நான் கடவுள் விமர்சனம்
இணைய புத்திஜீவிகள் எல்லோரும் இந்தப் படத்தைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் “நமக்குத்தான் ஒருவேளை புரியலையோ” என்ற சந்தேகத்தில் “நல்லாத்தான் இருக்கு…….ஆனா….” என்று மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நான் பாலா படங்களைப் பார்ப்பதில்லை; நிறைய செயற்கைத்தனம் இருக்கும் என்பது ஒரு காரணம். இந்த முறை ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் நன்பனோடு பார்க்கப் போனேன்.
முதலில் ருத்ரன். காசி மாநகரத்தைச் சேர்ந்த அகோரி – அதாவது நமக்குப் புரியும் மொழியில், பினந்தின்னி சாமியார். இவனை காசியில் ஜாதக தோஷங்களுக்காக காசியில் நேர்ந்து விட்டு விட்ட தகப்பன் தேடிவரும் காட்சியில் தான் படம் ஆரம்பமாகிறது. ஒத்தாசைக்கு வரும் காசி நகர பார்ப்பான் ஜாதகக் காரணங்களுக்காக பிள்ளையை காசியில் விட்டு விட்டதாக தகப்பன் சொன்னதும் பொங்கியெழுகிறார். இந்தியில் திட்டுகிறார்; நம்மாளு காலில் விழுந்ததும் ‘சரி சரி பார்க்கலாம் என்கிறார்’ – எழுத்துப் பிச்சர் ஒடும் போது
ஜெயமோகன் பெயரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
படம் நெடுக இந்த நபரை எல்லா கதாபாத்திரங்களும் ஒருவித மிரட்சியுடன் பார்க்கிறார்கள். அட, நம்ம போலீசும் கோர்ட்டும் கூட இவனிடம் பம்முகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்குத் தெரிந்து எலும்பு வீசுபவனிடம் மட்டும் தான் இவர்கள் பம்முவார்கள். ஊருக்கு வந்து சேரும் பினந்தின்னிச் சாமி அங்கே கோயிலில் பிச்சையெடுக்கும் கூட்டம் ஒண்டும் ஒரு இடத்துக்குப் பக்கத்தில் தனது ஜாகையை அமைத்துக் கொள்கிறது. அங்கே இருக்கும் லோக்கல் சாமிகள் – போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாக சொல்கிறான் ஒரு சாமி – வலித்துக் கொடுத்த கஞ்சாவைக் கூட தொடாமல் சுத்தபத்தமாக தனி கஞ்சா அடிக்கும் அளவுக்கு காசியைச் சேர்ந்த அகோரி தன் புனிதத் தன்மையை தமிழ் நாட்டில் காப்பாற்றிக்
கொள்கிறான். கடுமையான டயட் கண்ட்ரோலில் இருக்கும் அகோரி, நரமாமிசம் தவிர்த்து வேறு அசுத்த உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை.
அடிக்கடி சமஸ்கிருதத்தில் “அஹம் ப்ரம்ஹாஸ்மி…” என்று வானத்தைப் பார்த்துக் கூவிக் கொண்டிருப்பது இந்த நபரின் முக்கிய வேலைகளில் ஒன்று. ம்ம்ம்ம்….. நியாயமாகப் பார்த்தால்
இந்த ருத்ரனை அழைத்து வந்து – முரண்டு பிடித்தால் பொடனியில் ஒன்று போட்டாவது – மனநல மருத்துவரிடம் சேர்த்திருக்க வேண்டும். தெருவில் இப்படி பரிதாபத்துக்குரிய ஒருத்தனைப் பார்த்தால் நாம் அப்படித்தான் நினைப்போம்; ஆனால் படத்தில் வரும் இந்த மனநோயாளியை எல்லோரும் ரசிக்கிறார்கள்.
அடுத்து பிச்சைக்காரர்கள் – நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் மிருகங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் தானே? அதே போன்ற ஒரு ரசனையைத் தான் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் / குரூபிகள் தமக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் ரசிகக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.
