்க சும்மா நைய்யிநைய்யின்னு கத்தாதீங்க.. என்கிட்டே உழுந்து புடுங்கறீங்களே.. போய் கவர்மெண்ட கேட்க வேண்டியது தானே?
இன்னும் நாலு வருச சர்வீஸ் இருக்கு எனக்கு.. ரெண்டு பொண்ணுக கல்யாணம் இருக்கேன்னு பல்லக் கடிச்சிட்டு வேலை பார்த்திட்டு இருக்கேன் நானே.. என்கிட்டே ஏன்யா
எகிறிட்டு இருக்கீங்க? இப்படிக் கேவலமான கண்டிசன்ல பஸ்ஸெல்லாம் மெயிண்டெய்ன் பண்ணி தனியார் திங்கறக்கு வழி விட்டிருக்கானே அதிகாரி அவனைப் போய் கேளுங்கைய்யா..
லாபத்துல தானே பஸ் கார்ப்பரேசன் போனிச்சி.. அப்புறம் ஏன் மெண்டெனன்ஸ் செய்யாம நஸ்டத்துக்கு கொண்டாந்தீங்கன்னு அங்க போய் கேளுங்கைய்யா.. வந்துட்டானுக”
ஒரு வழியாக சேலம் வந்து சேர்ந்தது… பயனிகள் எவருக்கும் சொரனை வந்ததா என்று தான் தெரியவில்லை..
___________________________________________________________________________________________________
குலதெய்வத்தை பத்தாண்டுகளாக நான் பார்க்காமல் இருப்பது தான் நான் கோயில் மாடு மாதிரி பொறுப்பில்லாமல் சுத்தக் காரணம் என்று எந்த ஜோசியக்காரனோ அப்பாவிடம்
போட்டுக் கொடுத்து விட.. போன வாரம் என்னை குடும்பமே சேர்ந்து தென் தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் குல தெய்வக் கோயிலுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.
நான் பத்தாண்டுகளுக்கு முன் அவளைப் பார்த்தது.
அவள் ? இசக்கி.
அப்போதெல்லாம் அவளுக்கு கோயில் என்று எதுவும் பெரிதாக இருந்ததில்லை.. தெருவோரத்தில் ஒரு கீத்துக் கொட்டகைக்குள் தான் இருப்பாள்.. எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒரு
தாத்தா தான் பூசாரியாக இருந்தார். அந்தப் பழைய நினைவுகளோடும் அதே எதிர்பார்ப்போடும் போய்ப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. புதிதாக கட்டிடம் எழும்பியிருந்தது. ஐந்தடி உரத்தில்
காம்பௌண்டு முளைத்திருந்தது. அதன் சுற்று முழுதும் காவியும் வெள்ளையுமாக வரிவரியாக இருந்தது. புதிதாக கிரில் கேட் போட்ட
கதவு முளைத்திருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் போட்டிருந்தார்கள்.. “எசக்கி கோயில்” என்ற தகரப்பலகையை காணவில்லை.. கிரில் கேட்டின் முகப்பில் “ஸ்ரீ இசக்கி அம்பாள்” என்று
எழுதியிருந்தது.. “இசக்கி” க்கும் “அம்பாளுக்கும்” நடுவே சமஸ்கிருத ஓம் போட்டிருந்தார்கள்.
“அப்பா கோயில இன்னும் நம்ம பூசாரித் தாத்தா தான் பார்த்துகிடறாரா?” என்று கேட்டேன்
“இல்லடா அவரு செத்துப் போயி தான் நாலு வருசமாகுதே.. இப்ப ஒரு குருக்கள் தான் பார்த்துக்கிட்டிருக்கார்”
“அந்தாளு பாப்பானா?”
“டேய் மரியாதையா பேசுடா.. அவரு குருக்கள்டா”
“குடுமி வச்சி பூணூல் போட்டிருக்கானா சொல்லு?”
“ஆமா அவங்க அய்யருமாருங்கடா..”
“அப்ப அவன் பாப்பான் தான்”
“நீ திருந்தவே மாட்டே..உனக்கு நாக்குல சனி”
“பார்த்தியா.. பாப்பான் வந்ததும் உன் சாமி பேரையே மாத்திட்டான் பாரு..”
“பேர்ல என்னடா இருக்கு..”
“பேர்ல தான் எல்லாமே இருக்கு.. முன்ன சாமி அதும் பாட்டுக்கு ரோட்டோ ரத்துல ஒக்காந்திருந்ததா? போற வர்ற எவன் வேணுமின்னாலும் கும்பிடலாம்.. தொட்டு கூட பாக்கலாம்..
ஆனா இப்ப பாத்தியா உனக்கும் சாமிக்கும் நடுவால இவன் வந்துட்டானில்லே? நம்ம தாத்தா தானே இந்த சாமிய இங்கே வச்சி கீத்துக் கொட்டாய் போட்டாரு.. இப்ப என்னாடான்னா
நீயே மூணாவதாள் மாதிரி வெளியே நின்னு அந்தாளுக்காக காத்துக்கிட்டிருக்கே. உள்ள என்ன பேங்கா நடக்குது? இதுக்கெதுக்கு கதவெல்லா? உனக்கு சாமிக்கும் நடுவாலே வர
இந்தாளு எதுக்கு?”
அப்போதைக்கு அவரிடம் இருந்து பேச்சேயில்லை.. வேண்டுதல் முடிந்து ஊருக்கும் வந்து விட்டோ ம். நேற்று போனில் கூப்பிட்டு கதவு கிரில் கேட்டெல்லாம் எடுத்து விடச்
சொல்லிவிட்டதாக சொன்னார். “குருக்களை” பத்திவிடச் சொல்லியிருக்கிறேன்.. பார்க்கலாமென்றிருக்கிறார்.
கண்ணாடித் திரை
அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.
“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.
“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.
“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.
“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப் போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.
“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..
“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.
“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”
மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..
“டேய் சேவ் பண்ணிக்கடா”
“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”
“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,
“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்.. டோர் நெம்பர் 204″ நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.
எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.
‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.
வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது – இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.
பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் – ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’
எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..
‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.
************************************************************************************************************
“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்
“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு – அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.
அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு – “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.
எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.
இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது -
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம்.
எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.. இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.
“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”
“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”
“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”
ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?
*************************************************************************************************************
டோர் நெம்பர் 204.
உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.
அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.
“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.
“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”
“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.
“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..
“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.
“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.
“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.
“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.
“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா” என்றவாறே எழுந்து விட்டாள்.
“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம் திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.
அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,
“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.
விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.
“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”
“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.
“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”
“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.
“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.
இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்
“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”
“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.
‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.
ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் – கைகளில் காபிக் கோப்பைகளோடு.
காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.
ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.
“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்
“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.
“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.
நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது.
விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.
என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை – கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை – மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ.. மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..
சட்டென்று விழிப்பு வந்தது – தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!
ஊமைப் பட்டாசுகள்!
“ஹம்ப்க்” ஒரே தம்மில் லாவகமாய் அந்த வெங்காய மூட்டையை ஏற்றிக் கொடுத்தான் துரை.
அது தாராபுரத்தின் ஒரு சின்ன காய்காறிச் சந்தை. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வரும் வெங்காயமும் தக்காளியும் தரம் பிரிக்கப்பட்டு சென்னையின் பெரிய சந்தை ஒன்றுக்கு லாரிகளில் லோடடிப்பார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அது. பண்டிகை நாளுக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது சந்தை. போன வருடம் இதே நாளில் எள்ளுப் போட்டால் கீழே என்னையாகி விழும் கூட்ட நெறிசல் இருந்தது துரையின் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.
“ஐய்யே.. கொஞ்சம் மெதுவாத்தான் தாயேன்… ஸ்லிப்பாவுதுபா…” வழுக்கிய ஒரு முனையை அட்ஜஸ் செய்து மேலே தூக்கிக் கொண்டே சொன்னார் பெரிசு.
பெரிசுக்கு என்ன வயதென்றே எவராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அனேகமாக இந்த சந்தை செயல்பட ஆரம்பித்த துவக்க நாட்களிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். பெயர் கூட இன்னதென்று எவருக்கும் தெரியாது – அதைப்பற்றி எவரும் கவலைப்பட்டது கூட கிடையாது – எல்லோருக்கும் அவர் “பெருசு” தான். சந்தை அடைந்த பின் ரோட்டின் எதிர்ப்புரத்தில் இருக்கும் ராயப்பன் டீக்கடையின் திண்ணை தான் பெரிசின் ஜாகை. பச்சைக் கலரில் ஒன்றும் நீலக்கலரில் ஒன்றுமாக இரண்டு முண்டா பனியன்கள் உண்டு அவரிடம். மிகக் கூர்மையாக கவனித்தால் தான் அதன் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். பெரிசுக்கு பேச்சுக் கூட்டாளி துரை தான். வேறு எவரிடமும் அவர் அனாவசியமாகப் பேசி யாரும் கவனித்ததே இல்லை.
“என்னாங்கடா அங்க பேச்சு? எத்தினி மூட்டைய ஏத்திருக்கீங்க?” இருபதுகளின் துவக்கத்தில் இருந்த செட்டியார் மகன் முப்பதுகளின் இறுதியில் இருந்த துரையையும் பெரிசையும் அதட்டல் குரலில் கேட்டுக் கொண்டே மண்டியில் இருந்து வெளியே வந்தான். ஆட்காட்டி விரலை அடையாளமாய்ச் சொருகி ஒரு குமுதத்தைக் கைவிரல்களில் பற்றியிருந்தான். நாளைய ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் புக் பண்ண போக முடியாமல் நாற்றம் பிடித்த வெங்காய மண்டிக்குள் திணித்து விட்டு திருப்பதிக்கு சேத்ராடனம் கிளம்பி விட்ட அப்பனின் மேலான எரிச்சல் மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. உழைப்பேயறியாத ஊளைச் சதை அல்லைகளில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெயில்படாத தேகத்தில் பரவலாக ஒரு மினுமினுப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
“நூத்தம்பது மூட்ட ஆச்சுது மொதலாளி; இன்னும் ஒரு அறுபது தேறும்” பெரிசு பதில் சொல்லவில்லை.
“ஜல்தியா ஏத்துங்கடா.. மெட்றாசுல இருந்து போன் வருது.. வண்டிய அனுப்பனும்ல..”
“செரி மொதலாளி ஒரு டீயப் போட்டுட்டு வந்துடறோம்..” துரையின் பதிலுக்கு செட்டியார் மகன் மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே டேபிளுக்குத் திரும்பினான். ஆட்காட்டி விரல்கொண்டு அடையாளம் வைத்திருந்த குமுதத்தின் நடுப்பக்கத்தை திருப்பிக் கொண்டே ப்ளாஸ்டிக் வலைச் சேரில் சாய்ந்தான்.
துரையும் பெரிசும் ரோட்டைக் கடப்பதைக் கண்ட ராயப்பன் இரண்டு கண்ணாடித் தம்ளர்களை வென்னீரில் ஒரு அலாவு அலாவி பாய்லரின் பைப் முன்பு வைத்தான்.. “ஆத்தாமப் போடு ராயப்பா.. அப்புடியே சின்னக்கட்டு யோகி பீடி ஒன்னு” என்ற துரை இரண்டு போண்டாவை எடுத்து ஒன்றை பெரிசின் கையில் திணித்தான்.
“தொரை.. அறுபது மூட்டைக்கு இது காணுமா..? சாயந்திரமா மேட்டுப்பாளையத்திலேர்ந்து தக்காளி டெம்போ வேற வருது..”
ராயப்பனின் அழுக்கடைந்த எப்.எம் ரேடியோ கரகரப்பாக, “இது ஒன் ஜீரோ பைவ் பாய்ண்ட் நைன் சூரியன் எப்.எம். நீங்கள் கேட்டிக் கொண்டிருப்பது நேயர் விருப்பம். நேரமிப்போது இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…..” என்றபடியே உளரலைத் தொடர்ந்து கொண்டே போனது..
“கேட்டியா பெரிசு.. மணி ஏற்கனவே ரெண்டே முக்கா.. சாப்புடப்போனா மணி மூன்ற ஆய்டும். இவிங்கய்யன் மாறி இவனுக்கு பொறுமையே இல்ல.. சும்மாவே கத்திட்டு இருக்கான்..” என்றவாறே ரோட்டின் எதிர்ப்புறத்தில் மண்டியினுள் குமுதத்தில் தலையைக் கவிழ்த்துக் கிடந்த செட்டியார் மகனை சுட்டிக் காட்டினான் துரை.
சின்னக்கட்டு யோகியைப் பிரித்து அதில் ஒன்றை உதட்டோ ரம் சொருகி வெட்டுப்பல்லால் கடித்த படியே.. ” இந்த செட்டிப் பயலுக்கு மூளைல கரையான் புடிச்சிருக்கு போல.. ஏற்கனவே யாவாரம் டல்லு.. ஊரே பூராம் பெரிய பெரிய காய்கடைகள ஏசி போட்டு தொறந்து வச்சிருக்கான்.. போன நோம்பிக்கும் இந்த நோம்பிக்கும் எத்தினி வித்தியாசம்..? போன வருசம் இதே நாளு நானும் நீயுமா ஐநூறு மூட்டைய ஏத்துனோம் ஒவ்வொரு நாளும் மூன்னூறு மூட்டைக்கு கொறவில்லாம ஏத்துவோம்.. இப்ப என்னாடான்னா… நாளுக்கு நூத்தம்பது மூட்ட தேறுனாலே அதிகம்னு வண்டியோடுது.. இத்தினிக்கும் போன வருசம் பத்து மண்டி; இந்த வருசம் நாலு தான் பொழச்சுக் கெடக்குது.. யாவாரமே இப்புடி தெடுமாறிக்கிட்டுக் கொடக்க இந்த செட்டிப்பய பொறுப்பில்லாத மவனக் கொண்டாந்து ஒக்கார வச்சிட்டு திருப்பதிக்குப் போயிருக்கான். அவன் வாரதுக்குள்ளாற இவன் உள்ள
யாவாரத்துக்கும் மொட்டையடிச்சிடுவான் போலிருக்கு…”
நீளமாய்ப் பேசிய பெரிசு புகையை வெளியே தள்ளினார் பெரிசு..
“ட்ட்ட்ட்ட்ட்டொம்ம்ம்ம்”
செவிப்பாறையின் அதிரலில் துரை ஒரு முறை தோளைக் குறுக்கிக் கொண்டான் ” யார்ராவன் கேணப்பொச்சு.. நாளைக்கித்தான நோம்பி.. இப்பயே காதக் கிழிக்கிறானுங்க” முணுமுணுத்துக் கொண்டே துரை திரும்பிப்பார்த்தான். தெருமுனையில் சில பையன்கள் அடுத்த பட்டாசைப் பற்றவைக்க அதன் திரியை நக நுணியால்
கிள்ளியவாறே வந்து கொண்டிருந்தனர். பெரிசு எந்த பாதிப்புமில்லாமல் கடைசியாக ஒருதரம் இழுத்து விட்டு பீடியைத் தூர எறிந்தவாறே ஆமோதிப்பாய் பார்த்தார்.
காலையில் இருந்து சலிக்காமல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததில் அனேகமாய் மறந்தே போய் விட்டிருந்த அந்த விஷயம் துரையின் மனதில் மீண்டும் மேலே எழுந்தது – நாளைக்கு தீபாவளி!
“நோம்பியன்னிக்கு வெடிச்சா பத்தாதா? ஒரு நா மின்னயே வெடிசி ‘எங்கூட்டுக் காசு காரியாகுது பாரு’ன்னு ஊரையேக் கூட்டனுமா?” பெரிசிடமிருந்து ஆசுவாசமாய் அந்த வார்த்தைகள் வெளியேறியது..
துரை கஷ்ட்டமாய் எச்சிலை விழுந்தியவாறே லுங்கியை உயர்த்தி உள்ளே போட்டிருந்த நீல டவுடரின் வலது பக்கப்பையினுள் கையை விட்டு வெளியே எடுத்தான். கூடவே கொஞ்சம் கசங்கிக் கோணலாகிப் போயிருந்த சிரிப்புடன் காந்திக் காகிதங்களும் வெளியே வந்தது. துரை அந்த கோனல் சிரிப்புகளை நேராக்கி நோட்டுகளை ஒரு வரிசையாய் அடுக்கினான். மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்த்தான் – நானூறு! இன்றோடு இருபது நாட்களாய் ஓவர் டைம் செய்து சேர்த்த காசு. மூட்டைக்கு ஒரு ரூபாய் கூலி என்று போட்டால் ‘இன்னிக்கு எப்டியும் ஒரு நூறு சேர்ந்துடும்’ என்று நினைத்துக் கொண்டான்..
இருபது நாட்களுக்குப் பின்னும் அய்னூரு ரூபாய் தான் தேற்ற முடிந்தது என்பது அவனுக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கையில் இருந்த காகிதங்களில் காந்தியின் சிரிப்பில் ஏதோ ஒரு குரூரத்தன்மை இருப்பதாகப் பட்டது அவனுக்கு.. ‘மவனே நீ யாரோ எவரோ… ஆனா என்னிக்காவது கைல மாட்டினே… ங்கொய்யால’ மனதுக்குள் கருவிக் கொண்டே அந்தத் தாள்களை மீண்டு வலது பக்க பையினுள் திணித்துக் கொண்டான்.
இன்னும் பற்ற வைக்க மறந்த பீடியை பற்ற வைத்து உதட்டுக்குக் கொடுத்தான். புகை காரமாக தொண்டையைக் கடந்து நுரையீரலை நிரப்பியது. இறுக்கமாக இருந்த ஏதோவொன்று உள்ளே தளர்ந்தது. எப்படி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினான்.. காலையில் கிளம்பும் போது சின்னவன் சொல்லியனுப்பிய வார்த்தைகள் வேறு உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“யப்போவ் நீ ஏன் எனுக்கு இன்னியும் புது டிரஸ் எடுக்கல? இன்னிக்கு வரும்போது புதுத்துணி.. பட்டாசு..லட்டு எல்லாம் வாங்கிட்டுவாப்பா..
சேகருக்கெல்லாம் போன வாரமே துணி எடுத்தாச்சு தெரீமா?” பத்து வயது சிந்தனைக்கு அப்பனை யாரோடு ஒப்பிடுவது என்று கூடத் தெரியவில்லை. கடைசி வாக்கியத்தை முடிக்கும் போது சின்னவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.
“சரிடா கண்ணு” நம்பிக்கையே இல்லாமல் நம்பிக்கை சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… “கமலாவுக்கு இன்னிக்கு முறுக்குக் கம்பெனில வாரக் கூலி கொடுத்துடுவாங்க.. அது ஒரு நானூறூ.. நம்மளோடது ஒரு அய்நூறூ.. மொத்தமா ஒரு தொள்ளாயிரம் தேறுது.. இதில பெரியவனுக்கும் சின்னவனுக்கும் துணி..அப்புறம் பட்டாசு பலகாரம்….- ம்ஹூம் இது பத்தவே பத்தாது.. என்ன செய்யலாமென்ற கேள்வி உள்ளே பிடுங்கித் தின்றது
பெரியவன் ஏதும் பேசவில்லை. பதின்ம வயதுகளின் மைய்யத்திலிருக்கும் அவனுக்கு அரைகுறையாய் நிலவரம் புரிந்தது.
அவன் பார்வையாலேயே சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டான். திங்கட் கிழமை புதுத் துணியோடு பள்ளிக்கு வரும் பையன்கள் மத்தியில் பழையதைப் போட்டுக் கொண்டு போவது இன்னும் முழுமையாய் உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவனுக்குள்ளே எப்படிக் கூசும் என்பதை துரையால் உணர முடிந்தது.
இருபது நாட்களாக பதினாறு மணிநேரம் வேலை செய்து பார்த்தாகி விட்டது. மதிய வேளையில் வெறும் போண்டா டீயுடன் இருபது நாட்களாக சமாளித்தும் பார்த்தாகி விட்டது. ஆனாலும் ஐநூறு தான் தேறி இருக்கிறது. போன வருடம் தீபாவளி சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சந்தையை நினைத்துப் பார்த்தான். அடுத்த வருடத்தைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது. பத்து வயதில் தாய் தகப்பனை இழந்து விட்டு அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த பொது அள்ளி அனைத்துக் கொண்ட சந்தை. போன வருடமெல்லாம் ஒவ்வொரு காய்க்கும் தனித்தனியே ஒரு நான்கைந்து மண்டிகளாவது இருக்கும். வெங்காயத்துக்கு மட்டுமே பத்து மண்டிகள் இருந்த நாட்கள் அது. இன்றோ அதில் பாதி ஆவியாகி விட்டது. சென்னைக்கு லோடடிக்கும் லாரிகளும் பாதியாய்க் குறைந்து விட்டது. அவன் கண் முன்னேயே அந்த சந்தை தனது இறுதி மூச்சை விட்டுக்
கொண்டிருக்கிறது. வேலை குறைய குறைய ஒவ்வொருவராய் குடும்பத்தோடு திருப்பூருக்கு கூலிகளாய்ப் போய் விட்டனர். துரைக்கு என்னவோ இந்த சந்தையை விட்டுப் போக மனமே இல்லை. தனது தந்தையே மரணப்படுக்கையில் இருப்பது போலத் தோன்றியது அவனுக்கு. எல்லாரும் போனாலும் கடைசி வரைக்கும் தனியாளாகவாவது இங்கே தான் இருக்க வேண்டும் என்று வைராக்கியமாய் நினைத்துக் கொண்டான். அதைத் தன் கடமையாகவே
கருதினான் அவன்.
அவனுக்கும் அந்த சந்தைக்குமான உறவு உணர்வுப்பூர்வமாய் இருந்தது.. பண்டிகைக்கால இயலாமைகளால் சந்தையை வெறுக்க வேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சினான்.. ஒருகணம் அவனுக்குள் கொண்டாட்டங்கள் மேலேயே வெறுப்பு மேலிட்டது
“அடச்சே இந்தப் நோம்பி எளவு வந்தாலே பெரிய தொல்லையாப் போச்சு. உங்கத்திங்கவே கூலியெல்லாம் சரியாப்போகுது.. இதில பட்டாசு பலகாரம் துணிமனி.. நாய் பொழப்புடா சாமி…” தன்னை மறந்து வார்த்தைகள் வெளியே வந்துவிட்டது.
வேறேதோ சிந்தனையிலிருந்த பெரிசு திரும்பிப் பார்த்தார்; ஏதும் பேசாமல் அடுத்த பீடியை உருவிக் கொண்டார்.
“ஏய் சீக்கிரமா வாங்கடா…” செட்டியார் மகன் ரோட்டின் எதிர்ப்புறத்திலிருந்து தனது புது அதிகாரத்தை சோதித்துப் பார்த்தான். தூரத்தில் மேட்டுப்பளைய தக்காளி டெம்போ வளைவில் சிரமமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.. நீண்டதொரு பெருமூச்சுடன் துரை எழுந்தான்.
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
“வெங்காய மூட்ட எறநூத்திப் பத்துங்க.. அப்பால தக்காளிக் கூட ஒரு எளுபதுங்க மொத்தமா எறநூத்தியெம்பதுங்க” இரவு மணி பத்தாகிவிட்டது.. செட்டியாரி மண்டி தான் கடைசியாக இயங்கிக் கொண்டிருந்தது.
“இந்தா இதில முன்னூறு இருக்கு. இருவதுருவா தீவாளிக்காசு. பப்பாதியாப் பிரிச்சுக்கங்க.. கோட்டரப் போட்டுட்டு மல்லாந்துடாம வூட்டுக்குப் போற வளியாப் பாரு…. என்னா..?” செட்டி மகன் தனது முதலாளி முறுக்கைக் காட்டினான்.
துரை உள்ளே குமைந்தான் ‘இந்த லூசுப்பய மவங் கிட்ட எவம் பேசுவான்’ என்று நினைத்துக் கொண்டு “சரிங்க” என்றவாறே திரும்பினான். லேசாகத் தூரல் போட்டது.. மண்டி சந்தில் சாய்த்து நிறுத்தியிருந்த சைக்கிளை வெளியே எடுத்து உருட்டிக் கொண்டே ரோட்டைக் கடந்து ராயப்பன் டீக்கடை நோக்கிப்
போனான். பெரிசு டீக்கடைத் திண்ணையில் சாய்ந்து கொண்டு கடைசியாய் மிஞ்சிய இரண்டு பீடியில் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.
“தா.. பெரிசு.. ஒன்னோட பாதி நூத்தம்பது ரூவா” என்று பணத்தை இடது கையால் நீட்டிக் கொண்டே வலது கையால் கடைசி பீடியை பெரிசின்
கையிலிருந்து உருவினான் துரை.
“அதையும் நீயே வச்சுக்க.. அப்பால திருப்பித்தா போதும்.. அப்படியே இந்தா இதில ஒரு முன்னூறு இருக்கு இதையும் வச்சிக்க” என்றபடியே
கசங்கிய ரூபாய்த் தாள்களை துரையின் கையில் திணித்தார் பெரிசு. வாங்கத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் துரை..
“அட என்னப்பா அப்புடிப்பாக்குறே? எனுக்குத் தெரியாதா நீயேன் ஒரு பத்திருபது நாளா இஞ்சியத்தின்னவன் மாறி அலைஞ்சிட்டிருக்கேன்னு…
இருக்கவனுக்கு கொடுத்துதவ ஆயிரம் பேர் இருக்கான்.. நமக்குன்னு வேற யார் இருக்கா? ஒனக்காவது குடும்பம் இருக்கு; எனக்காரு இருக்கா? நாளைக்கு ஒனக்கு நோம்பி.. எனக்கு நாளைக்கு ஒரு நா லீவு.. காசிருந்தா நாளைக்கு ஒரு ஆப்ப உள்ள உட்ருப்பேன்.. பரவால்ல தொர..
கெளம்பரக்கு மின்னாடி பாய் கடைல போய் முட்டிக்குலுங்கர என்னை ஒரு புட்டி வாங்கிக் கொடுத்துட்டுப் போ…” என்றபடியே கரைந்து போயிருந்த பீடியைத் தூர எரிந்தார் பெரிசு.
துரைக்கு திடீரென்று உற்சாகம் முட்டிக் கொண்டு கிளம்பியது. அப்பாடா…வென்றிருந்தது அவனுக்கு..
“சரி சரி பேந்தப் பேந்தப் முழிச்சிட்டு நிக்க வேணாம்.. கெளம்பு. மணி இப்பயே பத்தாச்சு. மூலனூருக்குப் போய்ச்சேர இன்னும் ஒருமணி நேரமாகும் ஒனக்கு. அதுக்கு மின்ன பொடிசுகளுக்கு துணிமனிய வேறெ வாங்கனும்.. கெளம்பு கெளம்பு”
மழை வலுத்திருந்தது.. சாரலாய் ஆரம்பித்தது இப்போது வானமே பொத்துக் கொண்டது போல் ஊற்றியது. துரை எல்லா ரூபாய்த் தாள்களையும் இரண்டு பாலித்தின் கவருக்குள் போட்டு சுருட்டி கால்சட்டைப் பாக்கெட்டில் சொருகி வைத்தான்.. என்னென்ன வாங்க வேண்டும் என்பதை மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே கடைவீதிப் பக்கமாய் சைக்கிளை மிதித்தான். மழைத்தண்ணீர் ரோட்டில் மூட்டளவையும் தாண்டி ஆறாக ஓடியது.
ராவுத்தர் பாய் புதிதாக ஒரு தார்பாய் பந்தல் போட்டு பட்டாசுக்கடை ஒன்றைத் திறந்திருந்தார். அதன் எதிரே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு விட்டு,
“பாய்.. நமக்கு ஒரு ரெண்டு கட்டு கம்பி மத்தாப்பு, அஞ்சு கட்டு கேப் வெடி, ரெண்டு துப்பாக்கி, மூனு கட்டு பிஜிலி, ரெண்டு கட்டு பெரிய லச்சுமி வெடி, அணு குண்டு ரெண்டு பாக்கெட்டு, சர வெடி நாலு கட்டு, பூவாளி ரெண்டு பாக்கெட்டு, ராக்கெட்டு ரெண்டு பாக்கெட்டு கட்டுங்க.. நான் போயி இனிப்பும் பசங்கலுக்கு துணியும் எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறே சாலையின் எதிர்ப்புறத்தில் ப்ளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு புதிதாய் முளைத்திருந்த துணிக்கடைகளைப் பார்த்து நடையை எட்டிப் போட்டான் துரை.
ராவுத்தர் கடையைக்கு நாலுகடை தள்ளி புதிதாய் மின்னும் பெயர்ப்பலகையோடு ஒரு புதிய சூப்பர் மார்க்கெட் கடை திறந்திருந்தார்கள்.. தெரு முழுவதும்
அடைத்துக் கொண்டு அதன் வாடிக்கையாளர்களின் கார்கள் நின்றிருந்தது.. பாதிக் கார்களில் ஆட்கள் இருந்தார்கள்.. கதவைத் திறந்தால் உள்ளே பாய்ந்து வரத் தயாராய்
மழைத்தண்ணீர் காத்துக் கொண்டிருக்க, உள்ளே அடைத்த கதவுகளுக்குள் புழுக்கம் தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.. துரைக்கு அவர்களின் முகவோட்டைத்தைக் காணவே வேடிக்கையாய் இருந்தது. அந்தக் கடைக்கு எதிர்ச்சாரியில் தான் தார்ப்பாலின் துணிக்கடைகள் இருந்தது.. போலீசுக்காரன் ஒருத்தன் “அனுமதியில்லாமல்” கடை போட்டதற்காக ரோட்டோ ரக் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தான்.. ராவுத்தர் ஏற்கனவே அந்தப் போலீசுக் காரனுக்கான மாமூலை பட்டாசாகக் கட்டி வைத்து விட்டார்.
மீண்டும் துரைக்கு சில ஆண்டுகளின் முந்தைய நினைவு தட்டியது.. அப்போதெல்லாம் இந்தக் கடைவீதிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்.. இப்போதோ அந்த இடத்தைக் கார்கள் தான் அடைத்திருக்கிறது.. ‘அந்த மனிதர்களெல்லாம் எங்கே தான் போயிட்டாங்க…?’ துரையின் மனம் விடை தெரியாத அந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்தது. எதிர்ச்சாரியில் இருந்த ரோட்டோ ரத் துணிக்கடைகளிலும் பெரிதாகக் கூட்டமில்லை. நகை நட்டுகளை அடமானம் வைத்து வாங்கிய சரக்கை எப்படித் தள்ளுவது என்கிற கவலை அவர்கள் முகங்களில் தெரித்தது…
எல்லாம் வாங்கி விட்டுக் கிளம்பும் போது மணி பதினொன்று முப்பது ஆகிவிட்டது. மூலனூர் போய்ச் சேரும் போது பண்ணிரண்டு தாண்டிவிட்டது. இன்னும் மழை ஊற்றிக் கொண்டிருந்தது… தொப்பலாக நனைந்திருந்தான் துரை. வீட்டில் இன்னும் அறுபது வாட்ஸ் பல்பு சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் வெடிக்கும் வெடியோசை பம்மலாய்க் கேட்டது.சின்னவன் இன்னும் தூங்கவில்லை போலும்.. தன் அம்மாவிடம், அப்பா எப்போ வருவார் என்றூ விசாரித்துக் கொண்டிருந்தது துரைக்குக் கேட்டது. வீட்டுக்கு முன்னிருந்த மட்டைப் பந்தலுக்குக் கீழே சைக்கிளை சார்த்தி நிறுத்திவிட்டு கேரியரில் இருந்த பெரிய பட்டாசு பார்சலையும், முன்னே ஹேண்டிலில் ஊசலாடிக் கொண்டிருந்த துணிப் பையையும் அவிழ்த்து எடுத்தான். பனியனுக்குள் சொருகி வைத்திருந்த இனிப்புப் பார்சலை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டான்..
“கமலா.. கதவத் தொற…” கண்களின் எரிச்சலையும் தாண்டி சின்னவனின் முகம் போகும் போக்கைக் காண துரைக்கு ஆவலாய் இருந்தது…
“அப்பாடா.. ஒங்க வாரிசு போட்டு கொடஞ்சி எடுத்திட்டான்.. அடேய்ய்ய்.. ஒங்கப்பன் வந்தாச்சி பாரு” என்று கதவைத் திறந்து கொண்டே உள்ளே
திரும்பி குரல் கொடுத்தாள் கமலம்.
“ஹேய்ய்ய்….” என்று கத்திக் கொண்டே வந்த சின்னவன் பார்சல்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு நேரே பாய்க்கு ஓடினான். சப்தம் கேட்டு பெரியவனும் விழித்துக் கொண்டான்.
“என்ன செய்திருக்கே” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தான் துரை.. பொடியன்கள் இருவருமாகச் சேர்ந்து கொண்டு பார்சல்கள் ஒவ்வொன்றால் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“காலைல ஆக்குனது அப்பிடியே இருக்கு. ரசம் வச்சு கருவாடு வருத்திருக்கேன்” என்றபடியே அவளும் திரும்பிப் பார்த்தாள். சின்னவன் முக்கியமாய் பட்டாசுக் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தான்.
“அடேய்… அதையெல்லாம் ஏண்டா இப்பயே பிரிக்கிறே.. காலைல பாத்துக்கலாம் போய் படுங்கடா” என்று கத்தினாள்..
“வுடு கமலா.. வருசத்தில ஒரு நாளு…” என்ற துரையின் மனதில் பெரிசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய மூன்னூற்றைம்பது நினைவுக்கு வந்தது.
“எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான்; இவனுக ரெண்டு பேரும் கெட்டுப் போறானுக” கமலா அதே அறையில் இன்னொரு பக்கத்தில்
படுதா கட்டிப் பிரித்திருந்த சமயலறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்..
“வுடுறீ… சின்னப் பசங்க.. அப்புடித்தான் இருப்பாங்க” பனியனைக் கழட்டி அறையின் குறுக்கே ஓடிய கொடியில் போட்டான் துரை. அதிலேயே தொங்கிய துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்திருந்த துரை சின்னவனின் குதூகலத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சின்னவன் உலகத்தையே மறந்து சர வெடிகளையெல்லாம் தனித்தனியே பிரிப்பதில் மூழ்கி இருந்தான்.
“அதையேண்டா பிரிக்கிறே…?”
“அப்பத்தான்பா ரொம்ப நேரம் வெடிக்க முடியும்..” சின்னவன் திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.
“காலைல பார்த்துக்கலாம் வா படு.. கமலா லைட்ட ஆப் பண்ணிடு”
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o
“யப்போய்.. எழுந்திரிச்சி வாப்பா.. பாலா எனக்குத் தராம அவனே வெடிக்கிறான்” சின்னவனின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது.. முழங்கையால் முட்டுக் கொடுத்து தட்டுத் தடுமாறி எழுந்து பார்த்தான் துரை. தலைக்கு மேலே அறுபது வாட்ஸ் பல்பை சுற்றி இரண்டு மூன்று பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது. கால்மூட்டுகளைப் பிடித்துக் கொண்டே பாயில் இருந்து எழுந்தான்.. தலைக்கு மேலே ஒரு பாறாங்கல்லையே வைத்தது போல் ஒரு பாரம் அழுத்தியது. வெளியே வந்து பார்த்தான்; இன்னும் முழுவதுமாக விடியவில்லை..
அத்தனை நேரத்திலும் “பொடு பொடு” வென்று எங்கோ தூரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. பெரியவன் கையில் பாலித்தின் பையை வைத்திருந்தான். அந்தப் பையில் முந்தைய இரவு வெடிச் சரத்தில் இருந்து உதிர்த்த பட்டாசுகளை நிரப்பியிருந்தான்..
“யேய்.. தம்பிக்கும் கொடேண்டா…” வாயில் லேசாக கசப்பாக உணர்ந்தான். ‘இதென்னடா எழவு.. காய்ச்சலோ..?’ என்று நினைத்துக் கொண்டான்.
“அப்பா.. அவன் பத்த வெச்சிட்டு பக்கத்திலேயே நிக்கிறான்.. வெடிக்கவே தெரியலெ” என்று திரும்பிப் பார்க்காமலேயே குரல் கொடுத்தான் பெரியவன்.
“ரெண்டு பேரும் மொதல்ல பல்லு வெளக்கிக் குளிச்சிட்டு வாங்க; உங்கம்மா எங்கெ போயிருக்கா?” உள்ளே திரும்பிப் பார்த்தான்; கமலத்தைக் காணவில்லை..
“இன்னிக்குத் தண்ணி வர்ற நாளு..” இதற்கும் பெரியவன் திரும்பிப் பார்க்கவில்லை..
“சண்ட போடாம வெடிங்க” என்று விட்டு பந்தலடியில் சார்த்தியிருந்த சைக்கிள் கேரியரில் குடம் கட்டும் தாம்புக் கயிரை சொருகிக் கொண்டு
பெருமாள் கோயிலை நோக்கி அழுத்த ஆரம்பித்தான்.
கோயில் கருவறைக்கு நேர் எதிரே தான் வீதி பைப் உள்ளது. அந்த அதிகாலை மூன்று மணிக்கு பைப்பில் அவ்வளவாக கூட்டமில்லை. கமலம் வீட்டிலிருந்த ஐந்து ப்ளாஸ்டிக் குடங்களுடனும் அங்கே நின்றிருந்தாள்.. அவர்கள் தெருவில் இருந்த வேறு சில பெண்களும் அவர்கள் கனவன்மார்களுமாக அங்கே ஒரு சின்னக் கூட்டம் இருந்தது.
“என்னெ எழுப்ப வேண்டியது தானே?’ என்றபடியே சைக்கிளை ஸ்டாண்டு போட்டான் துரை..
“மேலெல்லாம் கொதிச்சிட்டிருந்தது.. அனத்திட்டு இருந்தீங்க. அதான் ரெவ்வெண்டா நானே கொண்டாந்திரலாம்னு வந்தேன்..” அவளும் இன்னும் குளித்திருக்கவில்லை..
“ம்ம்ம்ம் நல்லா தலைய வலிக்குது. ஒரே பாரமா இருக்கு”
பெருமாள் கோயிலில் இருந்து மணிச்சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர் – அந்த காலை நேரத்திலேயே கீழ்தெரு உஷா மாமியும் அவரது மருமகளும் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டுக் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பெருமாளும் அவர் சம்சாரமும்
அணிந்திருந்த பழைய துணிமனிகளை குருக்கள் எடுத்து வந்து பந்தல் மேல் எரிந்து விட்டு புதிதாய் பட்டுப் பீதாம்பரமும், பச்சைப் பட்டையும்
உஷா மாமியிடம் இருந்து வாங்கிக் கொண்டு உள்ளே கருவறைக்குள்ளே நுழைந்தார்..
“யோவ் உனுக்கு ஏன்யா இந்த வருசம் துணியெடுக்கல” அவளுக்கு எடுக்காததை அவள் கேட்கவில்லை
“இதுக்கே கடன்; நமக்கு பொங்கலுக்குப் பாத்துக்கலாம்” அவளுக்கும் சேர்த்தே பதில் சொன்னான் துரை
“நாம என்ன பெருமாளா.. ஊரான் எடுத்துக்குடுக்க” பச்சைப் பட்டின் பளபளப்பு இன்னும் அவள் கண்ணுக்குள்ளேயே நின்றது.
தாம்புக்கயிரில் கட்டி இரண்டு குடங்களை பக்கங்களுக்கு ஒன்றாய் தொங்கவிட்ட துரை, மூன்றாவதை கேரியரின் மேல் வைத்தான். கமலம் இடுப்பில் ஒன்றை ஏற்றிக் கொண்டு,
“விஜயாக்கா, இதக் கொஞ்சம் தலைக்கு ஏத்திக் கொடேன்…” என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்..
அங்கே சின்னவனும் பெரியவனுமாக எதை யார் வெடிப்பது என்கிற சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். துரை பட்டாசுச் சண்டைகளில் கலந்து கொள்ளவில்லை இந்த சின்னச் சின்ன சண்டைகளாவது அவர்களின் உலகத்தை சுவாரசியமாக வைத்திருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். கமலம் பாய்கடையில் இருந்து அனாசின் வாங்கி வந்து கொடுத்தாள். உப்புமாவைத் தின்று விட்டு மாத்திரை போட்டுப் படுத்தவன் மதியம் தான் எழுந்தான். சின்னவனுக்கு மதியத்திற்குப் பின் முகம் சுருங்கி விட்டது; வெடிகளெல்லாம் அனேகமாக தீர்ந்து விட்டது. இன்னும் புஸ்வானமும் சங்குச்சக்கரமும் தான் மீதமிருந்தது..
காலையில் போலில்லாமல் மதிய நேரத்தில் பட்டாசுச் சத்தங்கள் குறைந்து விட்டது. ‘எல்லோரும் டீ.வி முன் ஒக்காந்துட்டானுவலா இல்லை நம்ம கேசு தானா’ என்று நினைத்துக் கொண்டான் துரை. அவ்வப்போது எங்கோ தூரத்தில் வெடிக்கும் பட்டாசுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் சின்னவன் ஏக்கமாய் துரையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
“யப்பா.. நாளிக்கி நம்ப வீட்டு மின்னே தானே பட்டாசுக் காயிதம் நெறயக் கெடக்கும்?..” சந்தேகமும் ஏக்கமுமாகக் கேட்டான் சின்னவன்.. துரை பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான்,
“சொல்லுப்பா.. மத்தப் பயங்கெல்லாம் என்னெக் கிண்டல் பண்ணுவாங்கப்பா..”
துரைக்கு உடல் வலியைத் தாண்டி உள்ளே வலித்தது.. சின்னவன் இன்னும் வீடு என்னும் கருவறைக்குள் அமைதியாக உறங்கும் குழந்தையாகவே இருந்தான். அவன் சமுதாயத்துக்குள் நுழையும் பிரசவகாலம் இன்னும் வரவில்லை. அவனது உலகம் அவனோடு இன்னும் பெரிதாக முரண்படவில்லை.. கூழாங்கற்களை அவன் இன்னும் அரிய வைரங்களைப் போல சேகரித்து வைக்கும் நாட்களில் தான் இருந்தான்.”பெரியவர்களின்” உலகத்தோடான அவன் முதல் சந்திப்பை இவன் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறானோ.. இன்னும் எத்துனை நாட்களுக்கு இவனை இப்படியே அடைகாக்க முடிமோ என்றெல்லாம் நினைக்கையில் துரைக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தான் ஒரு குறைப்பிரசவக் குழந்தையாகவே சமுதாயத்துக்குள் திணிக்கப்பட்டதை எண்ணிப்பார்த்தான்; அதுவே இன்று தன்னை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டுச் சூழலும் வீட்டைச் சுற்றி இருக்கும் சூழலும் இன்னும் சின்னவனை மாசுபடுத்தியிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டும் துரை அவனுக்கு ஒரு பெரிய அதிசயமாகவும் ஒரு நாயகன் போலவும் தோன்றினான். ஆனால் பெரியவனுக்கோ கொஞ்சம் போல புரிய ஆரம்பித்து விட்டது; அவன் சமுதாயத்துக்குள் பிரசவிக்கப்பட்டு விட்டான். “காம்ப்ளான் பையன்களை” விளையாட்டு மைதானங்களில் பார்த்திருக்கிறான். தான் இன்னும் பழையகஞ்சி பையனாகவே இருப்பது ஏன் என்கிற கேள்வி அவனுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. புதுமணம் மாறாத புத்தகங்களை சுமந்து வரும் பையன்களிடையே அரைவிலைக்கு வாங்கிய பழைய புத்தகங்களையே தான் இன்னும் சுமந்து செல்லும் நிலைமை ஏன் என்பது புரியத்துவங்கிய போது அவன் அமைதியாகிவிட்டான். அவனது அந்த உலகம் அவனை ஊமையாக்கி விட்டது. எப்போதும் ஏதோவொன்றைப் பேசிக்கொண்டிருக்கும் தம்பியை அவன் இப்போதெல்லாம் கரிசனமாகப் பார்க்கிறான். அவனுக்குத் தெரியும் சீக்கிரம் சின்னவனும் ஊமையாக்கப்படுவான் என்று.
மாலை இருள் கவிந்ததும் சின்னவன் முகத்தில் மீண்டும் கொஞ்சம் ஒளி வந்தது. கொஞ்சம் நேரம் மிஞ்சிய பட்டாசுகளில் சிலவற்றை மட்டும் கொளுத்தியவன் பாதி வெடிகளைஒரு கவரில் போட்டுக் கட்டி அட்டாலியில் போட்டான்..
“அதையேண்டா மிச்சம் வைக்கிறே.. கொளுத்தித் தீர்க்க வேண்டியது தானே?” கமலா பஜ்ஜிக்காக வாழைக்காயை நீள்வாக்கில் அரிந்து கொண்டே கேட்டாள்.
“அதெல்லாம் காத்தியை தீபத்தன்னிக்கு வெடிக்கப் போறன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொன்னான்.. ‘அன்றைக்கு நீயென்ன புதிதாய் வாங்கித் தரவா போகிறாய்?’ என்ற குத்தல் கேள்வி அந்த பதிலில் ஒளிந்திருந்தது..
“ம்ம்ம் இவனுகளுக்கு கஷ்ட்டந்தெரியாம வளக்குறது எங்கே கொண்டு போய் விடுமோ” என்றாள் துரையைப் பார்த்துக் கொண்டே.. அதனை அவன் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“எத்தினிக் காசு… எல்லாம் ஒரே ஒரு நா கூத்துக்குக் கரியாப் போச்சி..ஆமா இத்தினியும் வாங்கக் காசு ஏதுய்யா??”
“பெரிசு கிட்டே கைமாத்து வாங்கினேன்” எப்படித் திருப்பிக் கொடுப்பது என்கிற கேள்வி முட்டிக்கொண்டு கிளம்பியது. இன்னும் இதற்கு எத்தனை நாட்கள் மதியவேளையை போண்டாவோடு சமாளிப்பது என்று கணக்குப் போடத்துவங்கினான்.
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டதால் பொடியன்கள் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே தூங்கப் போய் விட்டனர். துரைக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும்
இவன்களிருவரும் எழுந்திருக்கும் முன்பே சந்தைக்குக் கிளம்புபவன், அவர்கள் உறங்கிய பின் தான் வீடு சேர்வான். வருடத்திற்கு ஓரிரு நாட்களில் தான் தனது மகன்களை அவனால் பகல் வெளிச்சத்தில் பார்க்க பேச முடியும்.. ஞாயிறு சனியென்று வார ஓய்வு நாளே இல்லாத ஓட்டம் அது.. வாழ்க்கை துரையை துரத்திய துரத்தலில் வயிற்றை சமாளித்த நேரம் போக மகன்களுடன் கொஞ்சி விளையாடவெல்லாம் நேரத்தை அவனுக்கு மிச்சம் வைக்கவில்லை. துரையைப் பொருத்தளவில் ஓய்வு என்பது உறக்கம் தான்; உறக்கம் என்பது மயக்கம் தான். ஒவ்வொரு நாள் படுக்கையில் விழும்போதும் மறுநாள் விடியும் என்பது மட்டும் தான் அவனுக்கு அச்சமாக இருந்தது.
திடீரென ஏதோ பேச்சு சப்தம் சப்தம் கேட்டு துரை திரும்பிப் பார்த்தான், சின்னவன் ஏதோ உளரிக் கொண்டிருப்பது கேட்டது… “நாங்க தான் நெறய வெடிச்சம்….” துரைக்கு திடீர் என்று தான்
அது உறைத்தது. சட்டென்று எழுந்து வீட்டு முற்றத்திற்குப் போய் பார்த்தான்.. அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்ததில் இங்கே கொஞ்சம் பட்டாசுக் காகிதங்கள் குறைவாக இருப்பதாகப் பட்டது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.. அப்படியே தெருக்கோடி வரை ஒரு நடை சென்று ஆங்காங்கே காற்றில் குமித்துக் கிடக்கும் சிதறிய காகிதங்களை சேகரித்து வீட்டு முன் பரப்பி வைத்தான். வாசல்படிக்கு மீண்டும்
வந்து அங்கேயிருந்து ஒரு தரம் சுற்றிப் பார்த்தான், திருப்தியாக இருந்தது.. ‘ராத்திரி காத்து அடிச்சித் தொலைக்கக் கூடாதே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..
காலையில் மீண்டும் தனது ஓட்டத்தைத் துவங்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே பாயில் சரிந்தவன் கண்களை மூடினான்..
அதுவரையில் இருந்த இருள் மறைந்தது..
- Kaargi
தீப-இருள்!
எல்லோர் வீட்டிலும் ஒளியேற்றும்
சிவகாசித் தீக்குச்சிகள்
சிவகாசிச் சிறுவனின் வீட்டிலோ
இருளை ஏற்றுகிறது
உறக்கமறியாத கரங்கள் சுற்றிய
முறுக்கு தொண்டையில்
முள்ளாய் இறங்குகிறது.
எங்கள் சிவகாசிப் பொடியன்
சுருட்டிய பட்டாசின் சிதறும்
ஒலியில் அவன் வாழ்வின்
சிதறல் ஒலி கரைந்தே போனது..
போராட்டத்தின் மெல்லிய ஒலியைக்
கேட்கும் வலிமையை காதுகள் இழந்து விட்டது -
பட்டாசின் வலுத்த சப்தங்கள் அதனை
உறுதிப்படுத்தி ஒலிக்கிறது!
இரவு பகலாய் தையல் இயந்திரத்தின்
பெடலை மிதித்த எங்கள் தோழனின்
கழண்டு போன மூட்டுகளுக்கு
எண்ணைக் குளியல் வேண்டாம்
ஒரு நாள் ஓய்வும்
குவாட்டர் ஓல்டு மங்கும் போதும்
புதுத் துணியின் நாற்றத்தில் மறைகிறது
பருத்தியறுத்தவனின் வியர்வை மணம்
கொன்று கெடுத்தான் கிருஷ்ணன்-
மறுநாள் ஓவர் டைம் செய்கிறார்கள்
துப்புரவு தொழிலாளிகள்
-kaargi
Do we have a choice?
கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.
இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?
உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!
அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.
வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.
நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.
இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.
இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? -
ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.
தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.
உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!
-
அண்மை
- உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!
- மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!
- நான் கடவுள் விமர்சனம்
- இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
- அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
- பார்ப்பனியத்தின் இருப்பு!!
- ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!
- சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!
- முதலாளித்துவம் நடத்தும் பாடம்
- அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
- ஒரு தேவதையின் மரணம்…!
- மன்மோகன் சிங் என்னும் பொய்யர்
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- செப்டம்பர் 2009 (1)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (2)
- டிசம்பர் 2008 (1)
- நவம்பர் 2008 (2)
- அக்டோபர் 2008 (3)
- செப்டம்பர் 2008 (2)
- ஆகஸ்ட் 2008 (1)
- மே 2008 (5)
- டிசம்பர் 2007 (3)
- நவம்பர் 2007 (2)
- அக்டோபர் 2007 (8)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS