கார்க்கியின் பார்வையில்

அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..

”ச்சை.. சனியனுங்க.. இப்பத்தான் கரெண்ட நிப்பாட்டனுமா நிம்மதியா சாப்புடக்கூட உடமாட்றானுக”

”இருய்யா மெளுகு வத்தி கொளுத்தறேன்”

”பாத்துப்போடி… வழியிலே சேர் கெடக்குது”

”ஆமா.. இது பெரிய்ய அரமனை.. இருந்தாலும் தடவிக்கிட்டு தானே போவனும்?”

”கெட்ட கேட்டுக்கு அரமன சொகுசு கேக்குது பாரு”

“உன்ர வாய்க்கு ஒன்னும் கொரயில்லைய்யா.. இந்தா சீக்கிரமா தின்னு முடி. மெளுகு வத்தி வெளிச்சத்துக்கு பூச்சி வரும்”

”அடிப்போடி.. இந்த ரேசன் அரிசியத் திங்கரதும் பூச்சியத் திங்கரதும் ஒன்னுதான்”

”ஒனக்கெல்லாம் ரூவாய்க்கு கிலோ அரிசி போட்டா அல்லைல கொளுப்பு கட்டுது”

”குடுக்கும் போது கிலோ ரூவாய்க்கு குடுக்கறான்.. அடுத்த நா காலைல காக்கிலோவுக்கு ரெண்டு ரூவா கேக்கறான்.. போடி நீயும் ரூவா அரிசியும்”

”நீ உங்கரக்கு ஆதரிச்சா பேள்ரதுக்கு வழியென்னங்கர”

” உங்கச் சோறு போட்டவன் இருக்கவனெல்லா பேள வழி இருக்கவனான்னு பாத்தா போடறான்?”

“செரி செரி சோத்தத் தின்னு முடி.. நரகலப் பத்தி பேசற நேரத்தப் பாரு”

”மணி ஒம்போதாகுது.. பய்யனெங்கடி?”

”ஆறாம்மவங்கிட்டெ புக்கு வாங்கப் போறேன்னு ஆறு மணிக்கிப் போனவன்… சேக்காளிகளோட சேந்து எங்கியாவது நாயமடிச்சிட்டிருப்பான்”

”சின்னப் பாப்பாளுக்கிறுக்கர பொறுப்பு இந்த நாயிக்கில்லே பாரு.. இஸ்கூல்லேர்ந்து வந்தமா படிச்சமா பொட்டாடம் தூங்குனமான்னு இல்லாம தெருப்பொறுக்கிட்டு அலையறான்.. பண்னெண்டாவது படிக்கறமே மார்க்கில்லேன்னா அப்பன மாறி நாமளும் கூலிக்குத் தான் போகனுமேன்னு பயமாச்சுமிருக்கா அவனுக்கு”

“அட சும்மாருய்யா.. மார்க்கெடுத்தா மட்டும் நீயென்ன டாக்டருக்கா படிக்க வச்சிரப்போறே?”

“நீ தாண்டி அவன செல்லங்கொஞ்சிக் கெடுக்கர”

”வக்கில்லாதவனுக்கு வாயி மட்டும் ஏளு மயிலு நீளமாம்மா..”

”இப்புடிப் பேசியே அவன் வீணளிஞ்சிப் போயிட்டாண்டி.. இந்த வருசம் அவனுக்கு பீசு கட்ட எத்தினி செரமப் பட்டோம்? ஏதோ ராயப்பன் தெரிஞ்சவனாகப் போயி ரண்டு வட்டிக்கி கொடுத்தொதவினான்,, இனி அடுத்தாப்புல காலேஜில சேக்கோனும்னா எவங்கிட்டேடி போய் நிக்கறதுன்னு நானே கவலயில இருக்கேன்”

”சரி உடுய்யா.. அவஞ்சோட்டுப் பசங்களப் பாத்தியா.. ஒவ்வொன்னும் கலர் கலரா உடுத்துக்கிட்டு பட்டாம்பூச்சி மாறி சுத்திக்கிட்டு இருக்குதுக.. நமக்கிருக்க வக்குக்கு சாயம் போன சட்டையத்தான் வாங்கிக் குடுக்க முடியுது.. அவனுக்கும் ஆசயிருக்காதா? கிரிக்கெட்டாடப் போகோனுமின்னாலும் சொந்தமா மட்ட வாங்கிட்டு வரச் சொல்றாங்களாமா.. ஏதோ சேக்காளிகளோட பேசறது அவனுக்கு சந்தோசம். அதையுமா நாம கெடுக்கோனும்?”

“இப்புடியே உட்டா அவனும் நாளைக்கு என்னிய மாறி கம்பி கட்டத்தான் லாயக்காவாண்டி. இந்த நாயிப் பொழப்பு நம்ம தலக்கட்டோடயே போகட்டும். இன்னிக்கு நா கண்டிசனா பேசறது அவனுக்கு கஸ்டமாத்தா இருக்கும்.. ஆனா நாளைக்கு அவங்குடும்பம் கடைல அரிசி வாங்கிச் சாப்புடும் போது நெனச்சிப் பாத்துக்குவான்.. அவனாவது அவம்பையனுக்கு நல்ல துணி வாங்கிக் குடுக்கட்டுமே”

“எல்லாஞ்செரிதான்யா.. இதெல்லா அவனுக்குப் புரியுமா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிப் போடற.. அவனும் மூஞ்சியத் தூக்கிட்டு உங்காமத் திங்காம சுருண்டு படுத்துக்கறான்.. சின்னப் பய்யன்யா.. வளர வேண்டிய வயசு. மத்தவிங்க ஊட்டு நெலமையும் நம்மூட்டு நெலமையும் புரியவா போகுது? தீவாளி வருது.. எல்லாரும் இப்பவே புதுசு புதுசா எடுத்துப் போட்டுட்டு அலையுதுக.. நாம ஒரு வருசமாச்சும் நோம்பியன்னிக்கு புதுசு வாங்கிக் குடுத்துருக்கமா?”

“இதெல்லா அவங்காது படப் பேசிப்போடாத.. இதெல்லா கேட்டா அவனுக்கு இன்னுங்கொஞ்சம் தொக்காயிடும்.. உப்பக் கஸ்டப்பட்டா பின்னாடிக்கி நல்ல நெலமைக்கி வந்துருவாண்டி. ”

”ஆசையிருக்குது ஆன மேல போக.. வகையிருக்குது வக்கத்த நெலைலன்னு சொன்னா மாறி இருக்குது நீ பேசறது..”

” நீ வேனாப் பாருடி.. எந்தலைய அடமானமா வச்சாவது எம்பய்யன இஞ்சினீராக்கத்தாம் போறேன்”

“இஞ்சினீராமா இன்ஞ்னீரு.. இஞ்சி விக்க அனுப்புனா இப்புடி மஞ்சச் சோத்தத் திங்கரக்கு பதிலா வெள்ளச்சோறாச்சும் திங்கலாம்..அவனும் ஆசப்பட்டத தின்னு விருப்பப்பட்டத உடுத்திக்குவான்”

“உன்ர கரி நாக்க வச்சிட்டு சும்மா இருடி..”

“என்ர கரி நாக்கு கெடக்கட்டும் கெடயில.. நீ மொதல்ல தின்னு முடிக்கர வழியப் பாரு”

அக்டோபர் 1, 2008 பதிந்தவர் kaargipages | culture | | மறுமொழிகள் ஏதும் இல்லை

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது - கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல - என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் - இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் “

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்டம்பர் 15, 2008 பதிந்தவர் kaargipages | culture, short story | , | 15 மறுமொழிகள்

சில பயணங்கள் சில அனுபங்கள்..

போன மாதம் பணி காரணமாக நானும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த எனது ஜூனியரும் நாகபுரி செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு அரசு நிறுவனம். அங்கே பாதுகாப்பான
ஒரு அறையில் மிகவும் பாதுகாப்பாக பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு இயந்திரத்தைப் பார்த்தோம். அது மிகக் கவனமாய் உறை போட்டு மூடப்பட்டு இருந்தது. பார்த்த
உடனே தெரிந்து விட்டது அதன் உறைகளைக் கழற்றியே பல வருடங்கள் இருக்குமென்று. நாங்கள் பார்க்கப் போயிருந்த அதிகாரியை அது பற்றிக் கேட்டோ ம்.

அது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு இயந்திரமென்றும் அதன் விலை என்பது கோடியென்றும் இதே போன்ற இயந்திரம் மற்ற ஊர்களில் இருக்கும்
அதே நிறுவனத்தின் மற்றைய கிளைகளிலும் இருக்கிறதென்றும் பெருமையாகக் குறிப்பிட்டார். நாங்கள் அது ஏன் உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது என்று கேட்டோ ம். அதற்கு அவர்
அதை எதற்கு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று அங்கே உள்ள ஒருவருக்கும் தெரியாது என்றும் அது வாங்கப்பட்ட
கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாகவே ஒரு முறை கூட இயக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேலை முடிந்து சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருக்கும் போது உடன் வந்த எனது ஜூனியர் -

” என்ன அநியாயம் பாத்தீங்களா சார்.. நம்மளோட வரிப்பணமெல்லாம் எப்படி வீணாகுதுன்னு” என்றார்

“என்ன சொல்றீங்க.. புரியலையே” என்றேன்

“இல்ல.. அந்த இயந்திரத்தோட விலை என்பது கோடின்னா.. இவங்களோட பத்துக்கும் மேற்பட்ட கிளைகள்ல இப்படித்தானே சும்மா தூங்கிக்கிட்டு இருக்கும்?’

“ஆமா.. அதுக்கென்ன?”

“ஒரு என்னூறு கோடி ரூவா இப்படி அநியாயமா யாருக்கும் பயனில்லாம அனாமத்தா போயிடிச்சே?”

“சரி என்னா செய்யலாம்கறீங்க?”

“இல்ல சார் இந்த கவர்மெண்ட் சரியில்லைங்க”

“அப்ப எந்த கவர்மெண்ட் சரின்றீங்க? ஆபீசருங்கெல்லாம் ஒழுக்கமா என்ன?”

“எல்லாருக்கும் உள்கை இருக்குமில்லே? எல்லா நாயுங்களும் அயோக்கியனுங்க தான் சார்”

“அப்ப என்ன தான் பண்ணலாம்கறீங்க”

“இவனுக பூரா பேரையும் தொரத்தி வுட்டுப்பிட்டு.. நம்ம காசு நமக்கே பயன்படறா மாதிரி ஒரு கவர்மெண்டு உருவாகனும்க.. டோ ட்டலா எல்லாத்தையும் மாத்தனும் சார்”

“எல்லாம் சரிதான் யார் செய்யப்போறா? நீங்க அதுக்கெல்லாம் வேலை செய்யத் தயாரா?”

“………..”

சென்னை தான் வந்து சேர்ந்தது.. பதில் வரவில்லை

___________________________________________________________________________________________________

சில வாரங்களுக்கு முன் நன்பனுக்கு சேலத்தில் அவசர கல்யாணம் - காதல் கல்யாணம். திடீர் முடிவு. திடீர் அறிவிப்பு. எனவே திடீர் பயணம்.

சேலம் செல்ல கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் ஏறினேன். ஏறும் போது நடத்துனரிடன் சேலம் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அவர் ஏழு மணி நேரம்
ஆகுமென்றார். அப்போது மணி காலை பத்து. எப்படியும் ஐந்து மணிக்கு சேர்ந்து விடலாம் என்று ஏறி அமர்ந்து கொண்டேன்.

பேருந்து ஆரம்பத்திலிருந்தே நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது. எனக்கு அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்து வந்தார். தாம்பரம் தாண்டியதும் பேருந்து வேகம் பிடிக்கும்
என்று நாங்கள் பேசிக் கொண்டோ ம். தாம்பரமும் தாண்டியது. ஆனாலும் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. டிவிஎஸ் 50 வண்டிகள் கூட எங்கள் பேருந்தை முந்திக் கொண்டு
போகும் அளவு வேகத்தில் தான் எங்கள் பேருந்து போய்க் கொண்டிருந்தது. திண்டிவனம் தாண்டியதும் பயனிகள் பொருமையிழந்து விட்டார்கள்…

கடந்து செல்லும் நடத்துனரை ஒவ்வொருவரும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். நடத்துனர் பரிதாபமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்..

“சார் நான் என்னாங்க பன்றது.. வண்டி கண்டிசன் அவ்வளவு தான். நாப்பதுக்கு மேல போனா படுத்துக்கும்.. நானும் இது ரெண்டாவது சிப்டு பார்த்துட்டு இருக்கேன். ஆளுங்களும்
இல்ல… எப்பா எறங்கி வீட்டுக்குப் போயி படுக்கலாம்னு இருக்கு என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்றார்..

பயனிகள் ஒவ்வொருவரும் பாய்ந்து பிடுங்கி விட்டார்கள்.

“வண்டி வேகமாப் போகாதுன்னாக்க ஏன் சார் எடுக்கறீங்க? ஏறும் போதே சொல்லலாமில்லே? ஏன் சார் எங்க உயிர வாங்கறீங்க?”

“நான் என்னாங்க செய்யட்டும்? வண்டி கண்டிசன் சரியில்லே… ஸ்பேர் பார்ட்ஸ் எதுவும் ஒர்க்சாப்பில் இல்லை.. மெக்கானிக் இல்ல.. புதுசா ஆளுங்களும் எடுக்கறதில்ல..”

விழுப்புரம் வந்து சேரும் வரை ஒவ்வொருவரும் பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் கரித்துக் கொட்டிக் கொண்டு வந்தார்களே ஒழிய ஒருவர் கூட அரசு பேருந்தின் அந்த அவல
நிலைக்குக் காரணமான அரசையோ, அரசு போக்குவரத்துக் கழகத்தையோ பற்றி பேசவேயில்லை.. எல்லோரும் தங்கள் கோபத்தை நடத்துனர் மேலும் ஓட்டுனர் மேலும் கொட்டித்
தீர்த்தார்களே தவிர ஒருவர் கூட ஏன் இப்படி ஒரு அரசு நிறுவனம் நலிவுற்றுப் போனது என்பது பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

விழுப்புரம் தாண்டியதும் நடத்துனர் பொருக்கமாட்டாமல் குமுறித்தீர்த்து விட்டார்..

“யோவ் எறங்கறதுன்ன எறங்கி வேற வண்டில வாங்க சும்மா நைய்யிநைய்யின்னு கத்தாதீங்க.. என்கிட்டே உழுந்து புடுங்கறீங்களே.. போய் கவர்மெண்ட கேட்க வேண்டியது தானே?
இன்னும் நாலு வருச சர்வீஸ் இருக்கு எனக்கு.. ரெண்டு பொண்ணுக கல்யாணம் இருக்கேன்னு பல்லக் கடிச்சிட்டு வேலை பார்த்திட்டு இருக்கேன் நானே.. என்கிட்டே ஏன்யா
எகிறிட்டு இருக்கீங்க? இப்படிக் கேவலமான கண்டிசன்ல பஸ்ஸெல்லாம் மெயிண்டெய்ன் பண்ணி தனியார் திங்கறக்கு வழி விட்டிருக்கானே அதிகாரி அவனைப் போய் கேளுங்கைய்யா..
லாபத்துல தானே பஸ் கார்ப்பரேசன் போனிச்சி.. அப்புறம் ஏன் மெண்டெனன்ஸ் செய்யாம நஸ்டத்துக்கு கொண்டாந்தீங்கன்னு அங்க போய் கேளுங்கைய்யா.. வந்துட்டானுக”

ஒரு வழியாக சேலம் வந்து சேர்ந்தது… பயனிகள் எவருக்கும் சொரனை வந்ததா என்று தான் தெரியவில்லை..

___________________________________________________________________________________________________

குலதெய்வத்தை பத்தாண்டுகளாக நான் பார்க்காமல் இருப்பது தான் நான் கோயில் மாடு மாதிரி பொறுப்பில்லாமல் சுத்தக் காரணம் என்று எந்த ஜோசியக்காரனோ அப்பாவிடம்
போட்டுக் கொடுத்து விட.. போன வாரம் என்னை குடும்பமே சேர்ந்து தென் தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் குல தெய்வக் கோயிலுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

நான் பத்தாண்டுகளுக்கு முன் அவளைப் பார்த்தது.

அவள் ? இசக்கி.

அப்போதெல்லாம் அவளுக்கு கோயில் என்று எதுவும் பெரிதாக இருந்ததில்லை.. தெருவோரத்தில் ஒரு கீத்துக் கொட்டகைக்குள் தான் இருப்பாள்.. எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒரு
தாத்தா தான் பூசாரியாக இருந்தார். அந்தப் பழைய நினைவுகளோடும் அதே எதிர்பார்ப்போடும் போய்ப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. புதிதாக கட்டிடம் எழும்பியிருந்தது. ஐந்தடி உரத்தில்
காம்பௌண்டு முளைத்திருந்தது. அதன் சுற்று முழுதும் காவியும் வெள்ளையுமாக வரிவரியாக இருந்தது. புதிதாக கிரில் கேட் போட்ட
கதவு முளைத்திருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் போட்டிருந்தார்கள்.. “எசக்கி கோயில்” என்ற தகரப்பலகையை காணவில்லை.. கிரில் கேட்டின் முகப்பில் “ஸ்ரீ இசக்கி அம்பாள்” என்று
எழுதியிருந்தது.. “இசக்கி” க்கும் “அம்பாளுக்கும்” நடுவே சமஸ்கிருத ஓம் போட்டிருந்தார்கள்.

“அப்பா கோயில இன்னும் நம்ம பூசாரித் தாத்தா தான் பார்த்துகிடறாரா?” என்று கேட்டேன்

“இல்லடா அவரு செத்துப் போயி தான் நாலு வருசமாகுதே.. இப்ப ஒரு குருக்கள் தான் பார்த்துக்கிட்டிருக்கார்”

“அந்தாளு பாப்பானா?”

“டேய் மரியாதையா பேசுடா.. அவரு குருக்கள்டா”

“குடுமி வச்சி பூணூல் போட்டிருக்கானா சொல்லு?”

“ஆமா அவங்க அய்யருமாருங்கடா..”

“அப்ப அவன் பாப்பான் தான்”

“நீ திருந்தவே மாட்டே..உனக்கு நாக்குல சனி”

“பார்த்தியா.. பாப்பான் வந்ததும் உன் சாமி பேரையே மாத்திட்டான் பாரு..”

“பேர்ல என்னடா இருக்கு..”

“பேர்ல தான் எல்லாமே இருக்கு.. முன்ன சாமி அதும் பாட்டுக்கு ரோட்டோ ரத்துல ஒக்காந்திருந்ததா? போற வர்ற எவன் வேணுமின்னாலும் கும்பிடலாம்.. தொட்டு கூட பாக்கலாம்..
ஆனா இப்ப பாத்தியா உனக்கும் சாமிக்கும் நடுவால இவன் வந்துட்டானில்லே? நம்ம தாத்தா தானே இந்த சாமிய இங்கே வச்சி கீத்துக் கொட்டாய் போட்டாரு.. இப்ப என்னாடான்னா
நீயே மூணாவதாள் மாதிரி வெளியே நின்னு அந்தாளுக்காக காத்துக்கிட்டிருக்கே. உள்ள என்ன பேங்கா நடக்குது? இதுக்கெதுக்கு கதவெல்லா? உனக்கு சாமிக்கும் நடுவாலே வர
இந்தாளு எதுக்கு?”

அப்போதைக்கு அவரிடம் இருந்து பேச்சேயில்லை.. வேண்டுதல் முடிந்து ஊருக்கும் வந்து விட்டோ ம். நேற்று போனில் கூப்பிட்டு கதவு கிரில் கேட்டெல்லாம் எடுத்து விடச்
சொல்லிவிட்டதாக சொன்னார். “குருக்களை” பத்திவிடச் சொல்லியிருக்கிறேன்.. பார்க்கலாமென்றிருக்கிறார்.

ஆகஸ்ட் 26, 2008 பதிந்தவர் kaargipages | culture | | 2 மறுமொழிகள்

கண்ணாடித் திரை

அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.

“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.

“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.

“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.

“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப்  போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.

“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..

“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.

“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”

மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..

“டேய் சேவ் பண்ணிக்கடா”

“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”

“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,

“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்..  டோர் நெம்பர் 204″ நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.

எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.

வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை        தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது - இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.

பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் - ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’

எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..

‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.

************************************************************************************************************
“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்

“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு - அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம்.  ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.

அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு - “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.

 எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.

இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது -
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். 

எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்..  இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.

“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”

“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”

“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”

ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?

*************************************************************************************************************
டோர் நெம்பர் 204.

உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.

அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.

“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.

“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”

“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.

“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..

“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.

“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.

“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.

“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா”    என்றவாறே எழுந்து விட்டாள்.

“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம்  திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,

“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.

விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”

“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.

“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”

“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.

“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.

இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்

“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”

“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.

‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.

ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் - கைகளில் காபிக் கோப்பைகளோடு.

காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.

ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.

“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்

“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.

“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.

நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது. 

விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை - கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை - மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ..  மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..  

சட்டென்று விழிப்பு வந்தது - தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!

 

 

மே 21, 2008 பதிந்தவர் kaargipages | culture, short story | | 3 மறுமொழிகள்

ஊமைப் பட்டாசுகள்!

“ஹம்ப்க்” ஒரே தம்மில் லாவகமாய் அந்த வெங்காய மூட்டையை ஏற்றிக் கொடுத்தான் துரை.

அது தாராபுரத்தின் ஒரு சின்ன காய்காறிச் சந்தை. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வரும் வெங்காயமும் தக்காளியும் தரம் பிரிக்கப்பட்டு சென்னையின் பெரிய சந்தை ஒன்றுக்கு லாரிகளில் லோடடிப்பார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அது. பண்டிகை நாளுக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது சந்தை. போன வருடம் இதே நாளில் எள்ளுப் போட்டால் கீழே என்னையாகி விழும் கூட்ட நெறிசல் இருந்தது துரையின் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.

“ஐய்யே.. கொஞ்சம் மெதுவாத்தான் தாயேன்… ஸ்லிப்பாவுதுபா…” வழுக்கிய ஒரு முனையை அட்ஜஸ் செய்து மேலே தூக்கிக் கொண்டே சொன்னார் பெரிசு.

பெரிசுக்கு என்ன வயதென்றே எவராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அனேகமாக இந்த சந்தை செயல்பட ஆரம்பித்த துவக்க நாட்களிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். பெயர் கூட இன்னதென்று எவருக்கும் தெரியாது - அதைப்பற்றி எவரும் கவலைப்பட்டது கூட கிடையாது - எல்லோருக்கும் அவர் “பெருசு” தான். சந்தை அடைந்த பின் ரோட்டின் எதிர்ப்புரத்தில் இருக்கும் ராயப்பன் டீக்கடையின் திண்ணை தான் பெரிசின் ஜாகை. பச்சைக் கலரில் ஒன்றும் நீலக்கலரில் ஒன்றுமாக இரண்டு முண்டா பனியன்கள் உண்டு அவரிடம். மிகக் கூர்மையாக கவனித்தால் தான் அதன் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். பெரிசுக்கு பேச்சுக் கூட்டாளி துரை தான். வேறு எவரிடமும் அவர் அனாவசியமாகப் பேசி யாரும் கவனித்ததே இல்லை.

“என்னாங்கடா அங்க பேச்சு? எத்தினி மூட்டைய ஏத்திருக்கீங்க?” இருபதுகளின் துவக்கத்தில் இருந்த செட்டியார் மகன் முப்பதுகளின் இறுதியில் இருந்த துரையையும் பெரிசையும் அதட்டல் குரலில் கேட்டுக் கொண்டே மண்டியில் இருந்து வெளியே வந்தான். ஆட்காட்டி விரலை அடையாளமாய்ச் சொருகி ஒரு குமுதத்தைக் கைவிரல்களில் பற்றியிருந்தான். நாளைய ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் புக் பண்ண போக முடியாமல் நாற்றம் பிடித்த வெங்காய மண்டிக்குள் திணித்து விட்டு திருப்பதிக்கு சேத்ராடனம் கிளம்பி விட்ட அப்பனின் மேலான எரிச்சல் மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. உழைப்பேயறியாத ஊளைச் சதை அல்லைகளில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெயில்படாத தேகத்தில் பரவலாக ஒரு மினுமினுப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

“நூத்தம்பது மூட்ட ஆச்சுது மொதலாளி; இன்னும் ஒரு அறுபது தேறும்” பெரிசு பதில் சொல்லவில்லை.

“ஜல்தியா ஏத்துங்கடா.. மெட்றாசுல இருந்து போன் வருது.. வண்டிய அனுப்பனும்ல..”

“செரி மொதலாளி ஒரு டீயப் போட்டுட்டு வந்துடறோம்..” துரையின் பதிலுக்கு செட்டியார் மகன் மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே டேபிளுக்குத் திரும்பினான். ஆட்காட்டி விரல்கொண்டு அடையாளம் வைத்திருந்த குமுதத்தின் நடுப்பக்கத்தை திருப்பிக் கொண்டே ப்ளாஸ்டிக் வலைச் சேரில் சாய்ந்தான்.

துரையும் பெரிசும் ரோட்டைக் கடப்பதைக் கண்ட ராயப்பன் இரண்டு கண்ணாடித் தம்ளர்களை வென்னீரில் ஒரு அலாவு அலாவி பாய்லரின் பைப் முன்பு வைத்தான்.. “ஆத்தாமப் போடு ராயப்பா.. அப்புடியே சின்னக்கட்டு யோகி பீடி ஒன்னு” என்ற துரை இரண்டு போண்டாவை எடுத்து ஒன்றை பெரிசின் கையில் திணித்தான்.

“தொரை.. அறுபது மூட்டைக்கு இது காணுமா..? சாயந்திரமா மேட்டுப்பாளையத்திலேர்ந்து தக்காளி டெம்போ வேற வருது..”

ராயப்பனின் அழுக்கடைந்த எப்.எம் ரேடியோ கரகரப்பாக, “இது ஒன் ஜீரோ பைவ் பாய்ண்ட் நைன் சூரியன் எப்.எம். நீங்கள் கேட்டிக் கொண்டிருப்பது நேயர் விருப்பம். நேரமிப்போது இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…..” என்றபடியே உளரலைத் தொடர்ந்து கொண்டே போனது..

“க