கார்க்கியின் பார்வையில்

மீண்டும் வருவோம்…!

பேரிரைச்சலாய் முன்னேறும்..
மௌனமாய்த் தாக்கித் திரும்பும்..

ஒரே வீச்சில் புவிப்பரப்பைக்
கழுவிடத் துடிக்கும் தவிப்போடு
மீண்டும் பேரிரைச்சலாய் முன்னேறும்..

அந்த அலைகள் ஓய்ந்ததேயில்லை..
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
கரைகள் தூய்மை கொள்ளும் வரையில்
அதன் தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்..
கரையின் கசடுகளைத் தன்னுள்
அமிழ்த்தி அமைதியுறும் வரையில்

அந்த அமைதியின் ஆழத்தில்
மௌனமாய் துயில் கொண்டிருக்கும்
கசடுகளின் வரலாறு அறியாத கரைகள்
பின்வாங்கிச் செல்லும் அலைகளைக் கண்டு
ஏளமாய்ச் சிரித்தாலும்
அலைகள் மீண்டும் எழும் – முன்னிலும் வலுவாய்..

இதோ எம்மைக் கண்டு சிரிக்கின்றன சூலங்கள் -
அந்த கரைகளைப் போலவே..
தெற்கில் படரும் சூலத்தின் காவி நிழல் – கரைகளை
நிறைக்கும் கசடுகளாய்ச் சூழ்கிறது..

நாங்கள் அலைகளாய் எழுவோம்
கடைசிச் சூலம் வரையில் தின்று செரிப்போம்..

ஐரோப்பாவை ஆட்டுவித்த அந்த பூதம் இன்னும்
உறங்கவில்லை

நாங்கள் வருவோம்
மீண்டும் வருவோம் – முன்னிலும் வலுவாய்
முன்னிலும் வேகமாய்..
எமக்கு ஓய்வே கிடையாது…

மே 26, 2008 பதிந்தவர் kaargipages | politics, கவிதை | | 3 மறுமொழிகள்

கொல்லும் இருள்

இது மௌனமா இல்லை மரணமா
என்று தெரியவில்லை.
வார்த்தைகள் மட்டும் தான் செத்துப் போனதா
இல்லை செயல்கள் கூட செத்துப் போனதா
என்றும் புரியவில்லை..

வயிற்றில் சுரக்கும் அமிலம் எரிக்க சோறில்லாமல்
இங்கே குடல்கள் எரிந்து சாம்பலாகிறது..
கொலைகளின் வெற்றிப் பெருமிதம்
முகத்தில் அறைந்த நரகலாய் நாறுகிறது..
சுவர்களற்ற வெளியில் குளிரும் கூட அலைகிறது
உயிர்கள் தேடி..
குளிரின் ஓய்வுக்குக் காத்திருக்கிறான்
சூரியன்..
விதைத்த விதைகளோ தாம்புக்கயிறுகளாய் முளைக்கிறது
அறுத்ததை விற்றால் பூச்சி மருந்தே மிஞ்சுகிறது

உண்டது மட்டுமல்ல கண்டதும் கூட மலமாய்க்
கழிகிறது..
தெரிக்கும் இரத்தத்துளிகளில் ஓவிய நளினம்
தேடும் கண்கள்..
ஓலங்களின் ஒலியில் சிம்பொனி தேடும்
காதுகள்..
பிணங்களின் நாற்றத்துக்குப் பழகிப் போன
நாசிகள்..

உடல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது..
உணர்வுகள்…..?

டிசம்பர் 27, 2007 பதிந்தவர் kaargipages | கவிதை | | 3 மறுமொழிகள்