பார்வையாளன் இவர்களின் உலகத்தை ரசனையோடு பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து அந்தக் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தில் உருவாகக் காரணமான சமூக அமைப்புமுறையின் மேல் எழ வேண்டிய கோபம் முதலாளி தாண்டவனைத் தாண்ட மாட்டேனென்கிறது. தாண்டவனின் கையாள் முருகன் பிச்சைக்காரர்களிடம் நெகிழும் இடங்களில் பார்வையாளனும் நெகிழ்கிறான்; பிச்சைக்காரர்களை “உருப்படிகள்” என்று விளிப்பதைக் கேட்டு சிரிக்கிறான். நயன்தாரா போல் வேடமிட்டு ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து வெட்கப்படுகிறான். இப்படி தம்மை நெகிழவும் சிரிக்கவும் வைத்த அந்த பிச்சைக்காரர்களில் ஒருவனான அங்கவீனமான சிறுவனை ஒரு மலையாள “முதலாளி” தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகு தான் பார்வையாளன் கோபப்படுகிறான். அந்த மக்களை புறக்கனித்து அவர்களுக்கு ஒரு
கொடூரமான வாழ்க்கையைப் பரிசளித்திருக்கும் இந்த சமூக அமைப்பின் மேலோ, இந்த அயோக்கியத்தனங்களுக்கு வால் பிடித்து நிற்கும் போலீசு உள்ளிட்ட அரசு அமைப்பின் மேலோ பாய்ந்திருக்க வேண்டிய கோபம், மலையாள முதலாளியையும் தாண்டவனையும் அகோரி ருத்ரன் “தண்டிப்பதன்” மூலன் சாந்தமடைகிறது.
படத்தில் பாடிப்பிச்சையெடுக்கும் குருட்டுப் பிச்சைக்காரி கதாபாத்திரத்திம் முதலில் ஒரு முதலாளியிடன் இருந்து அடுத்து இன்னொரு முதலாளி கையில் வந்து சேர்கிறாள். முகம்
கோரமான இன்னொரு முதலாளியிடம் காமுகியாய் அனுப்ப புது முதலாளி முடிவெடுக்க இவள் மறுக்கிறாள். அதன் காரணமாய் அவன் இவள் முகத்தை சுவற்றில் தேய்த்து கோரப்படுத்தி விடுகிறான். முகம் கோரப்பட்ட இவள் பினந்தின்னிச் சாமியிடம் வந்து மரண வரம் கேட்க, இவரும் சந்தோஷமாய் அதைக் கொடுத்தருளுகிறார்.
மொத்தம் மூன்று கொலைகள் ஆயிற்றா? அடுத்த காட்சியில் நியாயமாக கம்பியென்னத்தான் போயிருக்க வேண்டும்… ஆனால் நாம்மாளு காசியிலிருந்து ஸ்பெசலாய் எழுந்தருளி இருக்கும் அகோரியல்லவா? எனவே அடுத்த காட்சியில் கூலாக காசிக்கே போய்விடுகிறார். கொலைக்கு ஒன்று வீதம் மூன்று முறை கங்கையில் முங்கியெழுகிறார் – பின்னனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க தன் குருவை நோக்கி கம்பீரமாய் நடந்து வர, காட்சி உறைகிறது – பார்வையாளர்கள் பிச்சைக்காரப் பயல்களை மறந்து விட்டு சந்தோஷமாய் மனநிறைவோடு எழுந்து வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.
அகோரிகள், தாந்திரிகர்கள், காபாலிகர்கள், காலபைரவர்கள் என்பதெல்லாம் இந்து மதத்தின் தீவிர மனநோயாளிகளால் பின்பற்றப்படும் ‘கல்ட்’கள் (cult). இதெல்லாம் தடைசெய்யப்பட
வேண்டிய பைத்தியக்காரத்தனங்கள்.ஆனால் இந்தப் படமோ அவர்கள் மேல் ஒரு வித மரியாதையை / பிரமிப்பை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது. கண் பார்வையற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க இரண்டு மூன்று ரவுடிகள் தூக்கிச் செல்ல முயன்றால், அங்கே இருக்கும் எல்லோரும் சேர்ந்து ‘பொது மாத்து’ கொடுத்திருக்க வேண்டும் – எங்கூர்ல எவனாவது இப்படி செஞ்சிருந்தான்னா ஊரே சேர்ந்து கிழிச்சிருப்பாங்க- இங்கே என்னடாவென்றால், எல்லோரும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு மட்டும் அந்நியன் விக்ரம் போல பறந்து பறந்து அடிக்கிறார். ஏட்டைய்யா மரியாதையாக செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு நெருங்குகிறார் – எதுக்கு? – கஞ்சாவைக் கொடுக்க!
படம் நெடுக ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கடவுளைச் செல்லமாக பகடி செய்து கொள்கிறார்கள். ஓரிடத்தில் கிருஷ்ணனை “உள்பாவாடைக் களவானி” என்கிறான் ஒரு சிறுவன். உச்சமாக ஒரு கிழவர் கடவுளைத் “தேவிடியாப்பய” என்றும் சொல்கிறார்… இதையெல்லாம் கொண்டு இந்த படம் இந்துத்துவத்தை எதிர்த்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. பருண்மையாகப் பார்க்கையில் பார்வையாளர்கள் எல்லோருடைய ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளானா “பயங்கர” வில்லன் தாண்டவனை தண்டிப்பது ஒரு அகோரி தான்; எனவே திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அகோரியின் மேல் – இந்த வகை லூசுத்தனங்களை அனுமதித்திருக்கும் இந்து மதத்தின் மேல் – அருவெறுப்பு தோன்றுவதற்குப் பதில்
பார்வையாளனுக்கு ஆதர்சமும், பிரமிப்பும், மரியாதையும் தான் தோன்றுகிறது.
தினமலரின் பார்வையில் லோக்கல் சாமியார்கள் எப்படித்தெரிவார்களோ அப்படித்தான் படத்தில் வரும் லோக்கல் சாமியார்களும் ( கஞ்சா குடிக்கி சாமிகளாகட்டும் கையும் காலும்
இல்லாத சாமியாகட்டும்) காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே தினமலரின் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரி எப்படித் தெரிவானோ அப்படித்தான் அகோரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான்.
அப்போ பிச்சைக்காரர்கள்? – அவர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு எண்டெர்டெயின்மெண்ட்! மிருகங்களை வேடிக்கை பார்த்து ரசிப்பதைப் போல பார்த்து ரசிக்கிறார்கள். மீண்டும் வடநாட்டில் இருந்து ஒரு பினந்தின்னிச் சாமி எழுந்தருள அவர்கள் பிரார்த்திக்க வேண்டியது தான்!! அந்த மீசைக்கார போலீசு இன்ஸ்பெக்டர் என்னவாயிருப்பார்? அவர் இன்னொரு தாண்டவனை உருவாக்குவதில் இப்போ பிஸியாக இருப்பாராயிருக்கும்.
படம் விட்டு வெளியே வரும் போது நன்பனிடம் கேட்டேன் -
“ஏண்டா.. அந்தப் பிச்சைக்காரங்களைப் பார்த்து அப்படி கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருந்தியே…?”
“ஆமாண்டா… வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கனும் அப்பத்தாண்டா வாழ்க்கைய ரசிக்க முடியும்”
“இல்ல… அந்தப் பிச்சைக்காரர்களையும், குரூபிகளையும் இந்த சமூகம் புறக்கனிச்சிருக்கே, அதைப் பத்தி என்ன நினைக்கிறே?”
“என்ன பன்றது… பாவந்தான்… ஆனா, அது அவங்க விதி. நம்மாள முடிஞ்ச அஞ்சோ பத்தோ போடத்தான் நம்மாள முடியும். வேறென்னத்த செய்யச் சொல்றே?”
“அப்ப அந்த தாண்டவனைப் போல மாஃபியாக்கள்?”
“அதான் சாமியே தண்டனை கொடுத்திச்சில்லே?”
இயக்குனர் பாலா நிச்சயமாக ஜெயித்து விட்டார் என்று புரிந்தது.
மற்றபடி நல்ல பின்னனி இசை, புத்திசாலித்தனமான கேமராக் கோணங்கள், அருமையான ஒளிப்பதிவு…. blah, blah, blah, blah, blah….. அவ்வளவுதான்
- கார்க்கி
இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.
சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!
ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்
மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்!
கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.
இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!
இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.
இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.
இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!
கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.
இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது. பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.
கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.
ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!
-
அண்மை
- உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!
- மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!
- நான் கடவுள் விமர்சனம்
- இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
- அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
- பார்ப்பனியத்தின் இருப்பு!!
- ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!
- சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!
- முதலாளித்துவம் நடத்தும் பாடம்
- அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
- ஒரு தேவதையின் மரணம்…!
- மன்மோகன் சிங் என்னும் பொய்யர்
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- செப்டம்பர் 2009 (1)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (2)
- டிசம்பர் 2008 (1)
- நவம்பர் 2008 (2)
- அக்டோபர் 2008 (3)
- செப்டம்பர் 2008 (2)
- ஆகஸ்ட் 2008 (1)
- மே 2008 (5)
- டிசம்பர் 2007 (3)
- நவம்பர் 2007 (2)
- அக்டோபர் 2007 (8)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS